

கதை 1: முயற்சி வெற்றி தரும் (life lesson short story)
ஒரு துறவி மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான். அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.
குழப்பத்துடன் சீடன், “ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.
கண் விழித்த குரு, சீடனைக் கண்டார். “சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார். சீடனுக்கு மனம் கேட்கவில்லை.
குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்தப் பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான். ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.
கண் விழித்த குரு சீடனை நோக்கி, "சொல்லியும் கேட்காமல், அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே..! பட்டாம் பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும். பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும்.
வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்...” என்று கடிந்து கொண்டார்.
சீடன் உண்மையை உணர்ந்தான்.
கதை 2: திருடர் பயம்! (life lesson short story)
ஒரு மகானுக்கு சீடன் ஒருவன் இருந்தான். இருவரும் ஒரு நாள் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சீடன் குருவிடம், "குருவே இந்தக் காட்டில் கள்ளர் பயம் உண்டா..?" என்று கேட்டான். குரு பதில் ஏதும் கூறாமல் நடந்தார்.
இருவரும் ஒரு ஆற்றங்கரையை அடைந்தனர். குரு முதலில் ஆற்றில் இறங்கிக் குளித்துவிட்டு கரைக்கு வந்தார். பின்னர் சீடன் தான் கொண்டு வந்த துணி மூட்டையை குருவிடம் ஒப்படைத்துவிட்டு குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். அந்த துணி மூட்டையில் தங்கக் கட்டி ஒன்று இருப்பதை கண்ட குரு, " ஓ.. இதனால்தானே நம் சீடனுக்கு பயம் உண்டாயிற்று.." என்று நினைத்து அந்த தங்கக் கட்டியை ஆற்று நீரில் வீசி விட்டார். பிறகு இருவரும் பயணத்தை தொடர்ந்தனர்.
வழியில் சீடன் கேட்டான், "குருவே.. கள்ளர் பயம் இக்காட்டில் உண்டா என்று கேட்டதற்கு நீங்கள் பதில் ஏதும் கூறவில்லையே..!".
மகான் சிரித்துக் கொண்டே கூறினார், "கள்ளர் பயம் ஆற்றங்கரையிலேயே நீங்கி விட்டது."