
– நிவேதிதா, சென்னை
ஓவியம்: தமிழ்
பட்டிணம்தான் வந்து நானும் பத்து
வருஷம் ஆகிப்போச்சே!_ ஆனா
பாழாப்போன மனசு மட்டும்
பட்டிக்காட்ட தேடிப் போச்சே!
கேப்பங்கூழு ருசிக்கு ஏங்கி என்
நாக்கு செத்துப் போச்சே!_ திண்ண
கத நூறு கேக்க பலமைலு
தூரம் இதோ பயணமாச்சே!
வயக்காடு கடக்கையிலே ஏறு
மாடும் காணலையே!_ டிராக்டர்
வண்டி பாக்கையில சீவனில்லா
தொழிற்சால போல தோணுதலே!
ஆத்தோரம் போகையில தம்பட்டம்
தண்ணிகுடமும் காணலையே!_ குப்பகுளம்
பன்னிக்கூட்டம் பாக்கையில
உசுரே நின்னு போகுதலே!
மஞ்சதாவணி மல்லி மணமும்
மனச விட்டு நீங்கலேயே!_ சுடிதாரு
நயிட்டி பண்ணும் அட்டகாசம்
ரத்த கொதிப்பு கூடுதலே !
வீரனாரு கதசொல்ல அப்பத்தா
திண்ண பக்கம் காணலயே!_ அவுகக்கூட
மர்மதேசம் தேடி அந்த பெட்டி
முன்ன தவமா கெடக்குதலே!
எத எதயோ தேடி நானும்
ஊருபக்கம் வந்தேனலே! கொட்டிகிடந்த
அம்புட்டு அழகயும் பாழாப்போன
நாகரீகம் களவாடி போனதுலே!