கார்த்திகை தீபம் ஜொலிக்க…

கார்த்திகை தீபம் ஜொலிக்க…

Published on

பழைய அகல் விளக்கை சுலபமாக சுத்தம் செய்வோம்: நிறைய பேர் கார்த்திகை தீபத்துக்கு வருடக்கணக்கில் ஏற்றிய பழைய விளக்குகளை எடுத்து வைத்திருப்பார்கள். அது கறி பிடித்து அழுக்காக இருக்கும். எரிகின்ற அடுப்பின் நெருப்பில் பழைய அகல் விளக்குகளைப் போட்டு எரித்து சூடு தணிந்ததும், அதை எடுத்து மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி வெயிலில் காய வைத்தால் அவை புது விளக்குகள் போல மாறிவிடும். அதற்கு வழியில்லை என்பவர்கள் ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி, பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி, அதில் பழைய மண் அகல் விளக்குகளை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு நல்ல தண்ணீரில் கழுவி அதன் பின்பு அதை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளலாம்.

புதியதாக அகல் விளக்குகளை கட்டாயமாக கார்த்திகை தீபத்துக்காக நாம் வாங்க வேண்டும். அதை சுத்தமான மண் அகல் விளக்காகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதையும் ஒற்றைப்படையில் வாங்க வேண்டும். 5, 7, 11 என்ற கணக்கில் வாங்கி அந்த விளக்கை சுடுதண்ணீரில் போட்டு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கலாம். முடிந்தால் இரவு முழுவதும் அதை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும். இப்படி தண்ணீரில் ஊற வைத்த விளக்கை சிறிது நேரம் வெயிலில் காயவைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து தீபத்தன்று விளக்கு ஏற்றலாம். தீபத்துக்கு முந்தைய நாளே மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து விளக்குகளைத் தயார் செய்து வைக்க வேண்டும்.

விளக்கில் எண்ணெய் கசியாமல் இருக்க: வாங்கிய புது அகல் விளக்கு, பழைய அகல் விளக்கு எல்லாவற்றையும் சுத்தம் செய்து, அவற்றுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும். உங்கள் வீட்டில் பழைய நெயில் பாலிஷ் இருந்தால் அடிப்பக்கம், உள்பக்கம் மட்டும் அந்த வர்ணத்தை தீட்டிக் கொள்ளுங்கள். குழந்தைகள் பெயிண்ட் பண்ணுவதற்காக வீட்டில் வைத்திருக்கும் கலரை கூட பிரஷில் தொட்டு அகல் விளக்கின் மேல் தீட்டி வெயிலில் காய வைத்து விட்டால், விளக்கிலிருந்து எண்ணெய் கசியாமல் இருக்கும். மேலும், விளக்குக்கு அடியில் அட்டை, ஃபாயில் பேப்பர் என்று வைத்து விளக்கு ஏற்றுவதைவிட, வெற்றிலை, செம்பருத்தி இலை, அரச இலை, இவற்றுக்கு அடியில் மண் அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுவது சிறப்பு. தரையிலும் எண்ணெய் வடியாமல் இருக்கும்.

தீபம் காற்றில் அணையாமல் எரிய: வெளியில் கோலத்தின் மேல், பால்கனியில் வைக்கும் விளக்குகள் பெரும்பாலும் காற்றில் அணைந்து விடும். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்னரே விளக்குக்குப் போடவிருக்கும் திரிகளை தடிமனாக திரித்து தயார் செய்து கொள்ளுங்கள். அவை பஞ்சு திரியாக, நூல் திரியாக எதுவாக இருந்தாலும் அதை இரண்டு திரிகளாக திரித்து தடிமனாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் திரியில் முன்கூட்டியே நல்லெண்ணெய் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். (எண்ணெயில் திரி இரண்டு நாள் நன்றாக ஊற வேண்டும்.) அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றிவிட்டு, ஊற வைத்திருக்கும் திரிகளை எண்ணெயில் போட்டு, திரிக்கு முனையில் கொஞ்சம் கற்பூரத்தை தூள் செய்து வைத்து விட வேண்டும். இப்படி நல்லெண்ணையில் முன்கூட்டியே ஊற வைத்து, திரியின் முனையில் கற்பூரம் வைத்து தீபம் ஏற்றும்போது விளக்கு நின்று எரியும். சீக்கிரம் காற்றில் அணையாது.

logo
Kalki Online
kalkionline.com