

மனிதப் பிறவி எடுத்த பிறகு இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? நமக்கு இருக்கும் அரை ஜான் வயிற்றுக்காகத்தான். மூன்று வேளை பசிக்கவில்லை, மூன்று வேளை சாப்பாடு தேவையில்லை என்றால் இந்த உலகம் இயங்குவதில் ஒரு அர்த்தமும் கிடையாது. இதைத் தாண்டி பொன், பொருள், வீடு இவை எல்லாம் நம்முடைய அடுத்தடுத்த தேவைகளுக்குத்தான். முதன்மையாக நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்குத் தேவை சாப்பாடு. உணவுப் பொருளுக்கு தெய்வம் என்றால் அவள் அன்னபூரணி. இந்து சாஸ்திரப்படி நமக்கு சோறு போடும் தெய்வமான இந்த அன்னபூரணியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்.
அன்னபூரணி வழிபாடு செய்யும் முறை: நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த அசைவ சாப்பாட்டிற்கும் கடவுள் இந்த அன்னபூரணி தாய்தான். ஆகவே, உங்களுடைய வீட்டிலும் அன்னபூரணியை வைத்து வழிபாடு செய்யலாம். அன்னபூரணி தாயின் சிலை அல்லது திருவுருவப்படம் எதை வைத்து வழிபாடு செய்தாலும் நல்லது. அன்னபூரணி சிலையாக இருந்தால் அதை சிலர் பூஜை அறையில் வைத்திருப்பார்கள். சில பேர் சமையல் அறையில் வைத்திருப்பார்கள். அசைவம் சமைக்கக் கூடிய இடத்தில் சுவாமி படத்தை வைத்து வழிபாடு செய்வதை நமது மனம் ஏற்றுக் கொள்ளாது. ஆகவே, நீங்கள் அசைவம் சமைப்பவர்களாக இருந்தால் அன்னபூரணி சிலையை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.
சைவம் மட்டும் சமைப்பவர்கள் அன்னபூரணியை சமையலறையிலேயே வைக்கலாம். சில பேர் வீட்டில் சமையல் அறையும் பூஜை அறையும் ஒன்றாக இருக்கும். அப்படி இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பூஜை அறையில் அன்னபூரணியை வைத்து வழிபட்டுக் கொள்ளலாம். இதனால் எந்தத் தவறும் கிடையாது. அசைவம் சமைக்கும்போது சுவாமி அறைக்கு திரை போட்டு விட வேண்டும்.
அன்னபூரணி சிலையை வைக்கும் சரியான முறை: அன்னபூரணி சிலையை நீங்கள் பூஜை அறையில் வைத்திருந்தாலும் சரி, சமையல் அறையில் வைத்திருந்தாலும் சரி, அன்னபூரணி சிலையை பச்சரிசியின் மேல் அல்லது பச்சரிசி நெல்லின் மேல் அமர வைப்பது மிகவும் நல்லது. ஒரு பித்தளை கிண்ணம், பித்தளை டம்ளர் எதுவாக இருந்தாலும் அது நிரம்ப பச்சரிசி அல்லது நெல் கொட்டி அதன் உள்ளே அன்னபூரணியின் சிலையை அமர வைக்க வேண்டும். அன்னபூரணியின் சிலை அரை அங்குலமோ, ஒரு அங்குலமோ அந்த நெல்லில் புதைந்திருக்கும்படி வைக்க வேண்டும். இந்த பச்சரிசியில் நான்கு துவரம் பருப்பு, 2 ஏலக்காய், 2 கிராம்பு, போட்டு வைப்பது மிகவும் சிறப்பு. முடிந்தால் இதில் ஒரு வெள்ளி நாணயம் வைக்கலாம். இல்லை என்றால் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.
இல்லத்தில் அன்னபூரணி சிலை இருந்தால் தினமும் உங்களுடைய வீட்டில் சமைத்த பிறகு, நீங்கள் சமைத்த உணவை இந்த அன்னபூரணியின் சிலைக்கு நிவேதனமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் சரியான முறை. கூடவே ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை வைத்து வணங்க வேண்டும். இப்படி முறையாக அன்னபூரணியை எவர் வீட்டில் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுடைய வீட்டில் சாப்பாட்டுக்கு பிரச்னையே இருக்காது. சமைத்த சாப்பாடு வீணாகாது. வீட்டில் இருப்பவர்கள் நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழும் சூழ்நிலையை அன்னபூரணி தாய் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பாள். அன்ன தோஷம், அன்ன தரித்திரம் விலக அன்னபூரணி தாயை மேற்சொன்ன முறைப்படி வழிபாடு செய்து வாருங்கள். நிச்சயம் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here