
பெண்கள் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதற்கு சான்றாக இந்த நூற்றாண்டில் அவர்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்கீடு அதிகரித்து வருகின்றது.
முதலில் இந்திய கடற்படையும், விமானப் படையும்தான், 'போர் முனையில் சண்டை போட ' பெண்களை அனுமதிக்கத் துவங்கியது. செப்டம்பர் மாதம் 2021 இல் , 'இந்திய ராணுவம் ஆயுதப் படையிலும் பெண்களை சேர்க்க வேண்டும்,' என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் அமலுக்கு கொண்டு வந்தது.
இதன் எதிரொலியாக இந்த ஆண்டு நமது நாட்டின் 73வது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தை சேர்ந்த பெண்களின் பங்கேற்பு அனைவரும் பிரமிக்கும் விதமாக இருந்தது. அந்த அணிவகுப்பு மாதருக்கான ஒரு கொண்டாட்டம் என்று கூட சொல்லாம் . வானிலும், தரையிலும், இரு சக்கர வாகனத்திலும் அவர்கள் புரிந்த சாகசங்கள்… அப்பப்பா! அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
விமான லெப்டினன்ட் ஷிவாங்கி சிங்
ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை இவரையே சாரும். போர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ரஃபேல் விமானத்தை இந்திய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கியது . இவ்வாறு வாங்கிய விமானங்கன் மொத்தம் 36 மட்டுமே. இதில் ஒன்றை தான் ஷிவாங்கி இயக்குகிறார். குடியரசு தினத்தன்று விமானப் படை நடத்திய அணிவகுப்பில் பங்கேற்ற இவர் இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
லெப்டினன்ட் மனிஷா போஹ்ரா
பரம்பரை பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணிபுரியும் குடும்பத்தில் பிறந்த இவர், இந்திய ராணுவத்தில் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை. ஆயினும், இந்த வருட குடியரசு தினத்தன்று 'ஆர்மி அர்ட்னன்ஸ் கார்ப்ஸ்' (Army Ordnance Corps) இன் முழுவதும் ஆண்களால் ஆன படையின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கி 'ஆண்– பெண் சமத்துவம்' போற்றும் பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.
மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு
லெப்டினன்ட் கமாண்டர் ஆன்சல் ஷர்மா
1992 ஆம் ஆண்டு வரை மருத்துவ சேவைக்காகவே இந்திய ராணுவத்தில் பெண்கள் பணியமர்த்தப் பட்டனர். இந்திய கடற்படை தான் முதன்முதலில் மற்ற சேவைகளுக்காக பெண்களை பணியமர்த்த துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே கடற்படையில் அதிக பெண்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும் கடற்படையில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த ஆண்டு கமாண்டர் ஆன்சல் ஷர்மா, 100 பேர் கொண்ட கடற்படையின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
இந்த மகளிர் தினத்தன்று, இந்திய நாட்டுக்காக ஆயுதம் தாங்கி, சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி போராடும் ஒவ்வொரு வீரப் பெண்ணையும் மங்கையர் மலர் தலைவணங்குகிறது.