உறவுகள் தொடர்ந்திட...

வாழ்வியல்
உறவுகள் தொடர்ந்திட...

றவுகள் தொடர்ந்திட சிலவற்றை மறைக்க வேண்டியதும் அவசியமே!  உறவு என்று இல்லை; நட்பில் கூட சில விஷயங்களை மறைக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அந்த நட்பு கடைசி வரை இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கும் நான் உறவைத் தொடர... தொடர்ந்து  சில விஷயங்களை மறைத்துத்தான் வருகின்றேன். 

ஆம்... நெருங்கிய உறவுகளில் பலரும் என்னிடம் அவர்களின் ஒரகத்தி /  நாத்தனார் / மாமியார் மாமனார் பற்றி...  144 பக்கத்துக்குக் குற்றப்பத்திரிகை வாசிப்பார்கள்.  (என்னிடம் சொல்லும் எந்த சங்கதிகளும் அடுத்தவர்களிடம் போகாது என்ற நம்பிக்கையின் பேரில்) இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்... ஒருவர் இன்னொருவரைப் பற்றி  குறை கூறிய அரை மணி நேரத்தில்,  அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர், அவரின் வாதத்தை முன்வைப்பார்.  நான் அவர் பேசியதை இவரிடமும், இவர் பேசியதை அவரிடமும்  சொல்லாமல்... பொதுவான அறிவுரைகளை இருவரும் சமாதானமாகப் போவதற்கு என்ன வழியோ அதைக் கூற, கேட்ட அவர்களும் அதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த ஒரு நிகழ்வில்  மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்வார்கள். 

அதேபோல் யாராவது ஏதாவது தீங்கு செய்தாலோ / அவமரியாதை செய்தாலோ / எதிர்த்து பேசினாலோ மறந்துவிடுங்கள். ‘மறதி’தான் வாழ்க்கைக்கான ஜீவநாடி. நிறைய சண்டைகள், நிறைய கோபங்கள்,  நிறைய வன்மங்கள் இந்த மறதியால் குறைந்தும்,  ஏன் மறந்தும் போகும்... என்பதைச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைத்து பல பேரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கலாமே!

மேலும், எந்தவிதப் பொறாமையும் தேவையில்லை. பொறாமையைத் தூக்கி கடலில் போடுங்கள். அவர்களின் உயர்வில் நாம் மகிழ ஆனந்தம் நமக்கு நிரந்தரமாகும் என்பதையும் எடுத்துச் சொல்லி பிரச்னைகளுக்கு அங்கேயே மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்…

விஷத் தண்ணீர் ஊற்றினால் ஆனந்த பூக்கள் மலராது. எனவே, குறை கூறுவது, பிறரை நோகடிப்பது, மற்றவர்களை எதிரிகள் ஆக்குவது என தேவையற்ற செயல்களை விட்டுத்தள்ள ஆனந்தம் நம்மைத் தேடி வரும்... சந்தேகமே இல்லை! அன்பான உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்... மனதில் உற்சாகம் ஊறட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com