கடவுளர் (வசிக்கும்?) வசித்ததாக போற்றப்படும் புனித தலங்கள்!

Places
Places
Deepam strip

உலகெங்கிலும் பல்வேறு மத மற்றும் கலாச்சார மரபுகளின்படி கோவில்களும் புனித ஸ்தலங்களும் ஏராளம் உள்ளன. ஒரு சில ஸ்தலங்களில் கடவுள்கள் வசித்ததாகவோ அல்லது பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்ததாகவோ வரலாற்றில் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட புனித ஸ்தலங்கள் போற்றப்படுவது மட்டுமல்லாமல், மகத்தான ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. இந்த ஸ்தலங்கள் தெய்வீக தொடர்பைத் தேடும் யாத்ரீகர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கின்றன.

1. நிதிவனம், பிருந்தாவன்:

Vrindavan
Vrindavan

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஒரு புனிதத் தோப்பான நிதிவனம், கிருஷ்ணரின் தெய்வீக விளையாட்டு மைதானமாக நம்பப்படுகிறது. இந்த காட்டுப் பகுதியில் தினமும் இரவு நேரத்தில் பகவான் கிருஷ்ணர் அவர்கள் ராதை மற்றும் கோபியர்களுடன் தனது தெய்வீக ராச லீலையை நிகழ்த்துவதாக நம்பப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு யாரும் புனிதத் தோப்பில் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் நிதிவனத்தில் உள்ள துளசி செடிகள் இரவில் கோபியர்களாக மாறுவதாகவும் நம்பப்படுகிறது.

2. வாரனாசி அல்லது காசி:

Varanasi
Varanasi

உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான வாரனாசி அல்லது காசி, சிவபெருமானின் வசிப்பிடமாக நம்பப்படுகிறது. இங்கு வந்து தரிசனம் செய்தால் பக்தர்கள் மோட்சத்தை அடைய முடியும் என்று நம்புகிறார்கள். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில், மோட்சத்தை நாடும் யாத்ரீகர்களுக்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாகும். வாரனாசி இந்துக்களின் புனிதமான யாத்திரைத் தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.

3. அயோத்தியா, இராம ஜென்ம பூமி:

Ayodhya
Ayodhya

இராமர் பிறந்த இடமும் வசிப்பிடமுமான அயோத்தி, இந்துக்களின் மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். தற்போது ஒரு பிரமாண்டமான கோயில் அமைந்துள்ள ராம ஜென்மபூமி தலமானது அவர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. இது ஒரு முக்கியமான புனித யாத்திரைத் தலமாக அமைகிறது. ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் அயோத்திக்கு வருகை தருகின்றனர்.

4. அமர்நாத் குகை:

Amarnath cave
Amarnath cave

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை, இந்து புராணங்களின்படி, பார்வதிக்கு அழியாமையின் ரகசியங்களை சிவபெருமான் வெளிப்படுத்திய இடமாகும். அமர்நாத் குகை இந்துக்களுக்கு ஒரு முக்கியமான புனித யாத்திரைத் தலமாகும், ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள்.

5. கைலாஷ் மலை, திபெத்:

Mount Kailash
Mount Kailash

இந்து மதத்தில் கைலாய மலை சிவபெருமானின் வசிப்பிட பூமியாகக் கருதப்படுகிறது. இங்குதான் சிவனும் பார்வதியும் வசிப்பதாக நம்பப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில், இது ஒரு தந்திர தெய்வமான டெம்சோக்குடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. இந்த மலை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் போன் மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு புனித யாத்திரைத் தலமாகும். கைலாய மலையில் ஏறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மலையைச் சுற்றி கோரா என்னும் நடைமுறையானது அனுசரிக்கப்படுகிறது.

6. மவுண்ட் ஒலிம்பஸ், கிரீஸ்:

Mount Olympus
Mount Olympus

பண்டைய கிரேக்க புராணங்களின்படி, கிரேக்கத்தின் மிக உயரமான சிகரமான ஒலிம்பஸ், ஜீயஸ் தலைமையில் ஒலிம்பிக் கடவுள்களின் தெய்வீக வசிப்பிடமாக நம்பப்பட்டது. இந்த மலையில் கடவுள்கள் பிரபஞ்சத்தை ஆள ஒன்று கூடினர் என்றும் நம்பப்பட்டது. இது அக்காலத்தில் தீவிரமாக வழிபடும் இடமாக இருந்தது. இன்று, ஒலிம்பஸ் மலை ஒரு கலாச்சார மற்றும் வரலாற்று சின்னமாக உள்ளது.

7. ஜெருசலேம், இஸ்ரேல்:

Jerusalem
Jerusalem

ஜெருசலேம் யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கும் புனித நகரமாக கருதப்படுகிறது. யூத மதத்தில், கடவுளின் பிரசன்னம் ( ஷெக்கினா ) முதல் மற்றும் இரண்டாவது கோயில்களில் உள்ள மகாபரிசுத்த ஸ்தலத்தில் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. கிறிஸ்தவத்தில், இது கடவுளின் மகனாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்துவுடன் தொடர்புடையது. அவர் இங்கு தான் பிரசங்கித்தார். இஸ்லாத்தில், பாறை குவிமாடம் நபிகள் நாயகம் சொர்க்கத்திற்கு ஏறிய இடத்தைக் குறிக்கிறது.

8. தியோதிஹுகான்(Teotihuacan) மெக்சிகோ:

Teotihuacan
Teotihuacan

சூரியன் மற்றும் சந்திரனின் பிரமிடுகளைக் கொண்ட பண்டைய நகரமான தியோதிஹுவாகன், மீசோஅமெரிக்க நாகரிகங்களுக்கு ஒரு ஆன்மீக மையமாக இருந்தது. இது கடவுள்கள் வசிக்கும் இடமாக நம்பப்பட்டது. இறகுகள் கொண்ட பாம்புக் கடவுள் குவெட்சல்கோட்ல் இந்த இடத்துடன் தொடர்புடையவர்.

9. உலுரு (அயர்ஸ் ராக்), ஆஸ்திரேலியா:

Uluru
Uluru

ஆஸ்திரேலியாவின் அவுட்பேக்கில் உள்ள ஒரு பெரிய பாறை அமைப்பான உலுரு, அனங்கு மக்களுக்கு புனிதமானது. இது தெய்வீக மனிதர்கள் வாழ்ந்த ஆன்மீக காலத்தில் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். தெய்வீக மனிதர்கள் இன்னும் இப்பகுதியில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com