
தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் தொழில் நகரமாகவும் இருக்கும் கோவை மாவட்டம் வருடம் முழுவதும் இதமான கால நிலையை கொண்டிருக்கும். அதனால் கோவையை சுற்றி இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா இடங்கள் உள்ளன. அந்த வகையில் இந்த கோடை விடுமுறையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூப்பரான சுற்றுலாத்தலங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கொளுத்தும் கோடை வெயிலில் குளிர்ந்த கால நிலையை கூட்டம் இல்லாமல் ரசிக்க வேண்டும் என நினைப்பவர் களுக்கு ஏற்ற இடமாக வால்பாறை உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களும், மிதந்து செல்லும் மேகங்களும் குடும்பத்துடன் சுற்றுலாவை மகிழ்ச்சியாக அனுபவிக்க வைக்கும். பொள்ளாச்சியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாக 'ஆழியார் அணை' உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழவும், மனதை ரிலாக்ஸ் ஆக வைக்கவும் அணையில் பூங்கா உள்ளது. குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து பயணிக்க படகு சவாரி உள்ளது. இதமான காலநிலை நிலவும் ஆழியாறு அணை பொள்ளாச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோடை வெயிலில் இருந்து தப்பித்து குளிர்ச்சியாக குளியல் போட சிறந்த இடமாக குரங்கு அருவி உள்ளது. அதிக தண்ணீர் வீழ்ச்சி இல்லாமல் வீட்டில் குளிப்பது போன்ற உணர்வை அளிக்கும் குரங்கு அருவி ஆழியார் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 'வெள்ளியங்கிரி மலை' கோவையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குளிர்ந்த காலநிலை நிலவும் இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் இடமாக உள்ளது. மலையேற்றத்திற்கு செல்ல இயலாதவர்கள் கூட மலையடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருவிகளில் குளிக்க தென்காசிக்கு அருகில் உள்ள குற்றாலத்தைப் போலவே சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் 'கோவை குற்றாலம்' கோவையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோடை வெயிலிலிருந்து தப்பித்து சிறந்த குளியலுக்கு கோவை குற்றாலம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என்பதில் ஐயமே இல்லை.
வனத்துறையினரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டிய 'வைதேகி நீர்வீழ்ச்சி' குளுமையான அருவியாக உள்ளது. கோவையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வைதேகி நீர்வீழ்ச்சி காட்டுக்குள் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலா செல்லவேண்டிய முக்கிய இடமாக இது உள்ளது.