வனவாசம் முடிந்த பிறகு ஸ்ரீராமபிரார் அயோத்திக்குக் கிளம்பத் தயாரானபோது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள் அவரை தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற ராமபிரான், மறுநாள் அவர்களை சந்திப்பதாக சொன்னார். தனது உருவத்தை ஒரு சிலையாக செய்து, தான் தங்கி இருந்த இடத்தில் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையை பார்த்தனர். அந்த சிலையின் அழகில் லயித்து ஸ்ரீராமபிரானிடம், ‘ராமா இந்த சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னை போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது? அதை நாங்கள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்’ என்றனர்.
ஸ்ரீராமர் ஒன்றும் தெரியாதவர் போல, ‘அப்படியா? அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதை விட, இந்த சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள் போலும்’ என்றார். சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள் தாங்கள் பூஜிக்க அந்த சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி ஸ்ரீராமர் அவர்களிடம் அந்தச் சிலையை கொடுத்துவிட்டு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் திருக்கண்ணபுரத்தை சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்தச் சிலையை பூஜித்து வந்தனர். மேலும், சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சனேயர் ஆகியோர் சிலையையும் வடித்தனர்.
தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டு வந்தபோது ஒரு நாள் மன்னரின் கனவில் தோன்றிய ஸ்ரீராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி கூறினர். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர், அந்த சிலைகளை மீட்டு வரும்வழியில் வடுவூரில் தங்கினார். அவரை சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே இந்த சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அந்த பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், அங்கேயே அந்த ஸ்ரீராமபிரான் சிலையை வைத்துவிட்டுச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்தில் ஒரு கல் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வடுவூர் கோதண்டராமர் கோயில் இப்படித்தான் உருவானது.
முன் மண்டபத்தில் ருக்மிணி, சத்தியபாமா உடன் கோபாலன் தனி சன்னிதியில் அருள்கிறார். ஸ்ரீராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவர்தான் மூலஸ்தானத்தில் இருந்தார். பிராகாரத்தில் ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர், ‘தெட்சிண அயோத்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது
மூலஸ்தானத்தில் சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயருடன் ஸ்ரீராமர் காட்சி தருகிறார். திருமார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்ராம மாலை அணிந்து இருக்கிறார். ஸ்ரீராம நவமியன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து வைக்கப்படுகிறது. அன்று மாலை இவர் சீதையுடன் புறப்படுகிறார். ராம நவமியை ஒட்டி இக்கோயிலில் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. வடுவூர் கோதண்டராமரிடம் வேண்டிக்கொள்ள, பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. பிள்ளைப் பேறு பெற்றவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.