

160 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மங்களாம்பிகை - மார்க்கண்டேஸ்வரர் திருக்கோவில், பினாங்கு (மலேசியா) டத்தோ கெராமட் சாலையில் அமைந்துள்ளது. அன்றைய மலேசியாவில் உருவான முதல் சிவன் கோவில் என தமிழர்களால் கூறப்படுகிறது.
வட இந்திய சிவ பக்தரான கூர்க்கர் ஒருவர் வணிக நிமித்தம் பினாங்கு வந்தவர், சொந்தமாக அநேக இடங்களை வாங்கினார். அவருடைய 34,000 சதுர அடிகள் கொண்ட நகர் மைய இடத்தில், சிறியதாக ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டது. கங்கை நதியிலிருந்து எடுக்கப்பட்டு கொண்டு வந்து நிறுவிய பாண லிங்கத்திற்கு மார்க்கண்டேசுவரர் எனப் பெயரை சூட்டியது கூர்க்கர்தான். மார்க்கண்டேயரின் உயிரைக் காத்து அருள் புரிந்த அமிர்தசடேஸ்வரர் போல, பினாங்கு சிவன் கோவிலில் உள்ள அருள்மிகு மார்க்கண்டேஸ்வரர் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்ற நல்ல எண்ணத்துடன் இப்பெயரை கூர்க்கர் சூட்டினார் என்று கூறப்படுகிறது.
ஏழு வகை லிங்கங்களான ஸ்வயம்பு, தேவிகம், திவ்யம், மானுசம், இராட்சசம், ஆர்சம், பாணம் ஆகியவைகளில், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து நதிகளில் இருந்து கிடைக்கப் பெறும் பாணலிங்கம் மிகவும் உயர்ந்தது என சிவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
முதுமை நிலையை எய்திய கூர்க்கர், தனக்கு பின், மக்கள் சரியாக கோவிலை நடத்த சிரமப் படுவார்கள் என்று கருதி, பினாங்கு தன வைசிய நாட்டுக்கோட்டை நகர செட்டியார்களிடம் முறைப்படி ஒப்படைத்து விட்டார்.
அநேக வருடங்களுக்குப் பின், நகரத்தார்கள் சுமார் 9900 சதுர அடி பரப்பில், கோவிலை பெரிதாக கட்டினார்கள்.
கோவிலின் பிராகாரத்தில் ஸ்ரீ விநாயகர், தட்சிணா மூர்த்தி, அண்ணாமலையார், பைரவர், சூரிய-சந்திரர்கள், நடராஜர், சிவகாமி, நவ கிரஹங்கள், நான்கு சைவ சமய குருமார்கள் ஆகியோர்களின் சிறு சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிவாகம முறைப்படி, பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. முக்கியமான விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இக்கோவிலின் வாயிற் கதவு நல்ல பர்மா தேக்கு மரத்தில் செய்யப்பட்டுள்ளது. நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நூதன கதவாகும்.
உபரி தகவல்கள்
கோவில் அருகாமையில் திருமண மண்டபம் மற்றும் குருக்கள் தங்க வீடுகள் உள்ளன. மலேசிய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எக்காலத்திலும், தங்களுடைய கோவில் செலவுகளுக்காக அரசு மற்றும் தனியாரிடமிருந்து நன்கொடைகள் பெறுவது கிடையாது. நிதி வசூல் செய்வதில்லை. எப்போதும், வருகின்ற வரவுக்குள் செய்யப்படும் திட்டமிட்ட செலவுதான்.
அருள்மிகு மார்க்கண்டேஸ்வரரும், மங்களாம்பிகைத் தாயாரும் சக்தி வாய்ந்த கடவுள்கள். மனதார வேண்டியது நடக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
சிவ சிவ என்றிட தீவினை மாளும்!
சிவ சிவ என்றிட தேவரும் ஆவார்!
சிவ சிவ என்றிட சிவகதி தானே! என்பர்! "
நமச் சிவாய வாழ்க!