மால்மருகன் அவதார வைகாசி விசாகத் திருநாள்!

மால்மருகன் அவதார வைகாசி விசாகத் திருநாள்!

திருமால் மருகனாம் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் அவதரித்தத் திருநாள் வைகாசி விசாகம். அநேகமாக, வைகாசி மாத பௌர்ணமி நாளன்று விசாக நட்சத்திர வரும். இந்த தெய்வீகத் திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால், ‘வைகாசி விசாகம்’ என்று சிறப்பித்து கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களாகக் கருதப்படுபவை கிருத்திகை, பூசம் மற்றும் விசாகம். மாதாமாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். தை மாதம் வரும் பூச நட்சத்திரமும், வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரமும் முருக வழிபாட்டுக்குரியவை. இதில் வைகாசி விசாகம் முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதார நிகழ்வுக்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. தாரகாசுரன், சூரபத்மன், சிங்கமுகன் என்ற மூன்று அசுரர்கள் பூமியிலும், தேவலோகத்திலும் பெருத்த அழிவை ஏற்படுத்தினார்கள். அவர்கள் சிவபெருமான் மகனின் கரங்களால் மட்டுமே இறக்க வேண்டும் என்னும் வரம் பெற்றனர்.

தேவர்கள் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஈசனிடம் முறையிட, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகள் வெளிப்பட்டன. அந்தத் தீப்பொறிகளை அக்னி தேவரும், வாயு தேவரும் எடுத்துச் சென்று கங்கையில் சமர்ப்பிக்க, கங்கா தேவி அவற்றை சரவணப்பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய, அங்கே ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் அருமையான குணங்களுடன் ஆறு அழகான குழந்தைகளாக உருவான முருகனை கார்த்திகைப் பெண்டிர் அறுவர் வளர்க்கின்றனர். பார்வதி தேவி அங்கே வந்து ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து ஆரத்தழுவ, ஓருடல், ஆறு முகங்கள், பன்னிரு விழிகள், பன்னிரு கரங்களுடன் அங்கே திருமுருகன் உருவாகிறார். இந்த வைபவம் வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெற்றதால், இதுவே முருகனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

கங்கையால் கொண்டு செல்லப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப்பொய்கையில் பொறிகள் தெறித்து விழுந்ததால் சரவணன் என்றும், கார்த்திகைப் பெண்டிர் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், வைகாசி நட்சத்திரத்தில் அவதரித்ததால் விசாகன் என்றும், என்றும் இளமைத் தோற்றத்தோடு இருப்பதால் குமரன் என்றும் ஆறு முகங்களையுடையதால், ஆறுமுகம், சண்முகம் என்றும் பல்வேறு பெயர்களில் முருகப்பெருமான் துதிக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். தைர்யம், வீரம், வீடு, மனை, வகனப் பிராப்தி, ரத்த சம்பந்தமான உறவுகள், செல்வம் போன்ற பல விஷயங்களுக்கு அதிபதி முருகக்கடவுளே.

அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கே வைகாசி விசாகம் பத்து நாட்கள் திருவிழாவாகக் அனுசரிக்கப்படுகிறது. வைகாசி விசாகத் திருநாளன்று பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை பக்திபூர்வமாக மக்கள் வழிபடுகின்றனர். முருகன் மட்டுமல்லாது, சிவன் மற்றும் அம்பிகை வழிபாடும் இந்தத் திருநாளில் செய்யப்படுகிறது. வைகாசி விசாகம் வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும்படி வைத்து, இறைவனுக்கு வெப்ப சாந்தி உத்ஸவம் நடைபெறும். இந்த நாளில் முருகனுக்கு வெப்பத்தைத் தணிக்கக்கூடிய உணவு வகைகளான சிறுபருப்பு பாயசம், நீர்மோர் போன்றவை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் பக்தியுடன் முருகனின் அபிஷேகத்துக்காக பால் குடம் தலையில் சுமந்து வந்து சமர்ப்பிப்பது வழக்கம்.

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஜெயந்திநாதராக தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள்புரிவார். மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையெல்லாம் நடைபெறும். அதன் பிறகு ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வருவார். அந்த நேரத்தில் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத் தமிழ் ஆகியன இசைக்கப்படும்.

இந்த வருட வைகாசி விசாகத் திருநாள் நாளை ஜூன் மாதம் 2ம் தேதியாகும். இத்திருநாள் நம் நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தன்று முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு அவனது திருவருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com