அதிசயக் கதை – ஆச்சரிய அறிகுறிகள்!

அதிசயக் கதை – ஆச்சரிய அறிகுறிகள்!
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on

ஜி.எஸ்.எஸ்.

3-டி படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஏதாவது கதாபாத்திரம் ஒரு பொருளை வேகமாக வீசும். அது நம் முகத்தை நோக்கி வருவது போலத் தோன்றும். படம் பார்க்கும் யாராவது தனது கைகளைக் கொண்டு அந்தப் பொருள் தன் முகத்தில் படுவதைத் தடுக்க முயற்சித்தால் நாம் சிரிப்போம்.

வெகு தூரத்தில் ஒரு நாய் சென்று கொண்டிருக்கும். நம் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவனும் சிறுமியும் அந்த நாய் மிக அருகில் வந்து விட்டதாக எண்ணி நடுங்கினால், 'எதற்காக பயப்படுகிறாய்? அந்த நாய் எங்கேயோதானே இருக்கிறது!' என்று சமாதானப்படுத்துவோம்.

ஆனால், உடல் மற்றும் மன பாதிப்பு காரணமாக மேற்கூறிய விதங்களில் ஒருவர் செயல்பட்டால்…? அப்படி ஒரு குறிப்பிட்ட பாதிப்பை, 'ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்' என்ற கதாபாத்திரத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள்.

லிஸ் இன் ஒண்டர்லேண்ட் என்பது குழந்தைகளின் மனம் கவர்ந்த கதைகளில் ஒன்று. இதற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. உருவகமாக பல விஷயங்களை இது உணர்த்துகிறது. எனவே, பெரியவர்களுக்கான செய்திகள் இதில் பல உண்டு என்கிறார்கள் இலக்கியவாதிகள். தர்க்க ரீதியான பல விஷயங்களுக்கு சவால் விடும் கதையிது.

ஆலிஸ் ஒரு ஏழு வயதுப் பெண். தோட்டத்தில் அவள் ஒரு முயலைப் பார்க்கிறாள். அந்த முயல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே ஓடுகிறது. ஒரு மரத்தடியில் உள்ள பொந்துக்குள் அது செல்கிறது. அந்த மரப் பொந்தை குனிந்து பார்க்கும்போது அதற்குள் ஆலிஸ் விழுந்து விடுகிறாள். அங்கே அவள் பல கதாபாத்திரங்களை சந்திக்கிறாள். அவர்களில் பேசும் விலங்குகளும் உண்டு!

ருவித நரம்பு மற்றும் மனவியல் பாதிப்பை மருத்துவர்கள், 'ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் சின்ட்ரோம்' என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவேளை ஆலிஸ் போன்ற சாகச ஆர்வம் கொண்ட சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்தோ இது என எண்ண வேண்டாம். இது வேறு வகை.

இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் காட்சிகளை மாறுபட்டு உணர்வார்கள். அதாவது, நமக்கு சாதாரணமாகத் தெரியும் பொருள்கள் இவர்கள் கண்களுக்கு மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ தோன்றும். அதுமட்டுமல்ல; பரிமாணங்களை உணர்வதில் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும். ஐந்தடி தூரத்தில் உள்ள பொருள்கள் இரண்டடி தூரத்தில் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள். அல்லது பத்தடி தொலைவில் இருப்பதாகவும் எண்ணலாம்.

சில சமயம் கை கால்களை இயக்குவதில் சிக்கல்கள் நேரலாம். நினைவாற்றல் குறையலாம். ஒலிகளைக் கேட்பதில் மாறுபாடு உண்டாகலாம். என்றாலும், பெரும்பாலும் பார்வையில் உண்டாகும் மாறுபாடுதான் அதிக அளவில் இருக்கும். கூடவே நேரம் குறித்த தெளிவின்மையும் இருக்கும். அதாவது, நேரம் மிக மிக மெதுவாகப் போகிறது என்பதாக அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். சற்று தூரத்தில் மிக மெதுவாக ஒரு மாடு சென்று கொண்டிருந்தால், அது வேகமாக ஓடுவது போல இவர்களுக்குத் தோன்றும். இதன் காரணமாக உண்டாகும் குழப்பங்கள் அதிகம்.

சுற்றி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு குறித்து தெளிவு இருக்காது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு மனநலம் சரி இல்லை என்ற முடிவுக்கும் அவர்கள் வரக்கூடும்.

தற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்களால் இதுவரை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஆனால், தலையில் ஏற்பட்ட அடி அல்லது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி அல்லது சில வகை வைரஸ் தாக்குதல்கள் போன்ற காரணங்களால் மேற்படி பாதிப்பு உண்டாகக்கூடும் என்கிறார்கள்.

இந்த பாதிப்பு நிகழும்போது மூளையில் மிக அதிகமான மின் தூண்டல் நடைபெற்று, மூளைக்கு மிக அதிக அளவு ரத்தம் பாய்கிறது. இதன் விளைவாகத்தான் பார்வையில் கோளாறுகள் உண்டாகின்றன. கண்ணில்படும் பொருள்களின் அளவும் தூரமும் மாறுபட்டுத் தெரிகின்றன.

வயதானவர்களுக்கும் இந்த பாதிப்பு நேரலாம் என்றாலும், குழந்தைகளிடையே இது மேலும் சகஜமாகக் காணப்படுகிறதாம்.

லிஸ் இன் ஒண்டர்லேண்ட் சின்ட்ரோமுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உண்டானால் அவர்களை சிறிது காலத்துக்கு ஓய்வெடுக்கச் செய்யுங்கள். கூடவே அந்த அறிகுறிகள் ஆபத்தானவை அல்ல என்பதையும், அவர்கள் மனநலம் பாதிக்கப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மைக்ரேன் போன்றவை இதற்குக் காரணமாக இருந்தால் அதை சரி செய்தாலே அந்த பாதிப்பும் அடங்கிவிடும். தலையில் அடிபட்டதால் இந்த நிலை என்றால் அந்த அடிக்கு சிகிச்சை அளித்தாலே, ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் சின்ட்ரோமும் சரியாகிவிடும்.
பெரும்பாலும் நாட்கள் செல்லச் செல்ல இது தானாகவும் சரியாகி விடுகிறது. சில சமயம் மட்டும் தொடர் மருந்துகள் தேவைப்படும். இதை உங்கள் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com