​தீபப் பலன்!

​தீபப் பலன்!
Published on

பொ.பாலாஜிகணேஷ்

'விளக்கேற்றிய வீடு வீண் போகாது' என்று கூறுவர். தீபச் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகமாகப் பரவும். அதோடு, நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாட்கள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் காட்சியளிக்கும். மேலும், வீட்டில் உள்ள அனைவரும் மனச் சோர்வாகக் காணப்படுவார்கள். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல, மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் தீபம் ஏற்ற, தூய்மை அடைந்து நற்பலன்களைப் பெறுகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிகப் பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் தீபம் ஏற்ற, சூரிய நாடி சுறுசுறுப்படைகிறது. நெய் தீபம் சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக, நெய் தீபம் சகலவித சுகங்களையும், வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

வீடுகளில் ஏற்றப்படும் திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்குத் தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30மணிக்கு ஏற்றுவதே நமது மரபு.

இதை, 'கருக்கல் நேரம்' என்பர். சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி, அவை வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. தீபமேற்றுவதன் மூலம் அந்த விஷ சக்திகள் பலமிழந்து போகும். எனவே, அந்நேரத்தில் தீபமேற்றுவது பலவித நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை.

னி, ஒரு உண்மை நிகழ்வினைக் காண்போம்.

அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனின் வீட்டுக்குச் சென்றிருந்தார் ஒரு தாய். மாலையில் தனது மகனும் மருமகளும் வீட்டுக்குத் தாமதமாக வருவதைப் பார்க்கின்றார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.

ஒருநாள் அவர்களை அழைத்து, தாமதமாக வருவதற்கான காரணத்தைக் கேட்டபோது, ''உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்! அதனால் இருவரும் கவுன்சிலிங் போய்விட்டு வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்குக் கொடுக்கும் தொகை எவ்வளவு என்று உனக்குத் தெரியுமா? மிகச் சிறந்த டாக்டர் அவர். அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும்'' என்று கூறினான் மகன்.

அதைக் கேட்ட அந்தத் தாய், ''நாளை அந்த டாக்டரைப் பார்க்கப் போக வேண்டாம். சீக்கிரம் இருவரும் வீட்டுக்கு வரவேண்டும்'' என்று கூறினார்.

அதன்படி அடுத்த நாள் மாலை சீக்கிரமாகவே வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகளின் மூக்கை சுகந்தமான மணம் ஒன்று துளைக்கிறது.

''இருவரும் கைகால் கழுவி, உடை மாற்றிக்கொண்டு பூஜை அறைக்கு வாருங்கள்'' என்று தாய் கூறினார். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மணம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார் அந்தத் தாய். இருவரும் தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு கண் திறந்த அவர்கள், ''கவுன்சிலிங்கில் கிடைக்காத மன அமைதி இன்று இங்கு எங்களுக்குக் கிடைத்தது'' என்று சொல்ல, தாயார் மிகவும் மனம் மகிழ்ந்தார். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி மாலையில் விளக்கேற்றும்படி கூறுங்கள். இப்படிச் செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும். 'விளக்கேற்றிய வீடு வீண் போகாது.' இனியாவது வீட்டில் தீபம் ஏற்றி பல நன்மைகளைப் பெறுவோம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com