– லதானந்த்.ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத் என்னுமிடத்தில் காட்சி தருகிறார். (அனுமன் இப்படி சயனக் கோலத்தில் காட்சி தரும் இரு வேறு திருத்தலங்கள் அலஹாபாத்தில் சங்கமத்துக்கு அருகில், யமுனை நதிக்கரையில் உள்ள ஆலயத்திலும், மத்தியப் பிரதேசத்தில் ஜாம் சவாலியிலும் உள்ளன.).ஸ்ரீ பத்ர மாருதி எனும் திருநாமத்தோடு அருளும் இந்த அனுமன் ஆலயம் புகழ் பெற்ற எல்லோரா குகைகளுக்கு 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களுள் ஒன்றான குருஷ்னேஷ்வர் கோயிலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆதியில், 'புனித பூமி' என்று பொருள் தரும் வகையில் அழைக்கப்பட்ட இந்தத் தலம், ஔரங்கசீப் காலத்தில், 'குல்தாபாத்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குல்தாபாத் என்ற பார்ஸி மொழிச் சொல்லுக்கு சொர்க்கத்தின் நுழைவாயில் என்று பொருள்..இந்தத் திருத்தலம் திரேதா யுகத்தில் பத்ராவதி என்று அழைக்கப்பட்டிருந்தது. அதை பத்ரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். இவர் ஸ்ரீராமபிரானுக்குக் கோயில் ஒன்றை ஏற்படுத்தினார். அதோடு ஸ்ரீராமரை, 'பத்ரா' என்றே அழைத்து மகிழ்ந்தார். கோயிலுக்கு அருகிலேயே, 'பத்ர குண்டம்' என்னும் தீர்த்தக்குளம் ஒன்றையும் அமைத்தார். இவர் மிகச் சிறந்த ஸ்ரீராம பக்தர் என்பதால், ராமபிரான் மீது பக்தி கொண்டு இன்னிசைப் பாடல்களைப் பாடி, ஸ்ரீராமரை நாள்தோறும் அர்ச்சித்து வழிபட்டார்..ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் பக்த அனுமனும் இருப்பாராகையால், அந்த பக்திப் பாடல்களைக் கேட்ட அனுமன் மனம் மகிழ்ந்து, ஒரு நாள் பூலோகம் வந்து இவரருகில் நின்றார். இன்னிசைப் பாடல்களில் மகிழ்ந்த அனுமன், அங்கேயே உறக்கக் கோலத்தில் கீழே படுத்து, யோக நிலைக்குச் சென்றார். ஸ்ரீராம பக்தனைத் துதித்த மன்னன், அனுமனை அதே திருக்கோலத்தில் அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு கேட்டுக்கொண்டார். அன்று முதல் அனுமன் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்..இன்னும் ஒரு தல புராணத்தின்படி, ராமாயண காலத்தில் லக்ஷ்மணனின் மூர்ச்சையைத் தெளிவிப்பதற்காக சஞ்சீவினி மூலிகையைத் தேடி அனுமன் வந்தபோது இங்கேதான் ஓய்வெடுத்ததாகவும் அதனால்தான் இங்கிருக்கும் அனுமன் உறங்கும் தோற்றத்தில் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது..கோயிலுக்கு வெளியே ஆல மர நிழலில் பத்ரசேன மன்னர் சிலையும், பழைமையான சிவலிங்கம் ஒன்றும் காட்சி தருகின்றன. கோயில் முழுவதும் வெள்ளைச் சலவைக் கற்களால் ஆன வேலைப்பாடுகள் உள்ளன. மேற்கூரையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. சுவர்களில் தல புராணம் எழுதப்பட்டிருக்கிறது. காவி வண்ண ஆடை அணிவிக்கப்பட்ட அனுமன், ஆல மர இலைகளால் ஆன மாலையணிந்து காட்சியளிக்கிறார். வெள்ளிக் கிரீடம் சிரசை அலங்கரிக்க, கையில் கதை ஏந்தியபடி செக்கச் சிவந்த திருமேனியோடு அருள்பாலிக்கிறார் ஆஞ்சனேயர்..கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அனுமனின் பாதாரவிந்தங்களைத் தொட்டு வணங்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின்னரே அனுமனின் திருவுருவத்தை தரிசிக்க வேண்டும். ஏழடி உயரமுள்ள அனுமனின் படமும், ஸ்ரீராமரின் திருவுருவப் படமும் கண்ணாடி ஃபிரேம் செய்து கருவறைக்கு முன்னர் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை..வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில் திறந்திருந்தாலும், சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மராத்தி காலண்டரில் உள்ள 'ஷர்வன்' மாத சனிக்கிழமைகளில் பத்ர மாருதி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். அனுமன் ஜயந்தி மற்றும் ஸ்ரீராம நவமியின்போதும் லட்சக்கணக்கில் ஆண்டு தோறும் பக்தர்கள் இங்கே கூடுகின்றனர்..எல்லோரா குகைகளையும் பார்க்க விரும்புபவர்கள் செவ்வாய்க் கிழமையைத் தவிர்ப்பது நல்லது. பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை எல்லோரா குகைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை..அமைவிடம்:ஆகாய மார்க்கமாக: ஔரங்காபாத் விமான நிலையத்தில் இருந்து 26 கி.மீ.,ரயில் மார்க்கமாக: ஔரங்காபாத் ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ.,தரை மார்க்கமாக: தனியார் வாகனங்கள் மஹாராஷ்ட்ராவின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்தை சாலை வழியே இணைக்கின்றன.
– லதானந்த்.ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத் என்னுமிடத்தில் காட்சி தருகிறார். (அனுமன் இப்படி சயனக் கோலத்தில் காட்சி தரும் இரு வேறு திருத்தலங்கள் அலஹாபாத்தில் சங்கமத்துக்கு அருகில், யமுனை நதிக்கரையில் உள்ள ஆலயத்திலும், மத்தியப் பிரதேசத்தில் ஜாம் சவாலியிலும் உள்ளன.).ஸ்ரீ பத்ர மாருதி எனும் திருநாமத்தோடு அருளும் இந்த அனுமன் ஆலயம் புகழ் பெற்ற எல்லோரா குகைகளுக்கு 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களுள் ஒன்றான குருஷ்னேஷ்வர் கோயிலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆதியில், 'புனித பூமி' என்று பொருள் தரும் வகையில் அழைக்கப்பட்ட இந்தத் தலம், ஔரங்கசீப் காலத்தில், 'குல்தாபாத்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குல்தாபாத் என்ற பார்ஸி மொழிச் சொல்லுக்கு சொர்க்கத்தின் நுழைவாயில் என்று பொருள்..இந்தத் திருத்தலம் திரேதா யுகத்தில் பத்ராவதி என்று அழைக்கப்பட்டிருந்தது. அதை பத்ரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். இவர் ஸ்ரீராமபிரானுக்குக் கோயில் ஒன்றை ஏற்படுத்தினார். அதோடு ஸ்ரீராமரை, 'பத்ரா' என்றே அழைத்து மகிழ்ந்தார். கோயிலுக்கு அருகிலேயே, 'பத்ர குண்டம்' என்னும் தீர்த்தக்குளம் ஒன்றையும் அமைத்தார். இவர் மிகச் சிறந்த ஸ்ரீராம பக்தர் என்பதால், ராமபிரான் மீது பக்தி கொண்டு இன்னிசைப் பாடல்களைப் பாடி, ஸ்ரீராமரை நாள்தோறும் அர்ச்சித்து வழிபட்டார்..ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் பக்த அனுமனும் இருப்பாராகையால், அந்த பக்திப் பாடல்களைக் கேட்ட அனுமன் மனம் மகிழ்ந்து, ஒரு நாள் பூலோகம் வந்து இவரருகில் நின்றார். இன்னிசைப் பாடல்களில் மகிழ்ந்த அனுமன், அங்கேயே உறக்கக் கோலத்தில் கீழே படுத்து, யோக நிலைக்குச் சென்றார். ஸ்ரீராம பக்தனைத் துதித்த மன்னன், அனுமனை அதே திருக்கோலத்தில் அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு கேட்டுக்கொண்டார். அன்று முதல் அனுமன் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்..இன்னும் ஒரு தல புராணத்தின்படி, ராமாயண காலத்தில் லக்ஷ்மணனின் மூர்ச்சையைத் தெளிவிப்பதற்காக சஞ்சீவினி மூலிகையைத் தேடி அனுமன் வந்தபோது இங்கேதான் ஓய்வெடுத்ததாகவும் அதனால்தான் இங்கிருக்கும் அனுமன் உறங்கும் தோற்றத்தில் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது..கோயிலுக்கு வெளியே ஆல மர நிழலில் பத்ரசேன மன்னர் சிலையும், பழைமையான சிவலிங்கம் ஒன்றும் காட்சி தருகின்றன. கோயில் முழுவதும் வெள்ளைச் சலவைக் கற்களால் ஆன வேலைப்பாடுகள் உள்ளன. மேற்கூரையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. சுவர்களில் தல புராணம் எழுதப்பட்டிருக்கிறது. காவி வண்ண ஆடை அணிவிக்கப்பட்ட அனுமன், ஆல மர இலைகளால் ஆன மாலையணிந்து காட்சியளிக்கிறார். வெள்ளிக் கிரீடம் சிரசை அலங்கரிக்க, கையில் கதை ஏந்தியபடி செக்கச் சிவந்த திருமேனியோடு அருள்பாலிக்கிறார் ஆஞ்சனேயர்..கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அனுமனின் பாதாரவிந்தங்களைத் தொட்டு வணங்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின்னரே அனுமனின் திருவுருவத்தை தரிசிக்க வேண்டும். ஏழடி உயரமுள்ள அனுமனின் படமும், ஸ்ரீராமரின் திருவுருவப் படமும் கண்ணாடி ஃபிரேம் செய்து கருவறைக்கு முன்னர் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை..வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில் திறந்திருந்தாலும், சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மராத்தி காலண்டரில் உள்ள 'ஷர்வன்' மாத சனிக்கிழமைகளில் பத்ர மாருதி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். அனுமன் ஜயந்தி மற்றும் ஸ்ரீராம நவமியின்போதும் லட்சக்கணக்கில் ஆண்டு தோறும் பக்தர்கள் இங்கே கூடுகின்றனர்..எல்லோரா குகைகளையும் பார்க்க விரும்புபவர்கள் செவ்வாய்க் கிழமையைத் தவிர்ப்பது நல்லது. பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை எல்லோரா குகைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை..அமைவிடம்:ஆகாய மார்க்கமாக: ஔரங்காபாத் விமான நிலையத்தில் இருந்து 26 கி.மீ.,ரயில் மார்க்கமாக: ஔரங்காபாத் ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ.,தரை மார்க்கமாக: தனியார் வாகனங்கள் மஹாராஷ்ட்ராவின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்தை சாலை வழியே இணைக்கின்றன.