

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
இந்தியாவின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் மயிலாப்பூர் ஒன்றாகும். இங்கு சப்த ஸ்தான சிவன் கோயில்கள், விஷ்ணு மற்றும் கிராம தெய்வங்கள் உள்ளன. முண்டகக்கண்ணி மாரியம்மன் மற்றும் கோலவிழி அம்மன் கோவில்கள் இங்கு மிகவும் பிரசித்தம். மயிலாப்பூர் பல கிராம தெய்வங்களுக்கு பெயர் பெற்றது. முக்கியமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது.
அங்காள பரமேஸ்வரி:
திரௌபதி அம்மன் மற்றும் தர்மராஜா கோவிலுக்கு அடுத்தபடியாக நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கியவாறு இக்கோவில் அமைந்துள்ளது. சன்னதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமைதியான தோற்றத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இரண்டு புறமும் விநாயகரும், முருகனும் உள்ளனர். முருகனுக்கு பின்னால் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சித்ரகுப்தர், நாகசுப்பிரமணியன், நாகர் போன்ற தெய்வங்கள் உள்ளன. பொதுவாக அம்மன் கோவில்களில் சித்திரகுப்தர் வீற்றிருந்து பார்த்ததில்லை.
ஆனால் இக்கோவிலில் சித்திரகுப்தர் வீற்றிருக்கும் அரிய காட்சிகளைக் காண முடிகிறது. மேலும் காவல் தெய்வங்களான முனீஸ்வரரும், பாவாடை ராயனும் கருவறையில் உள்ளனர். எதிரே சிம்ம வாகனமும், திரிசூலமும் காணப்படுகிறது.
வரலாறு மற்றும் கல்வெட்டுகள்:
100 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவில் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் மீனவர்களின் குடிசைகளுடன் காணப்பட்ட இந்த இடம் கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு சமயம் தொற்றுநோய் ஒன்று பரவி பலர் இறக்க, மீனவர்கள் பிரார்த்தனை செய்த பொழுது அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி தனக்காக ஒரு கோவில் கட்ட சொன்னதாகவும் அதன்படி விரைவில் கோவில் கட்ட, மக்களும் நோயிலிருந்து விடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு:
புராணத்தின்படி சிவபெருமானுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் உண்டு. சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்து விட, பிரம்மாவின் மனைவி சரஸ்வதி கோபமடைந்து சிவபெருமானை சபிக்கிறார். ஈசனின் கையில் பிரம்மாவின் ஐந்தாவது தலை ஒட்டிக்கொள்ள, ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதி தேவி அகத்திக் கீரையை ரத்தத்துடன் கலந்து அரிசி உருண்டைகளை செய்து தரையில் தெளிக்க, ஈசனின் கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் பிரம்மாவின் ஐந்தாவது தலை கீழே விழுந்து அரிசி உருண்டைகளை சாப்பிட, சிவபெருமான் கோவில் குளத்தில் நீராடி சாபம் நீங்க பெற்றதாகவும், பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரி வடிவம் எடுத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை அழித்ததாகவும் கூறப்படுகிறது.
தல சிறப்பு:
மயானக்கொள்ளைத் திருவிழா:
இந்நிகழ்வை குறிக்கும் வகையில் மயானக் கொள்ளைத் திருவிழாவின்பொழுது பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியைப் போல் தோற்றமளிக்கும் வகையில் நாக்குகள் நீட்டியபடி, திரிசூலத்தை ஏந்தி மயானத்திற்கு செல்கின்றனர். அங்கு அம்மனின் ஒரு மண் சிலை செய்யப்பட்டு, பக்தர்கள் கால்நடைகள், ஆடுகள், சேவல் போன்றவற்றை காணிக்கையாக கொடுக்கிறார்கள். அரிசியை ரத்தத்துடன் கலந்து கூட்டத்தின் மீது வீசப்படுகிறது.
மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள்:
மயானக்கொள்ளைத் திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் மாசி அமாவாசை நாளில் அதாவது மகா சிவராத்திரிக்கு மறுநாள் நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாகும். இதற்கு உற்சவ தெய்வம் மயிலாப்பூர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு மயானக்கொள்ளைத் திருவிழா இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும். மயான கொள்ளை பூஜைக்குப் பிறகு ஊஞ்சல் விழாவும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.
கோவில் திருவிழாக்கள்:
நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். 9 நாட்களும் விதவிதமான அலங்காரங்களுடன் அம்மன் காட்சி தருகிறாள். ஆடி மாதம் பால்குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். இங்கு ஆடிப்பூரம் மிகவும் விசேஷம். அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெறும். மாசி மகத்தின் பொழுது தீர்த்தவாரிக்காக ஊர்வலம் கடலுக்கு எடுத்துச் செல்லப்படும்.
கோவில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
மாதவப்பெருமாள்புரம், முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது.