முற்பகல் செய்யின்…

முற்பகல் செய்யின்…
Published on
ஒரு பக்கக் கதைகள்.
ஓவியம்: சேகர்                            

சிலுக்குவார்பட்டியில், முதல் பட்டதாரி வினூஷ். பெண்களில் தாமரை. சென்னையில் ஒரே கல்லூரியில் படித்து, காதலாகி, கசிந்துருகினர். தாமரை அழகு விழிகளை மலர்த்தி, ஐஸ்கிரீம் குரலில் "அத்தான்" என்றழைத்தால் உருகிடுவான் வினூஷ்.

"குட்டிம்மா, பக்கத்து ஊர் குழலியை எனக்கு நிச்சயிக்கிறாங்க. ஒரே பொண்ணு, நிறைய சொத்து. அம்மா வார்த்தையை மீற முடியல"

"தாயின் சொல்லே உனக்கு வேதவாக்கானால், நீ கட்டிலுக்கு வர வேண்டியதிருக்கவில்லை, தொட்டிலிலேயே இருந்திருக்கலாம்'என்னும் உமர்கயாம் வார்த்தைகள் தான் நினைவிற்கு வருது. என்னை விட பணம் பெரிசாயிடுச்சுல்ல அத்தான்?"

"லூசு, அவளை கட்டிக்கிறேன், உன்னை வைச்சுக்கறேன்…"

"நிறுத்துடா. இன்னிக்கு நீ விரும்பறவங்களுக்காக என்னை உதறிட்டல்ல? அதே ஆளுங்க உன்னை உதறுகையில் என் வலி உனக்குப் புரியும். எனக்காக நீ  ஏங்குவ". திரும்பி பாராமல் நடந்தாள் தாமரை.

அவள் சாபம் பலித்தது. குழலி மூன்றே மாதங்களில் வினூஷை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி, ஓவியா பிறந்து, மனைவியும், மாமியார் வீட்டினரும் செல்லாகாசாக அவனை அசிங்கப்படுத்த, குழந்தையின் எதிர்காலத்திற்காக பொறுத்தான் வினூஷ். அவ்வப்போது தாமரையின் கண்ணீர் குரல் அவனுக்கு அசரீரியாக ஒலித்தது. தாமரை என்ன ஆனாள் என்றே தெரியவில்லை.

அன்று அவனுக்கு நல்ல பசி. சாப்பாட்டை வைக்காமல் குழலி டிவியில் மூழ்கியிருக்க, ஓவியாவிடம், "அம்மாவை கூப்பிடும்மா' என்று சொல்ல, "போப்பா, உனக்கு வேலை இல்லை" என்று குழந்தையும் அலட்சியப்படுத்த, மனதொடிந்தான் வினூஷ். அப்போது டிவியிலிருந்து ஒரு பாடல் ஒலித்தது. அது…! தாமரையின் ஐஸ்கிரீம் குரல்…! அவள் இப்போது திரையுலகில் பெரிய பாடகி.

தாமரையின் துள்ளல், காதல் கொப்பளிக்கும் குரலை கேட்கையிலெல்லாம் வினூஷின் தலையில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது. அவன் செய்த நம்பிக்கை துரோகத்திற்கு காலம் அளித்த தண்டனைகள் சரியானவையே.
-வி.ஜி. ஜெயஸ்ரீ, சென்னை

================================= 

சூரசம்ஹாரம் ஸ்வாஹா…

சாயந்தரம் நடக்கும்  சூரசம் ஹாரம் பார்க்க சரசா காலையிலேயே தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள் . பால், பழத்தோட  ஆறு நாளும் விரதமிருந்து, இன்று சஷ்டியை பார்த்து விட்டு பச்சரிசி சாதம் சாப்பாட்டோட விரதம் கம்ப்ளீட் .

'இன்று புதன் கிழமை. கணவர்  வர ராத்திரி ஏழு மணியாகும் . அவர் வந்தால் நிச்சயமாக போக விட மாட்டார். அதற்குள்ளாற போயிட்டு

வந்துடலாம்.' நினைத்துக்கொண்டிருக்கும் போதே வாசல் கதவு தட்டும் சத்தம்.  'ஆஹா … என்றும் இல்லாத திருநாளாக இன்று கணவர் வந்துவிட்டார்.  இன்னிக்கு சூரசம்ஹாரம் பார்க்கப் போன மாதிரி தான்'மனதிற்குள் முனகிக் கொண்டே அடுக்களைக்குள் போனாள் சரசா.

"சூடா ஒரு டீயை ப்போடு." ஆர்டர் பன்னிவிட்டு டிவியில் மூழ்கிவிட்டான் மோகன்.

'இன்னிக்குன்னு பார்த்து செல்வி வேறு வரவில்லை. சூரசம்ஹாரம் பாக்கனும்னு லீவு போட்டுட்டா,' என்று நினைத்த படியே எரிச்சலோடு டீ பாத்திரத்தை தேய்க்கப்போனாள் சரசா.

"சே என்ன பொழைப்பு, செல்விக்கு இருக்குற ஃப்ரீடம்  கூட எனக்கில்லையே," மோகன் காதில் விழும்படி கத்தினாள்.

அவன் கண்டு கொள்ளவேயில்லை,இந்த லட்சணத்துல, எரியற நெருப்புல எண்ணைய விட்ட மாதிரி, எதிர் வீட்டுப் பெண் வேற…

"அக்கா வர்றீங்களா சூரசம்ஹாரம் பார்க்க போலாம்."

"நீ போயிட்டே இரு, நான் இவருக்கு டீ போட்டு குடுத்துட்டு வர்றேன். இல்லைன்னா இவர் என் தலைய எடுத்துடுவாறு. "எதிர்வீட்டுப்  பெண் பொங்கி  வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே கிளம்பிவிட்டாள்.

ஒரு வழியாக பாலை அடுப்பில் ஊற்றி, டீ த்தூளை போடும்போதே வேண்டிக்கொண்டாள் , 'முருகா எந்தத்   தடங்கலும் வந்துடக்கூடாது.' வேண்டி முடிவதற்குள் "டொக்… டொக் சத்தம். " பால்காரன் தான், இதோ நம்ம வீட்டு சூரன் வந்துட்டான்,"என்று சொல்லிய படியே,பால் சொம்போடு கதவை சரசா திறக்க, வந்தவரை "வாங்க" என்று சொல்ல கூட வாய் வராமல் திகைச்சுப்போய் நின்றாள் சரசா.

வந்தவரே வாயை திறந்தார்."அத்த  என்ன திகைச்சுப் போய் நின்னுட்டீங்க. நான்  தான் உங்க வீட்டு சூரன், மாப்பிள்ளை வந்திருக்கேன் "என்று சொல்லவும், வெட்கத்துடன் வந்த சிரிப்பை கையை வைத்து  மறைத்துக்கொண்டாள்.

" என்னங்க, மாப்ள  வந்திருக்காரு " என்றவாறு, அடுக்களைக்கு போனாள் டீ யை கன்டினியூ பண்ண.

மோகன் மெதுவாக சரசா  பக்கத்தில் போய் "சூரசம்ஹாரம் ஸ்வாஹா " என்று மாப்பிள்ளை இருக்கும் தைரியத்தில் சொல்லிவிட்டார்.

ஆனால், அவள் கோபப்படவில்லை. கையை விரித்துக்கொண்டு அவர் சொன்ன மாடிபிகேஷன், பாடி லாங்வேஜ்ஜை பார்த்து சிரிப்புதான் வந்தது அவளுக்கு.
-ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com