தீர்வு வேண்டி எந்த ஒரு விஷயமும் நம் காதுகளுக்கு வந்துவிட்டால், அதை செவிமடுத்து ‘வேண்டும்... வேண்டாம்’ என்று தீர அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும்.
‘அப்புறம் பார்த்துக்கலாமே’ என்று எதையும் தள்ளிப் போடக்கூடாது.
தள்ளிப் போடுகிற எந்த ஒரு காரியமும் மீண்டும் கையில் எடுக்கப்படுவதே இல்லை.
இதுதான் யதார்த்தம். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான ரகசியமும்கூட.
நாம் பார்ப்பதை, கேட்பதை, அனுபவிப்பதை அவ்வப்போது ரசித்துவிட வேண்டும். அந்த ரசனைமிகு தருணங்கள் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம். இப்படி ரசனையுடன் வாழும்போது, நம் முதுமையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
கூட்டுக் குடும்பம் அன்றைக்கு சாத்தியமாக இருந்தது. கூடி வசித்தோம். அதுவே இன்றைக்கு அசாத்தியமாகி விட்டது. விட்டு விலகி விட்டோம்.
மின்சாரமே இல்லாத கிராமத்து இருட்டு வீட்டில் சந்தோஷமாக வசித்தோம்.
இன்றைக்கு டிகாக்ஷன் போடுவதற்குக்கூட மின்சாரம் தேவைப்படுகிறது.
வளர்ந்து வருகிற விஞ்ஞானம்தான், பழசுகளைச் சிதைக்கிறது.
டி.வி. வந்த8பிறகு ரேடியோ காணாமல் போச்சு.
கம்ப்யூட்டர் வந்த பிறகு பேனா காணாமல் போச்சு.
கால்குலேட்டர் வந்த பிறகு, மனக் கணக்கு காணாமல் போச்சு.
மிக்ஸி வந்த பிறகு, அம்மியும் குழவியும் காணாமல் போச்சு.
கிரைண்டர் வந்த பிறகு, கல்லுரல் காணாமல் போச்சு.
வாஷிங் மெஷின் வந்த பிறகு, துவைக்கிற கல் காணாமல் போச்சு.
மோட்டார் வந்த பிறகு கிணறு காணாமல் போச்சு.
இப்படி நிறைய சொல்லலாம்.
ஆனால், இந்த செல்போன் வந்த பிறகு காணாமல் போன விஷயங்களைப் பட்டியல் இடவே முடியாது. அந்த அளவுக்கு அதிகம்.
முதியவர்களுக்கு இது போன்ற வசதிகள் அவ்வளவு சுவாரஸ்யப்படுவதில்லை. அவர்கள் மனம் இது போன்ற சாதனங்களில் லயிக்க மறுக்கிறது. இத்தனை வயதுக்கு மேல் இதைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிற மனோபாவம்.
என்றாலும், சில முதியவர்கள் நவீன டெக்னாலஜிக்கும் பழகி இருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு முன் சென்னை வடபழனியில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். கிழக்குத் தாம்பரம் நண்பர் சீதாராமனின் மகன் பிரசாந்த் திருமண நிகழ்வு.
ஒரு தாத்தா. 92 வயசு. அவரது ஒல்லியான தேகம் இன்றும் அப்படியே நினைவுக்கு வருகிறது. ரொம்ப ‘ஆக்டிவ்’வாக இருந்தார்.
தொலைக்காட்சிகளில் ஆன்மிக நிகழ்ச்சிகள் பார்ப்பவர் போலிருக்கிறது. என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சினூடே என்னுடைய வாட்ஸப் எண், முகநூல் ஐடி, வெப்சைட் முகவரி எல்லாவற்றையும் கேட்டுக் குறித்துக்கொண்டார். ‘இத்தனை வயதானவர் இவற்றை எல்லாம் ஏன் கேட்டு வாங்கிக் கொள்கிறார்?’ என்று வியப்புடன் அவரைப் பார்த்தேன்.
ஆனால், அன்று மாலையில் இருந்து வாட்ஸப் செய்திகள் வர ஆரம்பித்தன. முகநூலில் எனக்கு ‘ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்’ அனுப்பினார் (சமீபத்தில் அவர் இறந்து விட்டார் என்கிற தகவல் சோகமானது).
முதுமை எனப்படுவது என்ன?
இளமை எனும் இன்பத்தைக் கடந்துதான் முதுமை எனும் பேரின்பத்தை அடைய முடியும்.
இன்பத்தை விட பேரின்பம் இனிமையானது.
இளமையை விட முதுமை சுகமானது!
முதுமையை பலரும் சாபம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது, வரம்!
முதுமையை சுகமாக அனுபவிக்க ஒரு மனம் வேண்டும். அது எல்லா முதியவர்களுக்கும் வாய்த்து விடுவதில்லை.
என்னுடைய மாமனார் திருவையாறு எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, முதுமையை ஒரு வரமாக நினைத்து வாழ்ந்தார். வயது 84. கொரோனா கூத்தாடிய காலத்தில் இயல்பான மரணம் அவருக்கு வாய்த்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தியோகம். நீதிபதிகளுக்கு பி.ஏ.வாக இருந்துள்ளார். ரொம்பவும் கறாரானவர். பணியில் நேர்மையையும், உண்மையையும் கொண்டு வாழ்ந்தவர்!
தன் மகள் செல்லாவின் (என் மனைவி) திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறபோது என் ஜாதகமும் போய்ச் சேர்ந்திருக்கிறது. ‘பத்திரிகையாளராக இருக்கிறார்... சென்னையிலேயே இருக்கிறார்’ என்று சந்தோஷப்பட்டு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
எழுபது வயதுகளின் துவக்கத்தில் இருக்கிறபோதே ஒரு அரிசி மூட்டையைத் தன்னந்தனி ஆளாகத் தூக்கி வைத்து விடுவார். அந்த அளவுக்கு உடல்வாகு என் மாமனாருக்கு! சிறு வயதில் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்.
அப்போது ஒரு சைக்கிள் வைத்திருந்தார். லோக்கல் விஷயங்களுக்கு சைக்கிள்தான் (இந்த சைக்கிளை இப்போது நான் ஓட்டி வருகிறேன்). என் மகள் பிரியமதுரா, கிழக்கு தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் படிக்கிறபோது முன்பக்கம் அவளை ஒரு ஸீட்டில் உட்கார்த்தி வைத்து ஓட்டிச் செல்வார்.
காலம் ஓடியது. சைக்கிள் ஓட்ட முடியவில்லை.
டி.வி.எஸ். ஃபிப்ட்டி வாங்கினார். ஓட்டினார்.
ஒரு கட்டத்தில் அதன் பெடலை அழுத்தி ஸ்டார்ட் பண்ண முடியவில்லை.
எனவே, ஸ்கூட்டி பெப் வாங்கினார். பட்டனை அழுத்தினாலே ஸ்டார்ட் ஆகிவிடும்.
வருடங்கள் ஓடின. ஸ்கூட்டி பெப்பும் முடியவில்லை.
ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க வீடுதான் அவருக்கு எல்லாமே!
‘இருக்கிற இடம்தான் எனக்கு காசி, ராமேஸ்வரம், திருவையாறு’ என்று சொல்வார். முடியாமல் போனபிறகு தன் ஆசைகளைக் குறைத்துக்கொண்டார்.
திருவையாறு காவிரியில் அவர் நீச்சல் அடித்துக் குளித்தது ஒரு காலம் என்றிருக்க, இறப்புக்கு முன் வரை, நின்றுகொண்டு பாத்ரூமில் குளிப்பதில் சிரமம் ஏற்பட்டு, உட்கார்ந்து குளிப்பதற்கு வசதியான ஒரு நாற்காலியில்தான் குளியல்!
தரையில் உட்கார்ந்து வாழையிலையில் வரிந்து கட்டிச் சாப்பிட்டவருக்கு, கடைசிக் காலம் டைனிங் டேபிள்தான். சாப்பிட்டு முடித்த பின் அவர் மேலும், தரையிலும் ஒன்றிரண்டு பருக்கைகள் விழுந்திருக்கும்.
எந்தக் காய்கறியும் வேகவில்லை என்றால், கடித்துச் சாப்பிட முடியாது. இவருக்கென்றே குழைந்த சாதத்தைப் பரிமாறினாள் என் மனைவி.
வாக்கிங் ஸ்டிக்கோடு வீட்டுக்குள்ளேயே வாக்கிங்!
குளித்து முடித்தவுடன் ஸ்லோகம் படித்தல். அதன் பிறகுதான் சாப்பாடு.
நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரோடு பேச உட்கார்ந்தால், உற்சாகமாகி விடுவார். காது கேட்காது. கத்திப் பேச வேண்டும்.
இறுதி மூச்சு பிரிகிற வரை பழைய நினைவுகள் அப்படியே இருந்தன.
திருவையாறு சப்தஸ்தானப் பல்லக்கு, ஸ்ரீதர ஐயாவாள் கார்த்திகை அமாவாசை ஸ்நானம், திருப்புறம்பயம் தேனபிஷேகப் பிள்ளையார் உத்ஸவம்- இப்படிப் பல விசேஷங்கள் வருவதற்கு முன்னே எங்களுக்கு நினைவுபடுத்துவார்.
எங்கள் இல்லத்தில் அவருக்கு ரொம்ப பெட் என் மகள்தான். ஏதாவது நொறுக்குத் தீனி என்றால், என் மகளிடம்தான் கேட்பார். யாரிடமும் எதுவும் கேட்டுப் பழக்கம் இல்லை. அப்படியே வளர்ந்தவர்.
தினமும் சமையலுக்கு அவர்தான் காய்கறி நறுக்கித் தருவார்.
தன் பேரன் சுப்ரமணியனுக்கு அவ்வப்போது பென்சில் சீவிக் கொடுப்பார்.
தான் நீதிமன்றங்களில் பணிபுரிந்த திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற ஊர்க் கதைகளை மனைவி (என் மாமியார்) ராஜத்திடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்வார். தனது முதுமையையும் சுகமாக அனுபவித்தார்.
இந்த சுகத்தை இன்றைக்கு இருக்கிற முதியவர்கள் பலர், கோட்டை விடுகிறார்கள்.
எதுவும் நம் கையில் இல்லை எனும்போது நாம் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு நாளையும் அனுபவிக்க வேண்டும்.
நம்மைச் சுற்றி எத்தனை நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவற்றை ரசிக்க வேண்டும்.
கொஞ்சம் ரிலாக்ஸ்டாக என் அலுவலக பால்கனியில் நின்றால் எனக்கு ஒரு உற்சாகம் கிடைக்கிறது.
பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் பெயர் தெரியாத அழகழகான சிட்டுக் குருவிகள் வந்து போகின்றன. அதன் வண்ணங்களும் வாழ்வும் பிரமிப்பாக இருக்கின்றன.
எதிர் வீட்டுக்காரர் காகத்துக்கு இடும் உணவை, காகங்கள் சாப்பிட்டுப் போன பின், ரொம்பவும் பயந்து பயந்து அணில்கள் வந்து கொறிக்கின்றன.
இன்னொரு வீட்டு மொட்டைமாடியில் காய்ந்து போன துணிகளை அழகாக அங்கேயே மடித்துக் கொண்டு எடுத்துச் செல்கிறார் ஒரு முதியவர். இதில், அவரது மனைவியின் புடவையும் அடங்கும்.
நம்மைச் சுற்றி இப்படி எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன.
ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் மனம் வேண்டும்; பணம் அல்ல.
(தொடரும்)