திருப்பதி போக முடியலையா? நெல்லையிலேயே வேண்டுதலை நிறைவேற்றும் மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி கோவில்!

மேலப்பாட்டம் பெருமாள் - வெங்கடாஜலபதி கோவில்
மேலப்பாட்டம் பெருமாள் - வெங்கடாஜலபதி கோவில்
Updated on

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அருகில் மேலப்பாட்டத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோவில், தென் தமிழகத்தின் 'பஞ்ச திருப்பதி' தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மூலவர்: அருள்மிகு வெங்கடாஜலபதி தாயார்: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி

உற்சவர்: ஸ்ரீநிவாசர், பத்மாவதி அலர்மேல்மங்கை என்ற இரு தேவியுடன் காட்சி தருகிறார்.

தல சிறப்பு:

தென்திருப்பதி:

தென் திருப்பதி என்று போற்றப்படும் இங்கு, திருப்பதிக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது. இங்கு கோமாதா வழிபாடும், அங்கப் பிரதட்சணம் செய்து வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. இந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திருமணத் தடைகள் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இக்கோவில் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகிறது. மூலவர் வெங்கடாஜலபதியாக அருளும் கோவிலில் சனிக்கிழமை வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

தல பெருமை:

பிரகாரத்திலேயே திருமலை சீனிவாசன் என்ற மற்றொரு மூலவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி இருக்கின்றார். இந்த மூர்த்திகள் அருகில் உள்ள மலையில் கண்டெடுக்கப் பட்டவை என்று கூறப்படுகிறது. கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் இக்கோவில் மிகவும் புராதனமானது என்பதை உணர்த்துகிறது.

இங்கு பிரதான சன்னிதியில் மூலவராக வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தருகிறார். தனிக்கோவில் நாச்சியார்களாக ஸ்ரீதேவியும், பூதேவியும் எழுந்தருளியிருப்பது இக்கோவிலின் விசேஷமான அம்சமாகும். பெருமாள் சன்னதிக்கு எதிரே கருடாழ்வாரும் காணப்படுகிறார். பிரகாரத்தில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீராமன், சீதை, லட்சுமணன் உற்சவ மூர்த்தியும், ஸ்ரீ ராஜகோபாலனுடனும் ருக்மணி தேவியும் அழகாக காட்சி தருகிறார்கள். ராமானுஜர், மணவாள மாமுனிகள், நம்மாழ்வாரின் உற்சவமூர்த்தியும் காணப்படுகிறது.

மேலப்பாட்டம் பெருமாள் - வெங்கடாஜலபதி கோவில்
வெங்கடாஜலபதி கோவில்

திருமணத் தடை நீக்கும் மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி கோவில் திருமஞ்சன விசேஷம்:

கோவிலில் உள்ள கம்பத்துக்கு(தூண்) திருமஞ்சனம் செய்து வழிபட குழந்தைப்பேறு மற்றும் தடைப்பட்ட திருமணம் நடக்கும் என்பதும் நம்பிக்கை. புதுமண தம்பதியர் விஜயதசமி திருநாளில் வந்து பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டு நோன்பு எடுப்பது சிறப்பு.

பஞ்ச திருப்பதி தலங்கள்:

திருநெல்வேலியைச் சுற்றியுள்ள தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதியில், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நிகராக கருதப்படும் ஐந்து முக்கியமான கோவில்கள் 'பஞ்ச திருப்பதி' அல்லது 'பஞ்ச வேங்கடபதி' என்று அழைக்கப்படுகின்றன. இது மேலப்பாட்டம், கோடகநல்லூர், திருவேங்கடநாதபுரம், நாரணம்மாள்புரம் மற்றும் கருங்குளம் என நெல்லையைச் சுற்றியுள்ள ஐந்து திருப்பதி தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இக்கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

பிரம்மோற்சவம் மற்றும் திருவிழாக்கள்:

இக்கோவிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதம் சீனிவாசருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கருட சேவை அன்று பக்தர்கள் வெள்ளம் போல் திரளுகின்றனர்.சனிக்கிழமை திருவிழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அதே போல் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவிழாவும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன.

எங்குள்ளது தெரியுமா?

நெல்லைப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலப்பாட்டம் என்னும் ஊரில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது. இது திருநெல்வேலி நகரிலிருந்து பாளையங்கோட்டை வழியாக செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கும் திருமணத் தடைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஆன்மீக ரீதியான எளிய தீர்வுகளைப் பெற்று, மன அமைதியுடனும் நேர்மறை ஆற்றலுடனும் புதிய நல்வாழ்வைத் தொடங்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com