​அற்புதக் கோயிலும் அரிய தகவலும்!

​அற்புதக் கோயிலும் அரிய தகவலும்!
Published on

சொர்ணத்து மனை!

குருகுல வழக்கப்படி சங்கரர் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதன் முதலில் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையானவர் ஒருவரின் வீடு. 'பவதி பிட்சாந்தேஹி' எனக் குரல் கொடுத்த பாலகனுக்குக் கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லிமரம் ஒன்று இருந்தது.)

அவளது ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்க மழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்க நெல்லிக் கனிகள் குவிந்தன. அப்பாடல்தான் கனகதாரா ஸ்தோத்திரம்.

கேரள மாநிலம், காலடியில் இருக்கும் அந்த தங்க மழை பெய்த வீடு, 'சொர்ணத்து மனை' என அழைக்கப்பட்டு இன்றும் இருக்கிறது. தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த 'சொர்ணத்து மனை' முதலில் ஒரு சாதாரண ஒட்டு வீடாகத்தான் இருந்தது. தற்போது இந்த வீடானது 'சொர்ணத்து மனை' பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த வீடு 250 ஆண்டுகள் பழைமையானது. அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியாம் சங்கரனின் கருணைக்கும் சாட்சியானது இந்த வீடு…!

இந்தச் சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோயிலில் கனகதாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32ஆம் வயதில். எனவே, அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜபித்து அர்ச்சனை செய்கிறார்கள். அப்போது தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்து இவர்கள் பூஜை செய்கிறார்கள்.

வேதமே மலையாக அமைந்த கோயில்!

திருக்கழுக்குன்றத்தில் உள்ளது புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில். தாழக்கோயிலில் பக்தவச்சலலேஸ்வரரும் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் ஆலயமும் உள்ளது. இந்தக் கோயில்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன் 7ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.

திருக்கழுக்குன்றத்தில் நான்கு வேதங்களால் உருவான மலை மீது இந்த பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளதாக கூறுகிறது புராணம். இந்த மலையைச் சுற்றிலும் முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கு சிவபெருமான் அருள்பாலித்து முக்தி அளிப்பதற்காகக் காட்சியளித்தபோது அகத்தீய குளம், மூலிகைக் குளம், அக்னி குளம், லட்சுமி தீர்த்தம், ரிஷப தீர்த்தம் மற்றும் சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 14 தீர்த்தக் குளங்கள் அமைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இதில் சங்கு தீர்த்தக் குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை கோயிலின் தெற்கே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் மார்க்கண்டேய முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்தபோது வழிபாடு செய்ய, இந்தக் குளத்தில் சங்கு பிறந்ததாக ஐதீகம்.

நன்னீரில் சங்கு பிறப்பது அதிசயம். அதனாலேயே இந்தக் குளத்துக்கு, 'சங்கு தீர்த்தக் குளம்' எனப் பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். வேதமலையின் மீது பல அரிய வகை மூலிகைகள் உள்ளன. மழை காலத்தில் மலையில் இருந்து வரும் நீர்,கால்வாய்கள் மூலம் குளத்தில் சேகரமாகிறது.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261வது தேவாரத் தலமாகும். புராணக் கதைகளின்படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி, மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாகச் சொல்லப்படுகிறது.1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று கலசத்தைத் தாக்கி, அந்த துளை வழியா கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வேதகிரீஸ்வரர் ஆலயத்தை இரண்டு வெள்ளை கழுகுகள் வட்டமிட்ட பிறகுதான் உணவே உட்கொள்கிறது. இந்த இரண்டு கழுகுகளும் காலையில் காசி கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மதிய உணவுக்கு திருக்கழுக்குன்றம் வந்து உணவு சாப்பிட்டு, இரவு ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்கின்றன என்று தல புராணம் சொல்கிறது.

ஆர்.வி.ஆர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com