எண்ணங்களை ஈடேற்றும் மணிகண்டீஸ்வரர்!

பல்லவர், சோழர் திருப்பணிச் செய்து போற்றிய ஆலயம், சைவ, வைணவ சமயங்களை போற்றும் திருக்கோயில் என பல்வேறு சிறப்புகள்கொண்ட தலமாகத் திகழ்கிறது படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்.
பல்லவர், சோழர் திருப்பணிச் செய்து போற்றிய ஆலயம், சைவ, வைணவ சமயங்களை போற்றும் திருக்கோயில், வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைவன், மகாலட்சுமியை மார்பிற்கு பதிலாக தலைமீது வைத்திருக்கும் ஸ்ரீனிவாசன் வாழும் கோயில், சங்கு, சக்கரங்களை திசை மாற்றி வைத்துள்ள திருமால் குடியிருக்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகள்கொண்ட தலமாகத் திகழ்கிறது சென்னையை அடுத்த படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்.
பல்லவர், சோழர் காலத்தில் இந்த ஆலயம் சைவ, வைணவ சமயங்களை ஒன்றாகப் போற்றும் திருத்தலமாக புகழ்பெற்று இருந்துள்ளது. காலப்போக்கில், அந்நியர்கள் படையெடுப்பால் சிதிலமடைந்த இவ்வாலயம், 1992–ம் ஆண்டில் கிருஷ்ணவேணி அம்மையார் என்ற அடியாரின் பெருமுயற்சியால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்து இன்று வழிபாட்டுக்கு வந்துள்ளது.
கிழக்கு முகமாய் எளிய நுழைவு வாசலைக்கொண்டு இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் மூன்று அங்கங்களைக்கொண்டு விளங்குகின்றது. நடுநாயகமாக மணிகண்டீஸ்வரர், இடதுபுறம் புதியதாக அமைந்த ஐயப்பன் ஆலயம், வலதுபுறம் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சிதர, மகாமண்டபம், கருவறை முன்மண்டபம், கருவறையும் காட்சி தருகின்றன. மகாமண்டபத்தில் அன்னை மரகதவல்லி சன்னிதி இருக்கிறது.
கருவறை முன்பாக விநாயகர், முருகன், கருவறைச் சுற்றில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சோழர் கால சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் காணப்படுகின்றன. இதுதவிர பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவருடன் ஜலகண்டேஸ்வரர் ஆகியோரும் தரிசனம் தருகின்றார்கள்.
படூர் கடற்கரைப் பகுதி, பழங்காலத்தில் படகுகளின் துறைமுகமாக விளங்கியது. படகுகள் நிறைந்த ஊராக விளங்கியதால் ‘படகூர்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, ‘படூர்’ என அழைக்கப்படுகிறது.
மணிகண்டீஸ்வரர் – மரகதவல்லி
திருக்கோயிலின் பிரதான நாயகனாக விளங்குபவர் மணிகண்டீஸ்வரர். மன்னர் கால கருவறையில் இடம் மாறாமல், கருவறைக்குள் குடியிருக்கும் எழிலான மூர்த்தியாக மணிகண்டீஸ்வரர் விளங்குகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் உயரமான லிங்கத் திருமேனிகொண்டவராக இந்த இறைவன் பொலிவுடன் காட்சியளிக்கிறார். மன்னர் காலத்தில் இந்த இறைவன், சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது கருவறை எதிரே தென்முகமாக, அன்னை மரகதவல்லி, நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறாள்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனையும், இறைவியையும் வணங்கினால், திருமணத் தடைநீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், வெளிநாடு சென்றுவர விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலமாகவும் இது விளங்குவதாக சொல்கிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், பழைய மகாபலிபுரம் சாலையில், படூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் படூர் என்ற ஊர் இருக்கிறது.