கோபிகளின் தலாவ்/கோபி தலாப் என்பது கோபிகைகளின் குளமாகும். இது துவாரகாவில் இருந்து 21 கிலோமீட்டர் மற்றும் நாகேஸ்வரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது வட்ட வடிவில் அமைந்த அழகான குளமாகும்.
சூரத்தை சேர்ந்த மாலிக் கோபி என்ற வணிகர் பதினாராம் நூற்றாண்டில் கட்டியது. கிருஷ்ணர் மற்றும் கோபியர்களின் புராணக் கதைகளுடன் தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க இடமான கோபி தலைவ்வை சென்று பார்த்தோம்.
துவாரகா சுற்றுப்பயணம் கோபி தலைவை பார்க்காமல் முழுமை அடையாது. அமைதியான சுற்றுப்புறம் மற்றும் புராணக் கதைகள் இந்த தலத்தை அலங்கரிக்கிறது.
ராசலீலா நடந்த இடமாகவும், கிருஷ்ணர் கோபியர்களை வசீகரித்த இடமாகவும் கூறப்படுகிறது. இந்த இடம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இங்கு மிகவும் மென்மையான மண் மஞ்சள் நிறத்தை கொண்டுள்ளது. புராணத்தின் படி கிருஷ்ணர் பௌமாசுரனை கொன்று அவனிடத்தில் சிறையிருந்த 16,000 கோபிகளை விடுவித்தார் என்றுள்ளது.
ராச லீலை என்பதற்கு அழகுணர்ச்சியுடன் ஆடுவது என்று பொருள். இரவு நேரத்தில் பாலகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையைக் கேட்டு மயங்கிய கோபியர்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியே வந்து, பாலகிருஷ்ணருடன் தனிமையில் இரவு முழுவதும் ராசலீலை நடனத்தில் ஈடுபடுவர். இன்னொரு குறிப்பின்படி சிறுவயதில் கிருஷ்ணர் இங்கு கோபிகைகளுடன் பௌர்ணமி இரவில் ராச லீலை புரிய வருவார் என்றுள்ளது.
பௌமாசுரன் என்ற அரக்கனின் அரண்மனையில் அடைப்பட்டிருந்த இளவரசிகளை விடுவித்த கிருஷ்ணர் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால் அங்கேயே பாறைகளாக மாறிவிட்டனராம். 16,000 கோபிகைகளின் உடல்கள் பாறைகளாக மாறிவிட்டதாகவும், அப்பாறைகள் மஞ்சள் நிறத்துடனும், வாசனையுடனும், நீரில் கரையும் தன்மையுடனும் இருக்கின்றன. அதனால்தான் அவை கோபி சந்தனம் என்று அழைக்கப்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.