பகுதி – 5.Dr. சித்ரா மாதவன்.மாமல்லபுரம் குகைக் கோயிலில் அருளும் ஸ்ரீ ஆதி வராகர்!.சென்னைக்கு அருகில் உள்ளது தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் மாமல்லபுரம். இங்கு உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற குடைவரைக் கோயில்களும். பாறை சிற்பங்களும், ஒற்றைக்கல் ரதங்களும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னர்களின் பெருமைகளைச் சொல்லும். பல்லவப் பேரரசின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக மாமல்லபுரம் அக்காலத்தில் விளங்கியது. 'மாமல்லன்', 'மகாமல்லன்' என அழைக்கப்பட்ட மல்யுத்தத்தில் சிறந்து விளங்கிய பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனின் (கிபி 630 – 668) பெருமையைப் பறைச்சாற்றும் விதமாக அவனது பெயராலேயே இது மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது.இது தவிர, 'மல்லை' என்றும் 'கடல்மல்லை' எனும் வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது..முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதாரத் திருத்தலம் இது. திருமங்கையாழ்வாரால் போற்றப்பட்ட, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலசயனப் பெருமாள் இந்தத் திருத்தலத்தில்தான் பள்ளிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் இத்தலக் கோயிலையும் பெருமாளையும் மட்டுமல்லாமல், இந்தப் பதியின் துறைமுகத்தையும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களையும், கொட்டிக்கிடந்த பொக்கிஷங்களையும் குறித்து பாடிப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே பல்லவர்கள் வைணவத்தைப் பெரிதும் ஆதரித்துள்ளனர் என்பது அறியத்தக்கது..ஆதிவராகர் குகைக்கோயில்: ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில், ஸ்தலசயனப் பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தக் குகைக்கோயில் இன்றளவும் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..இது குகைக்கோயிலாக இருந்தாலும், இதற்கு முன்பு பல்லவர் காலத்து நான்குகால் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. திருக்கோயிலும் கருவறையும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கருவறையில் ஆதி வராக மூர்த்தியின் பெரிய சுதைச் சிற்பம் காட்சி தருகிறது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் மற்றும் பாண்டவதூத பெருமாள் கோயில்களில் காட்சி தருவதைப் போலவே இந்த ஆலயத்திலும் சுதையால் ஆன மூலவரே அருள்பாலிக்கிறார். கருவறை மூலவரைப் போன்றே அவருக்கு முன்பு சிறிய சாளக்ராமத்தால் ஆன வராக மூர்த்தி ஒருவரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இக்கோயில் மூலவர், பூமாதேவியை தமது வலப்புறத்தில் அமர்த்தி இருப்பதால் இவ்விடம், 'திருவலந்தை' என்று அறியப்படுகிறது..மூலவர் பெருமான் சுதையால் அமைந்திருந்தாலும் கருவறையின் வெளியே இருபுறங்களிலும் மிகவும் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து சற்றுத் தொலைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வராகர் கோயிலில், பூமா தேவியை இடப்பக்கம் அமர்த்தியபடி அருள்பாலிக்கும் வராகப்பதி, 'திருவிடந்தை' என்று அழைக்கப்படுவது அறியத்தக்கது..மூலவர் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும் முன் வலக்கையால் பூமாதேவியை அணைத்தபடியும் இடது கையால் பூமாதேவியின் காலைப் பிடித்தபடி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வலது கால் பாதம் நாகராஜன் தம்பதியரின் சிரசின் மீது பதித்தும் இடது கால் நிலத்தின் மீது அழுத்தமாக ஊன்றியபடியும் காட்சி தருகிறார்..உத்ஸவப் பெருமாள், 'ஞானபிரான்' எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மகாவிஷ்ணு கோலத்தில் அருள்பாலிக்கிறார். சட்கோண யந்திரத்தில் பதிக்கப்பட்ட சுதர்சனரின் உத்ஸவ மூர்த்தியும் இங்கு கண்டு தரிசிக்கத்தக்கது. வைகானச ஆகம விதிப்படி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன..எழில்மிகு சிற்பங்கள்: தாமரை மேல் அமர்ந்துள்ள கஜலட்சுமியின் இரு புறங்களிலும் பணிப்பெண்கள் தண்ணீர் குவளையுடன் நிற்க, அருகில் உள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளால் லட்சுமிக்கு அபிஷேகம் செய்வது போல மிகவும் தத்ரூபமாக அமைந்த ஓர் சிற்பம் இங்கு கண்டு ரசிக்கத் தக்கதாகும். மேலும், ஒரு கையில் சங்கும், மறுகையில் பிரயோகிக்க லாவகமாக சக்கரத்தை எந்தியபடி காட்சி தரும் மகாவிஷ்ணுவின் சிற்பம் ஒன்றும் உள்ளது. அவரது திருப்பாதத்தில் பக்தர்கள் தஞ்சம் புகுவதைப் போன்று அமைந்த சிற்பம் மிகவும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் சிம்மவர்மன் மற்றும் அவரது மகன் மகேந்திரவர்மன் தத்தம் மனைவியருடன் இருப்பது போல சிற்பங்களும் (portrait sculptures) இங்கு அமைந்துள்ளன..முன் மண்டபம்: இந்தக் குகைக்கோயிலுக்கு முன்பு அமைந்த பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஓர் சிறிய மண்டபத்தையும் இங்கு கண்டு தரிசிக்கலாம்..கல்வெட்டுகள்: பல்லவ கிரந்தத்தில் வடிக்கப்பட்ட பல கல்வெட்டுகள் இங்கு காணக் கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றின் மூலம் அரசன் சிம்மவர்மனின் சிறப்புப் பெயர், 'ஶ்ரீ சிம்மவிண்ண பொற்றாதிராஜன்' மற்றும் முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர், 'ஶ்ரீ மகேந்திர பொற்றாதிராஜன்' என்பதை அறிய முடிகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறித்து சமஸ்கிருதத்தில் வரிகளாக வடிக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு காணக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டுதான், இந்தியாவிலேயே ஶ்ரீமந் நாராயணரின் பத்து அவதாரங்களையும் பறைசாற்றும் முதல் கல்வெட்டாகும்..திருவிழாக்கள்: சித்திரை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வராக ஜயந்தி உத்ஸவம் இத்தலத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மார்கழி மாதம் முழுவதும் வராக மூர்த்திக்கு விடியற்காலை ஆராதனையும் நடைபெறுகிறது. ஸ்தல சயன பெருமாளும், திருவலந்தை வராகரும் சேர்ந்த ஒரே திவ்ய தேசம் இதுவென்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது..இந்தக் கோயிலைத் தவிர, மாமல்லபுரத்தில் ஆதி வராகர் மண்டபமும் உள்ளது. அருகில் அமைந்த வராகர் கோயிலான திருவிடந்தையும் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததே. இத்தலத்தைக் குறித்தும் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் நோக்குகையில் பல்லவர்கள் வராக மூர்த்தியின் தீவிர பக்தர்களாக இருந்திருக்க வேண்டும் என்று அறிய முடிகிறது. காலையில் மட்டுமே நடை திறந்திருக்கும் இந்தக் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோயில் அர்ச்சகர்களை அணுகலாம்.
பகுதி – 5.Dr. சித்ரா மாதவன்.மாமல்லபுரம் குகைக் கோயிலில் அருளும் ஸ்ரீ ஆதி வராகர்!.சென்னைக்கு அருகில் உள்ளது தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் மாமல்லபுரம். இங்கு உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற குடைவரைக் கோயில்களும். பாறை சிற்பங்களும், ஒற்றைக்கல் ரதங்களும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னர்களின் பெருமைகளைச் சொல்லும். பல்லவப் பேரரசின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக மாமல்லபுரம் அக்காலத்தில் விளங்கியது. 'மாமல்லன்', 'மகாமல்லன்' என அழைக்கப்பட்ட மல்யுத்தத்தில் சிறந்து விளங்கிய பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனின் (கிபி 630 – 668) பெருமையைப் பறைச்சாற்றும் விதமாக அவனது பெயராலேயே இது மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது.இது தவிர, 'மல்லை' என்றும் 'கடல்மல்லை' எனும் வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது..முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதாரத் திருத்தலம் இது. திருமங்கையாழ்வாரால் போற்றப்பட்ட, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலசயனப் பெருமாள் இந்தத் திருத்தலத்தில்தான் பள்ளிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் இத்தலக் கோயிலையும் பெருமாளையும் மட்டுமல்லாமல், இந்தப் பதியின் துறைமுகத்தையும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களையும், கொட்டிக்கிடந்த பொக்கிஷங்களையும் குறித்து பாடிப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே பல்லவர்கள் வைணவத்தைப் பெரிதும் ஆதரித்துள்ளனர் என்பது அறியத்தக்கது..ஆதிவராகர் குகைக்கோயில்: ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில், ஸ்தலசயனப் பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தக் குகைக்கோயில் இன்றளவும் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..இது குகைக்கோயிலாக இருந்தாலும், இதற்கு முன்பு பல்லவர் காலத்து நான்குகால் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. திருக்கோயிலும் கருவறையும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கருவறையில் ஆதி வராக மூர்த்தியின் பெரிய சுதைச் சிற்பம் காட்சி தருகிறது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் மற்றும் பாண்டவதூத பெருமாள் கோயில்களில் காட்சி தருவதைப் போலவே இந்த ஆலயத்திலும் சுதையால் ஆன மூலவரே அருள்பாலிக்கிறார். கருவறை மூலவரைப் போன்றே அவருக்கு முன்பு சிறிய சாளக்ராமத்தால் ஆன வராக மூர்த்தி ஒருவரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இக்கோயில் மூலவர், பூமாதேவியை தமது வலப்புறத்தில் அமர்த்தி இருப்பதால் இவ்விடம், 'திருவலந்தை' என்று அறியப்படுகிறது..மூலவர் பெருமான் சுதையால் அமைந்திருந்தாலும் கருவறையின் வெளியே இருபுறங்களிலும் மிகவும் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து சற்றுத் தொலைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வராகர் கோயிலில், பூமா தேவியை இடப்பக்கம் அமர்த்தியபடி அருள்பாலிக்கும் வராகப்பதி, 'திருவிடந்தை' என்று அழைக்கப்படுவது அறியத்தக்கது..மூலவர் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும் முன் வலக்கையால் பூமாதேவியை அணைத்தபடியும் இடது கையால் பூமாதேவியின் காலைப் பிடித்தபடி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வலது கால் பாதம் நாகராஜன் தம்பதியரின் சிரசின் மீது பதித்தும் இடது கால் நிலத்தின் மீது அழுத்தமாக ஊன்றியபடியும் காட்சி தருகிறார்..உத்ஸவப் பெருமாள், 'ஞானபிரான்' எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மகாவிஷ்ணு கோலத்தில் அருள்பாலிக்கிறார். சட்கோண யந்திரத்தில் பதிக்கப்பட்ட சுதர்சனரின் உத்ஸவ மூர்த்தியும் இங்கு கண்டு தரிசிக்கத்தக்கது. வைகானச ஆகம விதிப்படி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன..எழில்மிகு சிற்பங்கள்: தாமரை மேல் அமர்ந்துள்ள கஜலட்சுமியின் இரு புறங்களிலும் பணிப்பெண்கள் தண்ணீர் குவளையுடன் நிற்க, அருகில் உள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளால் லட்சுமிக்கு அபிஷேகம் செய்வது போல மிகவும் தத்ரூபமாக அமைந்த ஓர் சிற்பம் இங்கு கண்டு ரசிக்கத் தக்கதாகும். மேலும், ஒரு கையில் சங்கும், மறுகையில் பிரயோகிக்க லாவகமாக சக்கரத்தை எந்தியபடி காட்சி தரும் மகாவிஷ்ணுவின் சிற்பம் ஒன்றும் உள்ளது. அவரது திருப்பாதத்தில் பக்தர்கள் தஞ்சம் புகுவதைப் போன்று அமைந்த சிற்பம் மிகவும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் சிம்மவர்மன் மற்றும் அவரது மகன் மகேந்திரவர்மன் தத்தம் மனைவியருடன் இருப்பது போல சிற்பங்களும் (portrait sculptures) இங்கு அமைந்துள்ளன..முன் மண்டபம்: இந்தக் குகைக்கோயிலுக்கு முன்பு அமைந்த பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஓர் சிறிய மண்டபத்தையும் இங்கு கண்டு தரிசிக்கலாம்..கல்வெட்டுகள்: பல்லவ கிரந்தத்தில் வடிக்கப்பட்ட பல கல்வெட்டுகள் இங்கு காணக் கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றின் மூலம் அரசன் சிம்மவர்மனின் சிறப்புப் பெயர், 'ஶ்ரீ சிம்மவிண்ண பொற்றாதிராஜன்' மற்றும் முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர், 'ஶ்ரீ மகேந்திர பொற்றாதிராஜன்' என்பதை அறிய முடிகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறித்து சமஸ்கிருதத்தில் வரிகளாக வடிக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு காணக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டுதான், இந்தியாவிலேயே ஶ்ரீமந் நாராயணரின் பத்து அவதாரங்களையும் பறைசாற்றும் முதல் கல்வெட்டாகும்..திருவிழாக்கள்: சித்திரை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வராக ஜயந்தி உத்ஸவம் இத்தலத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மார்கழி மாதம் முழுவதும் வராக மூர்த்திக்கு விடியற்காலை ஆராதனையும் நடைபெறுகிறது. ஸ்தல சயன பெருமாளும், திருவலந்தை வராகரும் சேர்ந்த ஒரே திவ்ய தேசம் இதுவென்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது..இந்தக் கோயிலைத் தவிர, மாமல்லபுரத்தில் ஆதி வராகர் மண்டபமும் உள்ளது. அருகில் அமைந்த வராகர் கோயிலான திருவிடந்தையும் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததே. இத்தலத்தைக் குறித்தும் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் நோக்குகையில் பல்லவர்கள் வராக மூர்த்தியின் தீவிர பக்தர்களாக இருந்திருக்க வேண்டும் என்று அறிய முடிகிறது. காலையில் மட்டுமே நடை திறந்திருக்கும் இந்தக் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோயில் அர்ச்சகர்களை அணுகலாம்.