உண்ணுவதெல்லாம் உயர் உண்ணல்!

உண்ணுவதெல்லாம் உயர் உண்ணல்!
Published on

உலக உணவு தினம் (16.10.2021)

– ஜி.எஸ்.எஸ்.

மனிதன் தோன்றியபோதே, அவனது உணவுக்கான தேவையும் பிறந்துவிட்டது. அப்படியிருக்க ஐ.நா. சபை, உலக உணவு நாளாக அக்டோபர் 16ம் தேதியை கொண்டாடுவதேன்?

.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தனது இருபதாவது பொதுக்கூட்டத்தை நவம்பர் 1979ல் கூட்டியது. இதில் முக்கியப் பங்காற்றினார் ஹங்கேரியின் உணவு அமைச்சரான பால் ரோமேனி. அவரது ஆலோசனைதான் உலக உணவு தினமாக ஒன்றை நிச்சயித்து, அதைக் கொண்டாடலாம் என்பது. பல்வேறு உலக தினங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று இதைக் கொண்டாடலாம் என்று ஐ.நா.வில் தீர்மானிக்கப்பட்டது.

.நா.வின் மேற்படி அமைப்பு மட்டுமல்ல; உலக உணவு திட்டம், சர்வதேச வேளாண் முன்னேற்ற நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நாளைக் கொண்டாடுகின்றன. இன்று 150 நாடுகளில் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

தென்ன உலக உணவு தினம்? விதவிதமாகக் கிடைக்கும் உணவு வகைகளை அதிகம் தின்று தீர்ப்பதற்கான நாளா? அதுவும்தான். ஆனால், தினமும் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கான நாளாகவும் இதை நாம் கொள்ள வேண்டும்.

மிக அதிக முதலீடு தேவைப்படும் ஒரு துறை விவசாயம். ஆனால், பல நாடுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடுகள் என்பது இந்தத் துறையில் குறைவாகவே உள்ளன. போதிய உணவு இல்லாக் காரணமாக, ஏழை நாடுகளில் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்றால், மக்களின் தவறான உணவுப் பழக்கம் காரணமாக பணக்கார நாட்டு மக்களின் ஆரோக்கியமும் தொலைந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பொருளாதார பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தவரை உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நாட்டில் சுமார் நான்கில் ஒருவர் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே இருக்கிறார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் வருமான இடைவெளி என்பது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

உலகில் உண்ணும் வகையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்பது தாவரங்கள்தான் நம் உணவில் அறுபத்தி ஆறு சதவிகிதத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உணவு தானியங்களும் உணவுப் பொருட்களும் பல விகிதத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறன என்பதும் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. பதினான்கு சதவிகிதம் உணவு வீணாகிறது என்கிறார்கள்.

.நா. அறிவித்துள்ள பல சிறப்பு தினங்களில் பல்வேறு நாடுகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது உணவு உலக தினம். அரசுகள், வணிக நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள், ஊடகங்கள், பொதுமக்கள் என்று பலரும் இதைக் கொண்டாடுகிறார்கள். பசியால் வாடும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை வலியுறுத்துதல் ஆகியவை இந்த தினத்தின் முக்கிய நோக்கங்கள்.

உலக உணவுப் பரிசு என்ற ஒன்றும் உண்டு. இது ஒரு பன்னாட்டு விருது. இது மனித வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல பாடுபடும் தனிநபர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி உணவின் தரத்தையும், அளவையும், கிடைக்கும் தன்மையையும் கொண்டு அளவிடப்படுகிறது.

நோபல் பரிசு பெற்ற நார்மன் போர்லாக் என்பவரால் 1985ம் ஆண்டு இந்த பரிசுத் திட்டம் தொடங்கப்பட்டது. சஞ்சயா ராஜாராம், மோடடகு விஜய் குப்தா, சுரீந்தர் வசால், பி.ஆர்.பர்வாலே, குருதேவ் குஷ், வர்கீஸ் குரியன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய இந்தியர்கள் இந்தப் பரிசைப் பெற்றுள்ளனர்.

——————————

இது தெரியுமா?

நீங்கள் உணவுப் பிரியராக இருக்கலாம். அதீத ரசனையோடு உணவை உட்கொள்பவராக இருக்கலாம் என்றாலும், உணவுப் பொருட்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதை அறிந்துகொள்ள இதோ சில தகவல்கள் :

  • சோளத்திற்கு நாலாயிரத்துக்கும் அதிகமான பயன்கள் உள்ளன. உங்கள் செல்லப்பிராணியின் உணவு என்பதில் இருந்து, வாணவெடிகள் வரை அதற்குப் பல பயன்கள்.
  • பெரும்பாலான ஆரஞ்சுகளில் பத்து சுளைகள்தான் இருக்கும்.
  • உலகிலேயே அதிகமான மசாலா வகைகளைத் தயாரிப்பது இந்தியாதான்.
  • பாதாம் என்பது தாவரவியலின்படி விதைதான். கொட்டை அல்ல.
  • அப்போதுதான் பறிக்கப்பட்ட கிரான்பெரி என்றால், அதை கீழே போட்டால் துள்ளி எழும்.
  • வெள்ளரியில் 96 சதவிகிதம் தண்ணீர்தான்.
  • மகெய்ரோகோஃபோபியா (Mageirocophobia) என்றால் சமைப்பதில் அதீத பயம் என்று பொருள். இந்தத் தன்மை கொண்டவர்கள், 'சமையலறை பக்கம் போ' என்றாலே உடல் நடுங்கத் தொடங்கி விடுவார்களாம்.
  • மிக அதிக அளவில் கேரட்களை உண்டால் உங்கள் தோல் ஆரஞ்சு நிறத்துக்கு மாறலாம்.
  • விண்வெளியில் விளைவிக்கப்பட்ட முதல் தாவரம் உருளைக்கிழங்குதான்.
  • ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் என்ற உணவுப் பொருள் முதலில் உருவாக்கப்பட்டது பிரான்ஸில் அல்ல, பெல்ஜியத்தில்தான்.
  • ஜிலேபி என்பது மத்திய கிழக்கு நாடுகளில் உருவானது.
  • பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் காபியைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாது. பிரிட்டிஷ்காரர்கள்தான் அதை இங்கே அறிமுகப்படுத்தினார்கள்.
  • கருப்பு அரிசி என்பது இந்தியாவிலும் சீனாவிலும் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது. அது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
  • நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் கூட தங்கள் வீட்டில் தனியாக சமையலறை என்ற ஒன்றை வைத்திருந்தார்கள். அது வீட்டுக்குப் பின்புறம் அமைக்கப்பட்டது.
  • நம் உணவு ராஜ்ஜியத்தில் இரண்டறக் கலந்து விட்ட தக்காளி, உருளை, சர்க்கரை ஆகியவை இந்தியாவில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானவைதான். போர்த்துக்கீசியர்கள் வெள்ளை சர்க்கரையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் நாம் பழங்கள் மற்றும் தேனைக் கொண்டுதான் உணவில் இனிப்பை சேர்த்துக் கொண்டோம்.
  • அமெரிக்காவில் முதல் இந்திய உணவகம் 1960களில்தான் திறக்கப்பட்டது. இன்று அந்த நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய உணவகங்கள் இருக்கின்றன.

——————————

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

உணவும் குணமும்!

ணவுக்கும் குணங்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று பழைய நூல்களும் ஆய்வுகளும் கூறுகின்றன.

சாத்விக உணவு : பால், பழம், தேன், பருப்பு போன்றவை சாத்விக உணவுகளாகும். இவை உடல் நலத்துக்கு ஏற்றவை. இவை நற்குணங்கள் உருவாகவும் உதவுகின்றன.

ராஜச உணவு : காரம், புளிப்பு, துவர்ப்பு, மணமுள்ள பொருட்கள் ராஜச குணம் தருபவை. இதை அளவுக்கு மீறி உண்பதால், உடல் நலம் கெடும். மனஅமைதி கிடைக்காது.

தாமச உணவு : சமைத்து மூன்று மணி நேரத்துக்கு மேலானால் உணவின் சுவையும், சத்தும் குறையும். ஆறிய உணவு சோம்பல் தரும். தூக்கம் வரும். இதை கடவுளுக்கு படைக்கக் கூடாது. நாமும் உண்ணக் கூடாது.
ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

—————-

உணவு (பொன்) மொழிகள்!
  • தண்ணீர்தான் உணவுகளின் அரசன்.
  • பஞ்சத்தை விட, பெருந்தீனியே அதிகம் பேரைக் கொல்லும்.
  • பசியால் இறப்போரை விட, அதிகம் உண்பதால் இறப்போர் அதிகம்.
  • சமையலறை முதலில் வீட்டை விழுங்கி, பிறகு நம்மையும் விழுங்கிவிடும்.
  • ஆயுளை அதிகரிக்க உணவைக் குறைக்க வேண்டும். பல வகை உணவுகள் பலவித நோய்களுக்குக் காரணம்.
  • திட்டமிட்ட உணவு, மருந்தை விட வேகமாக நோயை குணப்படுத்தும்.
  • சமையல் எப்படி இருந்தாலும், பரிமாறுதல் அன்பாக இருக்க வேண்டும்.
  • பழம் சாப்பிடுபவர்கள், மருந்தைப் பற்றி விசாரிக்க மாட்டார்கள்.
  • பருத்த வயிற்றுக்கு மெலிந்த மூளைதான் அமையும்.
    பி.மஹதி, ஸ்ரீரங்கம்
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com