
வசந்த விழா (Spring Festival) என்பது வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் முக்கியமான நிகழ்வாகும். இது பல கலாச்சாரங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வசந்த விழா என்பது சித்திரையில் (ஏப்ரல்-மே) எடுக்கப்படும் ஒரு திருவிழாவாகும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வசந்த உற்சவம் என்பது, அழகாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தை சுற்றி தங்கி, விழாவின் 10 நாட்களும் ஒவ்வொரு நாள் மாலையும் மென்மையான இசையுடன் கோலாகலமாக நடைபெறும்.
இரவு 8 மணி அளவில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் கோவிலை வலம் வருவதை காண மக்கள் வெள்ளம் போல் திரள்கின்றனர். கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் வண்ண வண்ண ஆடைகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. 10 நாள் உற்சவம் மே 6ஆம் தேதி தொடங்கி பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுடன் நிறைவடையும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா:
'கயிலையே மயிலை! மயிலையே கயிலை!' எனக்கோற்றப்படும் மயிலை கபாலீஸ்வரர் கோவில் கற்பாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர் கோவில் வசந்த விழா மே 6ஆம் தேதி தொடங்கியது. அங்குரார்ப்பணம் விழாவுடன் அதாவது ஒன்பது வகையான விதைகளை விதைத்து திருவிழா தொடங்கப்பட்டது. விழா தொடங்குவதற்கு முன் தினம் புண்ணிய வசனம், வாஸ்து சாஸ்தி போன்ற சடங்குகள் செய்யப்பட்டன. பத்து நாள் உற்சவத்தில் ஈசனும் அம்பிகையும் தினமும் ஆலயத்தில் வலம் வந்து கண்ணாடி சேவை கண்டருள்வது கண் கொள்ளா காட்சியாகும். சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வும் மற்றும் பல சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. வசந்த விழாவின் போது தினமும் மாலை இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
புஜங்க லளித தாண்டவ மூர்த்தி:
வசந்தோற்சவம் 4ஆம் நாள் ஈசன் புஜங்க லளித தாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் எழுந்தருளி ஆலய உள்புறப்பாடு நடைபெற்றது. புஜங்க லளித மூர்த்தி என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் 64 திருமேனிகளுள் ஒன்றாகும். காசிப முனிவர் வினந்தை மகனான கருடன், மற்றொரு தாயான கத்துவிற்கும் காசிப முனிவருக்கும் பிறந்த நாகங்களை கொடுமைப்படுத்தினார். இதனால் நாகங்கள் சிவபெருமானிடம் தங்களை காக்கும்படி வேண்டி பூஜைகள் செய்தன. இதனை நினைவு கூறும் வகையில் புஜங்க லளித தாண்டவ கோலத்தில் ஈசன் எழுந்தருளினார்.
மூன்றாம் நாள் (6.5.25) அதிகார நந்தி வாகனத்திலும், ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஆறாம் நாள் யானை வாகனத்திலும் உள் புறப்பாடு நடைபெற்றது.