காட்மாண்டு நகரத்திற்கு முன்பாக நேபாள நாட்டின் தலைநகராக இருந்த இடம் தான் அரண்மனை பக்தபூர் சதுக்கம். காட்மாண்டுவில் இருந்து கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரத்தை பட்கான் என்றும் அழைப்பார்கள். பக்தபூர் அரண்மனை தவுமதி சதுக்கம் தத்தாதிரேயர் சதுக்கம் மட்பாண்ட சதுக்கம் ஆகிய நான்கு சதுக்கங்களை இணைத்ததே பக்தபூர் நகர சதுக்கம் ஆகும். இந்த நகரில் பட்கோன் மன்னனின் ஆசைப்படி அரண்மனையின் வலது புறத்தில் பசுபதி நாதரின் கோவிலை போற்றும் சிறிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறு பசுபதிநாதர் கோவில் என்று அழைக்கிறார்கள். இந்த இடத்தில் பாட்சாலா தேவிக்கு ரஞ்சித் மல்லா என்ற மன்னனால் 1737 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அழகிய சிற்பங்களுடன் கூடிய கற்கோவில் இருந்தது. இந்த ஆலயம் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
நேபாள நாட்டில் திபெத்திய பௌத்தர்களின் சார்பில் பெரிய கோள வடிவத்தில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவு தூண் இதுவாகும் பௌத்தநாத் என்று அழைக்கப்படும். இந்த மடாலயம் கிபி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிழக்கில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இமயமலை அடிவாரத்தில் இந்த மடாலய நினைவு தூண் இருக்கிறது. வானவளாவிய உயரத்தில் காணப்படும் இப்பழமையான பௌத்தநாத் மடாலயத்தின் நினைவு தூண் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
லிச்சாவி குடியரசின் மன்னர் சிவதேவன் இந்த பௌத்தநாத் மடாலயத்தை நிறுவியதாக சொல்லப்படுகிறது. நேபாள மன்னர் மானதேவன் ஆட்சிக் காலத்தில் கட்டியதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். கிபி 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16வது நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்விடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மன்னர் அம்சு வர்மாவின் எலும்புகளை தோண்டி எடுக்கும்போது இந்த பௌத்தநாத் மடாலயத்தை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவின் கிழக்கு பகுதியில் பாயும் பாக்மதி ஆற்றின் கரையில் இருக்கிறது பசுபதிநாதர் கோவில். சிவபெருமானுக்கு அமைந்த இந்த ஆலயம் உலகின் மிகப்பெரிய இந்து ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயங்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இந்துக்கள் அல்லாதவர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையில் இருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்துக்களாக இருந்தாலும் கூட தோல் ஆடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.
நேபாள நாட்டின் கபில வஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனித யாத்திரை தலம்தான் லுங்கிணி. இது நேபாள இந்திய எல்லைக்கடியில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயா தேவி சித்தார்த்தன் என்னும் கௌதம புத்தனை பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தை தோற்றுவித்தவர் ஆவார். புத்த மதத்தினை பெருமளவில் கவரும் ஐந்து புனித யாத்திரை தலங்களுள் லும்பினியும் ஒன்றாகும். ஏனைய நான்கும் புத்தகயா, வைஷாலி, குஷி, நகர்சாரநாத், என்பனவாகும் புத்தர் பிறந்த இடமான இந்த லும்பினி இமயமலை அடிவாரத்தில் உள்ளது.
லும்பினியில் மாயாதேவி கோவில் உட்பட பல கோவில்களும் புஷ்கரணி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இந்த ஏரியில்தான் புத்தரைப் பெற்றெடுக்கும் முன் மாயாதேவி நீராடி வந்ததாக சொல்லப்படுகிறது. புத்தரின் முதல் நீராடலும் இந்த ஏரியில்தான் நடைபெற்றதாக கருதப்படுகிறது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு மேற்கே உள்ள ஒரு சிறிய மலை மீது ஸ்தூபியுடன் அமைந்துதான் சுயம்பு நாதர்கோவில். இது பழமையான பௌத்த கோவிலாவும் இந்து மற்றும் பௌத்த சமயத்தவர்களின் புனிதமான மலைக்கோவிலாகவும் இருக்கிறது. சுயம்பு நகர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் துணையும் பல கோவில்களையும் கொண்டதாக இருக்கிறது. அவற்றுள் பல லிச்சாவி அரசு வம்சத்தினராக எழுப்பப்பட்டதாகும். இந்த வளாகத்தில் புத்தவிகாரம், தூண் அருங்காட்சியக நூலகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. சுயம்பு நாதர் விகாரத்தில் அமைந்த தூணில் நான்கு பக்கத்திலும் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளன. சுயம்பு நாதர் கோவிலை குரங்குகளின் கோவில் என்றும் அழைப்பார்கள். வடமேற்கு பகுதியில் ஆண்டு முழுவதும் குரங்குகள் வசிப்பதால் இந்த பெயர் வந்தது. இங்குள்ள குரங்குகளை புனிதமான விலங்காக பக்தர்கள் கருதுகின்றனர்.
நேபாளத்தில் பக்தபூர் மாவட்டம் தவளகிரி மலைப் பகுதியில் இருக்கிறது சங்கு என்ற கிராமம். இங்கு உள்ள பழமையான கோவில்தான் சங்கு நாராயணர் கோவில். இது காட்மாண்டு நகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரில் இருந்து வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஆலயம் பெருமாளுக்காக கட்டப்பட்டதாகும். நேபாள நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களில் இது முக்கியமானது. இந்த ஆலயத்தின் அருகில் மனோகரா நதி பாய்கிறது.
மலை உச்சியில் அமைந்த சங்கு நாராயணன் கோவிலை சுற்றிலும் உள்ள காடுகளில் செண்பக மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இக்கோவிலுக்கு செல்லும் வழியில் கல்லால் ஆன குடிநீர் குழாய் லிச்சாவியர்கள் காலத்திலிருந்தே இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நேபாள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் பதான். இது காட்மாண்டில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் மையமாக இந்த நகரம் திகழ்கிறது. இந்த நகரம் திருவிழாக்களுக்கும் விருந்தோம்பலுக்கும் பண்டைய நூண்கலைகளுக்கும் பெயர் பெற்றது. இது நேபாள நாட்டு கட்டிடப் பணியில் கட்டப்பட்டதாகும். இவ்வரண்மனை சதுக்கத்தின் தரையானது செங்கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பல கோவில்களும் கலை சிற்பங்களும் இருக்கின்றன. கோவில்களின் நுழைவு வாசல் அனைத்தும் அரண்மனையை நோக்கி கிழக்குமுகமாகவே காணப்படுகின்றன. இந்த அரண்மனை சதுக்கத்தில் கிருஷ்ணர் கோவில் பீமன் கோவில் விசுவநாதர் கோவில துளஜா பவனேரி அம்மன் கோவில் கேசவன் நாராயணர் கோவில் போன்றவை அமைந்திருக்கின்றன.