மாதங்களில் நான் மார்கழி!

மாதங்களில் நான் மார்கழி!

ரேவதி பாலு

மிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. நமது முக்கியமான பண்டிகைகளும் விசேஷ நாட்களும் வரும் தட்சிணாயன புண்ய காலம் மார்கழியோடு நிறைவுறுகிறது. மற்ற மாதங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே இறைவனுக்கு உகந்த நாட்களாக இருக்கும். ஆனால், தனுர் மாதமான மார்கழியிலோ மாதம் முழுவதும் இறை வழிபாட்டுக்கு உரியதாகப் போற்றி வணங்கப்படுகிறது. அதனால்தான், 'மாதங்களில் நான் மார்கழி' என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அந்த மாதத்தைச் சிறப்பித்துச் சொன்னார். அந்த சிறப்பான மாதம் இன்றிலிருந்து தொடங்குகிறது.

மனிதர்களாகிய நாம் ஒரு வருடம் என்று சொல்வது, தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள மாதங்கள் பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் இரவாகவும் இருக்கிறது. இதன்படி தேவர்களின் இரவுப்பொழுது முடிந்து வைகறைப் பொழுது மார்கழி மாதமாக விளங்குகிறது. நம்முடைய ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள் என்று கூறும்போது, அந்த ஒரு நாளின் அதிகாலை (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) பிரம்ம முகூர்த்தப் பகுதியாக மார்கழி மாதம் தேவர்களுக்கு விளங்குகிறது.

மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டில் வீடுகளின் வாசல்களில் பெரிய பெரிய கோலங்கள் அழகாகப் போடப்படுவதால் மார்கழி மாதமே களைகட்டும் என்றால் மிகையாகாது. பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிகாலையிலேயே தத்தம் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகி பெரிய பெரிய கோலங்கள் போட்டு அந்தக் கோலங்களின் நடுவில் ஒரு பூசணிப்பூ வேறு அலங்காரமாக வைப்பார்கள். மார்கழி மாதம் அதிகாலையில், 'நகர சங்கீர்த்தனம்' என்று பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டே வீதிகளை வலம் வருவார்கள் பக்தர்கள். அந்தக் காலத்தில் மயிலாப்பூர் மாட வீதிகளில் பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் நாலு மாட வீதிகளையும் சுற்றி அதிகாலை நேரத்தில் பஜனை செய்வது வழக்கமாக இருந்தது. அந்த பஜனையில் ஏராளமான பக்தர்களும் உற்சாகமாகப் பங்கு கொள்வார்கள். வீதிகளில் மங்களகரமான பெரிய பெரிய கோலங்களும் பஜனைப் பாடல்களுமாக மார்கழியின் அதிகாலை நேரம் தெய்வாம்சம் பொருந்தி காணப்படும்.

எல்லா சிவன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மங்கள வாத்தியங்கள் முழங்க சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சியும், விஷ்ணு கோயில்களில் திருப்பாவையும் அதிகாலையில் ஏராளமான பக்தர்களால் பாடப்படுகிறது.

தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார் தன் வீட்டுத் தோட்டத்தில் துளசி செடியின் அடியில் கண்டெடுத்த குழந்தையே ஆண்டாள் என்னும் கோதை நாச்சியார் ஆவார். பிரசித்தி பெற்ற பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்களில் கோதை நாச்சியார் ஒருவரே பெண் ஆழ்வாராகப் போற்றப்படுகிறார். ஆண்டாள் பாடிய திருப்பாவை மார்கழி முப்பது நாளும் கோயில்களில் குழந்தைகளாலும் பெரியவர்களாலும் அதிகாலையில் பாடப்படுகிறது. ஆண்டாள் தினமும் அதிகாலையில் தன் ஊரிலுள்ள பெண்களைத் துயிலெழுப்பி பெருமாளின் தரிசனத்திற்காகக் கூட்டிக்கொண்டு போகும்போது பாடப்பட்ட பாடல்களே திருப்பாவை முப்பது பாடல்களாகும். மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாடப்படுவது, 'பாவை நோன்பு' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

மாணிக்கவாசகர் சமயக்குரவர் நால்வரில் ஒருவர். மற்ற மூவரும் பாடிய பாடல்கள் தேவாரப் பாடல்கள் எனப்படுகின்றன. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், 'திருக்கோவையார்' என்று அழைக்கப்படுகிறது. இதைத்தவிர, இவர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் பாடியுள்ளார். திருப்பெருந்துறை சிவன் கோயிலில் இறைவனை துயிலெழுப்பப் பாடிய பாடல்களே திருப்பள்ளியெழுச்சி எனப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் சன்னிதி காணப்படுகிறது. கார்த்திகை கடைசி நாளன்று மாணிக்கவாசகர் உத்ஸவர் வடிவில் அருணாசலேஸ்வரர் ஸ்வாமி சன்னிதானத்திற்கு எதிரே நின்று அடுத்த நாள் மார்கழி ஒன்றாம் தேதியானதால் அன்றிலிருந்து தினமும் திருவெம்பாவை சொல்ல உத்திரவு வாங்கிக் கொள்ளும் காட்சி இன்றும் நடைபெறுகிறது.

திருப்பாற்கடல் கடையப்பெற்றபோது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட, அதை சிவன் உண்டு எல்லோரையும் காப்பாற்றியது மார்கழி மாதத்தில்தான். அதேபோல இந்திரனால் பெருமழையும் வெள்ளமும் உருவாகி கோகுலத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானபோது கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து ஸ்ரீ கிருஷ்ணபெருமான் அவர்களைக் காப்பாற்றியதும் மார்கழியில்தான் என்று வரலாறு கூறுகிறது.

மார்கழி மாதத்து விசேஷங்களில் முக்கியமானவை சிதம்பரத்தில் பௌர்ணமியன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் பௌர்ணமியை அடுத்த தேய்பிறை ஏகாதசியன்று நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும், அமாவாசை தினத்தன்று வரும்
ஸ்ரீ ஹனுமத் ஜயந்தியுமாகும்.

மார்கழி மாதம் பெருமைகள் நிறைந்த மாதம் என்பதால், 'பீடுடைய' மாதம் என்று போற்றப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி, 'பீடை' மாதம் என்று வழக்கில் வந்து விட்டது. சாதாரண மனிதர்கள் தம்முடைய தினசரி வாழ்க்கையில் தினமும் வரும் அதிகாலை நேரத்தையே பிரம்ம முகூர்த்தம் என்று சிறப்பித்து வழிபாடுகள், பூஜைகள் செய்வது வழக்கம். அப்படி இருக்கும்போது தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழி மாதம் முழுவதும் எவ்வளவு விசேஷமானது என்பதை நன்குணர்ந்த நம் முன்னோர்கள் இந்த மாதம் முழுவதையும் இறை வழிபாட்டுக்கென்றே அர்ப்பணித்தார்கள். அதனால்தான் திருமணங்கள் போன்ற விசேஷங்களை இந்த மாதத்தில் நடத்தாமல் விலக்கி வைத்தார்கள்.

மார்கழி முப்பது நாளும் இறை வழிபாட்டில் தங்கள் மனதை முழுமையாகச் செலுத்தி மக்கள் வழிபட்டால், அதையடுத்து வரும் தை மாதத்தில் எல்லா கஷ்டங்களும் நீங்கி அனைத்து சுப காரியங்களுக்கும் வழி பிறக்கும் என்பதால்தான், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com