

அருள்மிகு பட்டீஸ்வரர் கோவிலில் (Perur Patteeswarar Temple) இறைவி பச்சை நாயகி. இங்கு பட்டீஸ்வரர் தன்னை வேண்டி தவம் புரிந்த காமதேனுவுக்கு காட்சிதந்து, முக்தி அளித்ததால் பிறவா நெறி தலம் என்ற பெயர் வந்தது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமான் புற்றுகளால் சூழ இடம் பெற்றிருந்தார். படைப்புத் தொழிலை செய்யும் ஆற்றலை பெற விழைந்த காமதேனு, இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒருநாள் தன் கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக்கொள்ள, அதை எடுப்பதற்காக தன்கொம்புகளால் புற்றைக் குத்திய போது லிங்க ரூபமாக இருந்த இறைவன் திருமேனியில் பட்டு இரத்தம் வரக்கண்டு வருந்தியது. இறைவன் அச்சுவடுகளை தமக்கு அடையாளமாக விரும்பி ஏற்று காமதேனுவுக்கு அருளினார்.
இறைவன் இங்கே வழிபடும் ஆன்மாக்களுக்கு முக்தியை வழங்குகிறார். கரிகால சோழனால் அமைக்கப்பட்ட இத்தலத்தில் பிரும்மா, விஷ்ணு, அதிமூர்க்கம் (காளி), காலவமுனிவர் ஆகியோரின் தவத்திற்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆனந்த திருநடனம் ஆடி காட்சி கொடுத்தது பங்குனி உத்திர திருநாள் ஆகும்.
இங்கு பட்டீஸ்வரர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். சிவலிங்கம் சதுர வடிவில் அமைந்து ஆவுடையாருடன் கூடியதாக உள்ளது. இதற்கு பல பெயர்கள் உண்டு. அவை பிறவா நெறித்தலம், மேலைச்சிவபுரி, பசுபதி புரம், ஆதிபுரி, மேருபுரம், குருக்ஷேத்திரம் என்பனவாகும். தற்போது பேரூர் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள தீர்த்தங்கள் சிருங்கதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், குண்டிகை, காஞ்சி மாத்தி தீர்த்தம் ஆகியவை. திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த கச்சியபமுனிவர் இத்தல புராணத்தை எழுதியுள்ளார்.
ஐம்பெரும் அதிசயங்கள் நிறைந்தது இத்தலம். அவைகளைப் பற்றி பார்ப்போம்...
எலும்பு கல்லாகுதல் :
இத்தலத்தை அடைந்தோர்க்கு அழியாநிலை ஏற்படும். இங்குள்ள நதியில் மனித அஸ்தியின் எலும்புகள் கல்லாக மாறும்.
இறவாப்பனை :
இத்தலத்தின் இறவாப்பனையின் வயது பல ஆண்டுகள் ஆகும். இறப்பே இல்லாது வாழ்வது இப்பனை. இத்தலத்தை அடைந்தோர் இறவாபலன் பெறுவர் என்பதை உணர்த்துகிறது.
பிறவாப்புளி :
இங்குள்ள புளிய மரத்தின் கனியின் விதைகள் முளைப்பதில்லை. இந்த இறவாப் புளி மரம் கோவில் எதிரே உள்ளது. இத்தலம் அழியா நிலை பெற்றது என்பதை காட்டுகிறது.
புழுக்கா சாணம் :
இங்கு மாட்டின் சாணம் எவ்வளவு நாள் ஆனாலும் புழுக்கள் உருவாவதில்லை. இத்தலத்தை அடைந்தோர்க்கு பிறப்பில்லை என்பதை உணர்த்துகிறது.
உயிர் பிரியலில் செவி மேலாக இருத்தல் :
இந்தத் தலத்தில் இறப்பவர் யாவரும், இறக்கும் சமயம் அவர்களின் வலது காது மேலாக இருந்தவாறே இறக்கின்றனர். காரணம் இறைவன் அவர்களது செவியில் திருவைந்தெழுத்தை உபதேசம் செய்து தன்னடியிற் சேர்த்துக்கொள்கிறான். ஆக, காசியைப்போல பிறவாப் பெருமையை கொடுக்கிறான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் கோவையில் அமைந்துள்ளது.