வீட்டில் பாம்புகளுக்கு தனி அறை.. குழந்தைகள் பாம்புடன் விளையாடும் இந்தியாவின் விசித்திர கிராமம்!

மகாராஷ்டிராவில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் மனிதர்களும் ஒரே வீட்டில் எந்தவித பயமுமின்றி நண்பர்களாக வாழ்ந்து வரும் அதிசயமான வாழ்க்கை முறையைப் பற்றி விரிவாகக் காண்போம்.
Shetphal snake village
Shetphal snake village
Updated on

Shetphal Snake Village: பொதுவாக பாம்பு எங்காவது ஒரு சிறிய பாம்பைக் கண்டால் கூட ஊரையே கூட்டி அதை அடித்து விரட்டுவது தான் மனிதர்களின் வழக்கம். ஆனால், கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் மனிதர்களும் ஒரே வீட்டில் நண்பர்களைப் போல ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாகத் தூங்கும் ஒரு விசித்திரமான கிராமம் நமது இந்தியாவில் இருக்கிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஷெட்பால் என்ற இந்த கிராமம், உலக அளவில் 'இந்தியாவின் பாம்பு கிராமம்' (Snake Village of India) என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. மனிதர்களுக்கும் ஊர்வன உயிரினங்களுக்கும் இடையே உள்ள இந்த நம்பமுடியாத பிணைப்பைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாம்புகளுக்கான தேவஸ்தானம்!

இந்த கிராமத்திற்குள் நீங்கள் முதல்முறையாக நுழைந்தால், அங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள். வீட்டின் ஹால், சமையலறை மற்றும் படுக்கையறை என அனைத்து இடங்களிலும் பாம்புகள் மிகச் சாதாரணமாக ஊர்ந்து செல்வதைப் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் எந்தவித அச்சமும் இன்றி பெரிய ராஜநாகங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். 

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் ஓய்வெடுப்பதற்காகவே 'தேவஸ்தானம்' (Devasthanam) என்ற ஒரு சிறப்பு இடத்தை மக்கள் செங்கற்களால் கட்டி வைத்துள்ளனர். இந்த பாம்புகளை யாரும் செல்லப்பிராணிகள் போலக் கூண்டில் அடைத்து வளர்ப்பதில்லை. அவை வீடுகள், கோயில்கள், பள்ளிக்கூடங்கள் என ஊர் முழுவதும் தங்களின் இஷ்டப்படி மிகவும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன.

இதையும் படியுங்கள்:
வீட்டை விட்டு பல்லிகள் மொத்தமாக காணாமல் போனால் நடக்கும் விபரீதம் இதுதான்!
Shetphal snake village

மக்களின் நம்பிக்கை!

இந்த விசித்திரமான வாழ்க்கை முறைக்கு மக்களின் ஆழமான இறை நம்பிக்கையே முக்கிய காரணமாகும். இந்த ஊர் மக்கள் பாம்புகளைச் சிவபெருமான் மற்றும் நாக தேவதையின் அம்சமாகக் கருதி பயபக்தியுடன் வழிபடுகிறார்கள். சோலாபூர் மாவட்டத்தின் வறண்ட தட்பவெப்ப நிலை, ஊர்வன உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இயற்கைச் சூழலை அமைத்துக் கொடுத்துள்ளது. 

இங்கே  ராஜநாகங்கள் மட்டுமின்றி, கட்டுவிரியன், மலைப்பாம்பு, சாரைப்பாம்பு மற்றும் தண்ணீர் பாம்புகள் எனப் பல வகையான இனங்களைக் காண முடியும். ஒவ்வொரு வருடமும் நாக பஞ்சமி திருவிழாவை இந்த மக்கள் மிக விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். இவ்வளவு பாம்புகள் இருந்தாலும், இதுவரை இங்குப் பாம்புகள் கடித்து எந்த ஒரு ஆபத்தான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியத்தின் உச்சமாகும்.

பயண வழிகாட்டி!

இந்தக் கிராமத்தை நேரில் பார்க்க நீங்கள் ஆசைப்பட்டால் உங்கள் பயணத்தை மிக எளிதாகத் திட்டமிடலாம். விமானம் மூலம் செல்பவர்கள் புனே விமான நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து வாடகைக் கார்கள் மூலம் கிராமத்திற்குச் செல்லலாம். ரயிலில் செல்பவர்களுக்குச் சோலாபூர் ரயில் நிலையம் மிக அருகில் வசதியாக உள்ளது. புனேயில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்தால் சுமார் நான்கு முதல் 5 மணி நேர இயற்கை எழில் கொஞ்சும் பயணத்தில் இந்த ஊரை அடைந்துவிடலாம்.

இதையும் படியுங்கள்:
பாம்புகள் நாக்கை நீட்டுவதன் திடுக்கிடும் ரகசியம்... இது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Shetphal snake village

உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான இடங்களைத் தேடிச் செல்லும் பயணிகளுக்கும், வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் ஷெட்பால் கிராமம் ஒரு மிகச்சிறந்த கனவு உலகமாகும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான இந்த அமைதியான பந்தம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இருப்பினும், இங்குள்ள பாம்புகள் அனைத்தும் காட்டு உயிரினங்கள் என்பதைச் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 

logo
Kalki Online
kalkionline.com