

கதை 1: வீடுபேறு
அரசன் ஒருவன் ஒரு துறவையிடம் சென்று, அவரது திருவடிகளை வணங்கி, "மகானே நான் வீடுபேறு அடைய வழி கூறுங்களேன்.." என்று கேட்டான்.
அதற்கு அந்த மகான், "அர்த்த ஜாம நேரத்தில் நீ அக்னீஸ்வரத்திற்கு சென்று, அருகில் உள்ள ஏழு சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்து வழிபட்டாயானால், உடனே வீடுபேறு கிடைக்கும்" என்றார்.
உடனே அரசன் குதிரையில் அமர்ந்து ஏழு சிவாலயங்களையும் குதிரையில் அமர்ந்தபடியே சுற்றி முடித்தான். அவன் ஏறி வந்த வந்த குதிரை திடீரென மறைந்தது. அவன் மட்டும் தரையில் நின்று கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த மகான், "ஏழு சிவாலயங்களையும் கால் கடுக்க சுற்றி வந்தது உன் குதிரை தானே. நீ அல்லவே.. சிவாலயங்களை சுற்றிய புண்ணியத்தால் உன் குதிரை வீடுபேறு அடைந்து விட்டது." என்றார்.
தவறை உணர்ந்த அரசன் வெட்கித் தலை குனிந்தான்.
கதை 2: கொடிய பாவம்:
துறவி ஒருவர் தன் சீடர்களிடம், "உங்கள் பெற்றோரை திட்டுவது கொடிய பாவம்.." என்றார்.
இதைக் கேட்ட சீடர்கள் வியப்படைந்தனர். அவர்களில் ஒருவன், "குருவே தன்னைப் பெற்ற தாய், தந்தையரை யாராவது திட்டுவார்களா?" என்று கேட்டான்.
அதற்கு அந்த மகான், "ஒருவன் இன்னொருவனுடைய தாய் தந்தையரை திட்டுகிறான்... அவன் கோபம் கொண்டு பதிலுக்கு இவனுடைய தாய் தந்தையரை திட்டுகிறான்.. அப்படியானால் முதலாவதாகத் திட்டியவன், தன் பெற்றோரை தானே திட்டிய பாவத்துக்கு ஆளாகிறான்.." என விளக்கம் கொடுத்தார்.