பால்கா மந்திர் (முக்தி துவாரகா) ஸ்ரீ கிருஷ்ணர் தன் அவதாரத்தை முடித்துக்கொண்ட இடம். பால்கா, சோம்நாத் கோயிலிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குஜராத் மேற்கு கடற்கரையில் உள்ள வெராவல் என்ற இடத்தில் கிருஷ்ணர் தனது இறுதி மூச்சை எடுத்துக்கொண்டார்.
ஜரா என்ற வேடுவன் எய்த அம்பினால் கிருஷ்ணரின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பின்னர், அக்காயங்களுடன் அவர் பால்கா மந்திர் எனப்படும் இடத்தை பலராமருடன் வந்தடைந்தார். வெராவலிருந்து அடிப்பட்ட காலுடன் நொண்டிக் கொண்டே வந்து, இங்குள்ள நதியில் இறங்கி மறைந்துவிடுகிறார். உடன் வந்த பலராமரும் கிருஷ்ணர் நதியில் இறங்கியவுடன் தானும் சர்ப்ப வடிவில் குகையில் மறைந்துவிடுகிறார்.
இங்கு கபிலா, இரண்யா, சரஸ்வதி மூன்று நதிகளின் சங்கமம் உள்ளது. அதற்கு எதிரில் சங்கர மடமும் உள்ளது. பால்கா மந்திரில் மணல் கற்களால் கட்டப்பட்ட அழகிய கிருஷ்ணர் கோயிலின் முற்றத்தில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. உள்ளே ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கும் அழகிய திரிபங்கி சிலை உள்ளது.
மகாபாரதத்தின்படி குருஷேத்திரப் போரில் காந்தாரியின் 100 மகன்களும் இறந்தனர். துரியோதனன் இறப்பதற்கு முன் தினம் கிருஷ்ணர் காந்தாரிக்கு ஆறுதல் சொல்ல, ஆத்திரமும் சோகமும் கொண்ட காந்தாரி, கிருஷ்ணனும், யதுகுல வம்சத்தைச் சேர்ந்த அனைவருடனும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்துவிடுவார் என்று சபித்தாள்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திருவிழாவில் யாதவர்களுக்கு இடையே சண்டை மூண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்றனர்.
யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு இறந்ததை எண்ணி மனம் வருந்தி சோம்நாத்தில் உள்ள பால்கா வனத்தில் ஒரு மரத்தின் அடியில் கால் மேல் கால் போட்டு படுத்திருந்தார் கிருஷ்ணர். அப்பொழுது அங்கு வந்த ஜரா என்ற வேடன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கிருஷ்ணரின் சிவந்த இடது பாதத்தை ஒரு மான் என்று தவறாக எண்ணி அம்பை எய்தி காயப்படுத்தினான்.
உண்மை அறிந்து வேடவன் மன்னிப்பு கோர, கிருஷ்ணர் "முற்பிறவியில் நீ வாலியாக இருந்தாய். நான் ராமனாக இருந்து உன்னை மறைந்திருந்து கொன்றதால் ஏற்பட்ட சாபம் இது" என்று அவனைத் தேற்றிவிட்டு அவனுக்கு முக்தியும் கொடுத்தார்.
கிருஷ்ணர், தான் பூமியில் அவதரித்த வேலை முடிந்து விட்டதால் பால்காவில் உள்ள நதியில் இறங்கி விட்டார். பிறகு பலராமரும் சர்ப வடிவில் பூமியில் இறங்கிவிட்டார். கிருஷ்ணரின் மரணம் துவாபர யுகத்தின் முடிவையும் கலியுகத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ஜென்மாஷ்டமி இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோயில் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். நிறைய பேருந்து வசதிகளும் வெராவலில் ரயில் நிலையமும் உள்ளது.