குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை விட்டாச்சு. சென்னையில் உள்ள நீர் பூங்காக்களை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். அடிக்கிற வெயிலுக்கு இம்மாதிரி நீர் பூங்காக்களுக்கு சென்றால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது. சென்னையில் சிறந்த நீர் பூங்காக்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவை. சென்னையின் கடுமையான வெப்பத்திலிருந்து குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் புத்துணர்ச்சி ஊட்டக் கூடியது. இந்த நீர் பூங்காக்களில் பயன்படுத்தப்படும் நீர் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுகிறது மேலும் குளோரின் போன்ற பொதுவான கலவைகள் இருப்பதால் குழந்தைகள் தாராளமாக விளையாடி அனுபவிக்கலாம்.
1. கிஷ்கிந்தா: தாம்பரத்திற்கு அருகில் உள்ளது. இராமாயணத்தில் ஒரு சாம்ராஜ்யத்தின் பெயரிடப்பட்ட கிஷ்கிந்தா 120 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. விதவிதமான தாவரங்கள் மற்றும் நீரூற்றுகள், நீர் சவாரிகள், சிறுவர் தொடர்வண்டி போன்ற குழந்தைகளை கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் நீர்வீழ்ச்சிகள், ரோலர் கோஸ்டர்கள், சென்னை குற்றாலம், குழந்தைகள் மிகவும் விரும்பும் டாய் ட்ரெயின் போன்ற குழந்தைகளை ஈர்க்கக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.
2. MGM டிஸ்ஸி வேர்ல்ட்: கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ளது. 1200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஒரு அலை நீச்சல் குளம் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சின்ன குற்றாலம் எனும் செயற்கை அருவியும் குழந்தைகள் மிகவும் ரசிக்கும் இடமாக உள்ளது. இங்கு டிஸ்ஸி எக்ஸ்பிரஸ், வாட்டர் கோஸ்டர், நீர் விளையாட்டுகள், நீர் சவாரிகள் என குழந்தைகளை குதுகலப்படுத்தும் நிறைய விஷயங்கள் உள்ளன. இதுவும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கிறது.
3. குயின்ஸ்லாந்து: இது பூந்தமல்லியில் அமைந்துள்ள ஒரு பூங்காவாகும். 2003ல் திறக்கப்பட்ட 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர் பூங்கா இது. குடும்பத்துடன் உல்லாசமாக செல்வதற்கு ஏற்ற இடம். இங்கு நுழைவு கட்டணம் உண்டு. ஆனால் சவாரிகளுக்கு என்று தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இங்குள்ள சில தண்ணீர் விளையாட்டுக்கள் மதியம் 2 -5 வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த நீர் விளையாட்டுகளுக்கு தேவையான ஆடைகளும், ஆண் பெண்களுக்கு என தனித்தனியாக நீச்சல் குளங்களும் உள்ளன.
4. VIP யூனிவர்சல் கிங்டம்: மிகப் பெரிய தீம் பார்க் கம் வாட்டர் பார்க். இது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான நீர் பூங்காவாகும்.45 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.
5. Dash n Splash Water Park: பூந்தமல்லி அருகே அமைந்துள்ள இந்த நீர் பூங்கா அனைத்து நாட்களும் காலை 10 - 6 வரை திறந்திருக்கும். 21 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த டேஷ் என் ஸ்பிளாஷ் வாட்டர் பார்க் பூங்கா குழந்தைகள் விளையாட ஏற்ற மிகவும் அருமையான இடம். இந்த நீர் பூங்கா 1995 முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளை இம்மாதிரி நீர் பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று விளையாட விட்டு அவர்களை உற்சாகமாக சந்தோஷத்தில் திளைக்க வைப்பதுடன் நாமும் அவர்களுடன் சேர்ந்து இன்பமாக பொழுதை கழிக்கலாம்.