ஒரு சில குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை வளர்க்கிறவர்கள், பெரும்பாலும் சலித்துக்கொள்வார்கள். ‘ஏன்தான் கடவுள் எங்களுக்குன்னு இப்படி ஒரு சோதனையைக் கொடுத்திருக்கிறானோ’ என்று. இது சோதனை அல்ல என்று புரிந்துகொண்டவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு.
‘இத்தகைய குழந்தைகள் அமைவதெல்லாம் ஒரு வரம். இதை சாபம்னு நினைக்காதீங்கோ. இவாளுக்கு ஆசையே கிடையாது. இவர்களைப்போன்ற குழந்தைகளை வளர்ப்பதற்குக் கடவுள் உங்களைத் தேர்ந் தெடுத்திருக்கிறார். அவாளுக்கு எந்தக் குறையும் இல்லாம வளருங்கோ’ என்று அட்வைஸ் செய்கிற மகா பெரியவா பின்னர் சொல்வாராம்:
‘ஒரு சமயத்துல யோசிச்சா இவாளை மாதிரி நாமளும் பொறக்க மாட்டோமானு தோணும்.’
கோவை துடியலூரில் ‘வித்யா விகாசினி’ என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் என் நண்பர் டி.வி.சுரேஷ். ஆடிட்டரும்கூட. அவரது பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் டூ வரை உண்டு. இயல்பான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியில் அது மட்டுமல்ல.
‘சிறப்பு குழந்தைகள்’ என்று சொல்லப்படும் மாணவர்களுக்கும் அங்கே வகுப்புகளைப் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இதுபோன்ற மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது குறை என்ன என்று மருத்துவ ரீதியாகத் தெரிந்துகொண்டு, அவர்களும் வாழ்வில் நலம் பெற உரிய பயிற்சியாளர்களைக் கொண்டு அதற்கேற்றவாறு வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்த மாணவர்கள் தங்கி இருக்கக்கூடிய இடத்தில் (இங்கே கோசாலையும் உண்டு) கடந்த வருடம் எனது ஆங்கிலப் பிறந்த தினத்தை இந்தக் குழந்தைகளுடன் கொண்டாடினேன்.
அன்றைய தினம் காலையில் மாணவர்களுக்கு என் சார்பாக பிரேக் ஃபாஸ்ட் வழங்கப்பட்டது. பிறகு, மாணவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு எனக்கு ‘ஹேப்பி பர்த்டே’ பாடிய படியே சொன்னார்கள். குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கொண்டாடுவதை விட, இவர்களுடன் இணைந்து கொண்டாடிய அந்தப் பிறந்த நாள் விழா மறக்க முடியாத ஒன்று.
இந்தப் பாக்கியத்தை அன்று எனக்கு வழங்கியவர் நண்பர் டி.வி. சுரேஷ்!
‘ஒவ்வொரு மாணவன், மாணவியைத் தனிப்பட்ட முறையில் பரீட்சித்துப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்தால், வாழ்வில் அவனால் முன்னேறி விட முடியும்’ என்பார் சுரேஷ்.
இதற்கென்றே உள்ள சிறப்பு ஆசிரியர்கள் இந்த மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். அந்த ஆசிரியர்களுக்கு எப்பேர்ப்பட்ட பொறுமை வேண்டும், யோசித்துப் பாருங்கள்!
சும்மா பேருக்காகவும், புகழுக்காகவும் இந்த ஸ்பெஷல் பள்ளி நடத்தப்படவில்லை. சமூகத்தில் ஒரு சிலருக்காவது நாம் ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் இதை நடத்தி வருகிறார் சுரேஷ்.
இந்த மாணவர்களை சுமார் ஒரு சில நிமிடங்கள் பார்த்தாலே, நம் கண்கள் பனிக்கத் துவங்கும்.
இப்போது சொல்லுங்கள்... இவர்கள் வரமா? சாபமா?
கடவுள் படைப்பில் எதையும் யாரையும் நாம் குறை சொல்லக்கூடாது.
எங்கள் இல்லத்திலும் இதுபோன்ற ஒரு வளர்ப்பு உண்டு. என் மனைவி செல்லாவின் அக்காள் புவனேஸ்வரியின் ஒரே மகன் சுப்ரமணியன்.
இவன் பிறந்த தேதியை யாராலும் மறக்க முடியாது.
8.8.88.
ஒரு 8 வாழ்க்கையில் இருந்தாலே சிலர் பயப்படுவார்கள். வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், வீட்டு எண் போன்றவற்றில் 8 வராமல் பார்த்துக்கொள்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். சுப்ரமணியனுக்கோ நாலு 8.
இப்போது முப்பத்தைந்து வயது.
ஸ்பெஷல் சைல்டு.
சில நேரங்களில் ஏதோ உலகத்தில் இருப்பான் சுப்ரமணியன். நாம் அழைத்தாலும் காதில் விழாது. தனியே பேசிக்கொண்டிருப்பான். வீட்டுக்குள் சகட்டுமேனிக்கு நடந்துகொண்டே இருப்பான். யார் என்ன வேலை சொன்னாலும், முகம் சுளிக்காமல் செய்வான். ஆனால், அந்த வேலையில் ஒரு பூரணத்துவம் இருக்காது.
ஒரு பக்கெட் தண்ணீரைக் கொண்டு வரச் சொன்னால், எடுத்து வருகிறபோது ஆங்காங்கே தளும்பிச் சிந்துமாறு கொண்டு வருவான். அதில் கவனம் இருக்காது. தனியே குளித்துவிட்டால், உடலில் ஆங்காங்கு சோப்பு தென்படும். இன்னொருவர் துவட்ட வேண்டும்.
அவனுக்கு எத்தனையோ டாக்டர்கள், வைத்தியங்கள் எல்லாம் பார்த்தாயிற்று. இனியும் எந்த ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போகும் எண்ணம் எங்களுக்கு இல்லை. சந்தோஷமாக இருக்கிறான். இனியும், இதே சந்தோஷத்தோடு அவன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.
அவனுடைய பிறந்த நாள் வந்துவிட்டால் போதும். உற்சாகமாகி விடுவான். காலண்டர் பார்த்து எங்களுக்கு அந்தத் தேதியை நினைவூட்டிக் கொண்டே இருப்பான்.
‘என் பொறந்த நாளை ஃபேஸ்புக்ல போடுங்க சித்தப்பா’ என்று மழலையில் சொல்வான்.
என்னுடைய ப்ரொகிராம் டைரியை அடிக்கடி பார்த்துவிட்டு, அவற்றை நினைவில் வைத்துக்கொண்டு எனக்கு நினைவூட்டுவான்.
எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். ஆசைப்பட மாட்டான். சோம்பேறித்தனம் கொஞ்சமும் இல்லை. எத்தனை வேலை சொன்னாலும் கோபப்படாமல் செய்வான்.
அடிக்கடி அவனிடம் சொல்லிச் சொல்லி மூன்று வேளையும் அனுஷ்டானம் செய்து வருகிறான். எதை மறந்தாலும் இதை மறக்க மாட்டான். ஆனால், காயத்ரி ஜபம் மட்டும்தான் பிரதானமாக இருக்கும். மந்திர உச்சரிப்பெல்லாம் அவனிடம் எதிர்பார்க்க முடியாது.
ஒவ்வொரு நாள் விடியலிலும் பெரும்பாலும் அவன் முகத்தில்தான் விழிப்போம். சிரித்துக்கொண்டே ‘குட்மார்னிங்’ சொல்லுவான்.
எங்கள் வீட்டில் சுப்ரமணியன் இல்லாத ஒரு பொழுதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அவன் லெவலுக்கு இறங்கி நானும், என் மனைவியும், மகளும் விளையாடிக்கொண்டிருப்போம். சொல்லப் போனால், எங்கள் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருப்பதே அவன்தான்!
வகுப்புக் கணக்கைக் கற்றுத் தர ஆசிரியர்கள் உண்டு.
வாழ்க்கைக் கணக்கை அவரவர்களே கற்றுக்கொள்ள வேண்டும்.
என் இதயத்தைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர் அடியேன் வாழ்க்கையில் உண்டு.
ஒருவரைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். என்றும் என் நீங்கா நினைவில் இருப்பவர்!
9ஆம் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் திரு. எஸ். முத்துக்குமாரசாமி என்கிற எஸ்.எம்.கே.!
தடிமனான கண்ணாடி. நெற்றியில் திருநீறு. பேண்ட் - சட்டை. கும்பகோணத்தில் கற்பகம் தியேட்டர் தாண்டி இருக்கிற நாணயக்காரத் தெருவில் இருந்தார். தெருவின் பெயருக்கு ஏற்ப எஸ்.எம்.கேவும் நாணயமானவர். நேர்மையானவர்.
சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவார். (இந்த வரியை டைப் செய்யும்போது அவர் எப்படி சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவார் என்பது அப்படியே என் கண்களுக்கு முன்னால் படம்போல் ஓடுகிறது.)
அதிர்ந்து பேச மாட்டார்; கோபப்பட மாட்டார். எல்லா மாணவர்களுக்குமே இவரை ரொம்பவும் பிடிக்கும்.
ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ படிக்கும்போது இவரிடம் டியூஷன் போனேன். மாதம் இருபத்தைந்து ரூபாய் என்று நினைக்கிறேன். அதுவும் அவர் எனக்குச் சொல்லவில்லை. அவரிடம் படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் சொன்னான் நான் டியூஷன் சேரும்போது.
இவரைப் பற்றி இன்னும் சொல்கிறேன்.
(தொடரும்)