வர்க்கலா கடற்கரை - இயற்கையின் ஒரு தீட்டப்படாத ஓவியம்!

Varkala Beach
Varkala Beach
Published on

கேரளாவில் திருவனந்தபுர மாவட்டத்திலிருந்து 51 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம் வர்க்கலா. இந்த கிராமம் மிகவும் அமைதி வாய்ந்த ஒரு இடமாகும். அரபிக்கடலோரமும் சிறுமலை குன்றுகளுக்கும் மிகமிக அருகில் வர்க்கலா கடற்கரை உள்ளது . இந்த குன்றுகளில் உருவாகும் நீர் தனித்துவமான அம்சம் கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த இடத்தில் உள்ள சுனைகளின் நீர் மருத்துவகுணம் கொண்ட நீராக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வர்க்கலா கடற்கரை (Varkala Beach) இயற்கையின் வரம் என்றே கூறலாம். வர்க்கலா கிராமத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் இந்த கடற்கரைக்கு அருகில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஒரு விஷ்ணு கோவில் உள்ளது. ஜனார்த்தனசுவாமி கோவில் என்றழைக்கப்படும் இக்கோவில் கடற்கரையை நோக்கி ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.

அதேபோல் அந்த கடற்கரைக்கு அருகிலேயே சிவகிரி மடம் என்ற ஆஸ்ரமமும் உள்ளது. இந்த மடம் 1856 – 1928 ஆண்டு காலக்கட்டத்தில் ஸ்ரீ நாராயணகுரு என்பவரால் நிறுவப்பட்டது. அவர் இறந்தப் பின் அங்கேயே சமாதியாக்கப்பட்டார். இந்த இடத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வருவார்கள்.

மேலும் இந்த கடற்கரைக்கு அருகில் பாபநாசம் என்ற கடற்கரையும் உள்ளது. பாபநாசம் கடற்கரையில் மூழ்கி எழுந்தால் அனைத்துப் பாவங்களும் அசுத்தங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களிடையே டிரெண்டிங்கில் இருக்கும் டாப் 6 பயண இடங்கள்!
Varkala Beach

மேலும் வர்க்கலா கடற்கரை பகுதியை ஹிந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கான சுற்றுலாத் தளம் என்றும் கூறுவார்கள். ஏனெனில் இந்த கடற்கரைக்கு அருகில் கடுவாயில் ஜும்மா மசூதி, கப்பில் ஏரி, பவர் அவுஸ், விஷ்ணு கோவில் என அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அதேபோல் சிலக்கூர் கடற்கரை என்ற இடம் சூர்ய அஸ்தமனத்திற்காகவே இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு கடற்கரை என்றும் கூறலாம்.

வர்க்கலா கடற்கரைக்கு செல்பவர்கள் அதன் அருகில் தவறவிடக்கூடாத இன்னொரு தளமும் உள்ளது. இந்த கடற்கரைக்கு அருகில் தங்கத்தீவு என்ற இடம் உள்ளது. அந்த தீவில் கிட்டத்தட்ட 100 வருடங்கள் பழமையான ஒரு சிவன் கோவிலும் உள்ளதால் நீங்கள் கட்டாயம் சென்றுப் பார்க்கலாம்.

இக்கடற்கரையில் பல நீர் விளையாட்டுகளும் உள்ளன. அதாவது படகு சவாரி, பாராசூட் குதிப்பு போன்ற பல சாகச விளையாட்டுகள் உள்ளன.

பல சுற்றுலாத்தலங்களை உள்ளடிக்கிய ஒரு பகுதியாக வர்க்கலா கடற்கரை உள்ளது. பழமை வாய்ந்த இடங்களுக்கும் இயற்கையின் அழகுக்கும் பஞ்சமே இல்லாத இந்த கடற்கரைக்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை செல்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.

-பாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com