சிவலோக பண்டாரம் சித்தருக்காக நின்ற நெல்லையப்பர் தேர்!

சிவலோக பண்டாரம் கோவில்...
சிவலோக பண்டாரம் கோவில்...

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், தென்காசி- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது பாவூர்சத்திரம். இவ்வூரில் இருந்து சுரண்டை செல்லும் வழியில்தான் கீழப்பாவூர் காணப்படுகிறது. 

இந்த ஊர் முற்காலத்தில் ‘சத்திரிய சிகாமணி நல்லூர்’ என வழங்கப்பட்டு வந்ததாக கல்வெட்டுகள் பறை சாற்றுகிறது. நரசிம்ம அவதாரக் கோலத்தை இவ்வூரில்தான் பகவான் காட்டினார் என்றும், அதனால் இவ்வூர் ‘தென்னகத்து அகோபிலம்' என்றும் சொல்லப் படுகிறது.

இங்கு தற்போதுள்ள நூலகத்தின் பின்புறம் வழியாக குருக்கள் மடம் பகுதிக்கு சென்றால், அங்கே சிவலோக பண்டாரம் ஜீவ சமாதி கோவில் உள்ளது.

வடபகுதியில் இருந்து புண்ணிய யாத்திரையாக கீழப்பாவூர் வந்தவர்தான் சிவலோக பண்டாரம். இவர் சிற்றாறு செழிப்பாக்கும் கீழப்பாவூரைக் கண்டார். மனம் பூரித்தார். அருமையான மரம் செடிகளுக்கு இடையே நீர்வளமும், நிலவளமும், மக்கள் வளமும் கொண்ட அவ்வூர் அவருக்கு மன அமைதியைத் தந்தது. இனி இங்கேயே அமர்ந்திருப்பது என முடிவு செய்தார். அங்கு அவர் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார்.

சிவலோக பண்டாரம் ஜீவ சமாதி...
சிவலோக பண்டாரம் ஜீவ சமாதி...

தனியாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த அவரிடம், சில காலத்தில் பல சீடர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கும் உபதேசம் செய்து, அங்கு வரும் மக்களுக்கும் அருள்பாலித்து வந்தார். அங்கிருக்கும் போதே பல மூலிகைகளை அறிந்து அவற்றை கொண்டு மக்கள் நோயை தீர்த்து வந்தார். எனவே இவரை ஆன்மிகவாதியாக மட்டும் மக்கள் வணங்காமல், நல்லதொரு மருத்துவராகவும் எண்ணி வணங்கி வந்தனர். இவரின் அற்புத பிரசாதம் கஞ்சியாகும். இந்த கஞ்சியை காய்ச்சி ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அதையும் ஓலைப்பட்டையில் தான் வழங்குவார். இதைக் குடித்து தீராத நோய்கள் எல்லாம் நீங்கி சென்றவர்கள் பலர்.

திருநெல்வேலி நகரில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்ட நிகழ்ச்சி தான் மணி மகுடமான நிகழ்வு. இச்சமயத்தில் தேர் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். எனவே தான் இத்திருவிழாவில் சிவலோக பண்டாரம் கலந்து கொண்டார். சந்நியாசி கோலத்தில் இருந்த அவர், பொதுமக்களோடு மக்களாக கலந்து மிகுந்த ஆர்வம் கொண்டு தேரின் முன் சென்றார். தேரை இழுக்க முடிவு செய்து கயிறைப் பிடித்தார். அப்போது அங்கு வந்த சிலர், இவரைச் சாதாரணப் பண்டாரம் என நினைத்து, ‘வேறுபக்கம் போய் தேரை இழுங்கள்' என விரட்டி விட்டனர்.

இதனால் கோபமடைந்த சிவலோக பண்டாரம் அங்கிருந்து அகன்று விட்டார். அவர் சென்ற பின் பலரும் தேரை இழுக்க, தேர் கொஞ்சம் கூட அசையாமல் நின்றது. தேரின் சக்கரத்தில் ஏதாவது சிக்கிக் கொண்டிருக்கிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. தேர் நகராமல் நிலைகொண்டு நின்றதற்கான காரணம் யாருக்கும் விளங்கவில்லை. பல மணிநேரம் தேர் அங்கேயே நின்று விட்டது. என்ன செய்வது ஏது செய்வது என அனைவரும் திக்குமுக்காடினர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘தேர் இழுக்க வந்த சந்நியாசி ஒருவரை எல்லோரும் விரட்டி விட்டனர். அவரைக் கூட்டி வந்து தேரை இழுங்கள். அப்போது தான் தேர் நகரும்' என கூறினார்.

சிவலோக பண்டாரம் கற்சிலையாக...
சிவலோக பண்டாரம் கற்சிலையாக...

உடனே அவரைத் தேடி கீழப்பாவூர் ஓடி வந்தனர். அவர் புன் முறுவலோடு நெல்லை சென்று தேரின் கயிறைப் பிடித்து கொடுக்கத் தேர் நகன்றது. தவ வலிமை மிகுந்த தன் பக்தனின் புகழைப் பரப்புவதற்காக, நெல்லையப்பரே அந்தத் தேரை நகர விடாமல் செய்து விட்டதாக அந்தப் பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.

நெல்லையப்பர் தேர் சம்பவத்திற்குப் பிறகு, சிவலோக பண்டாரத்தின் புகழ் எட்டு திக்கும் பரவிற்று. நோய் கொண்டவர்கள் வந்து அவரைச் சந்தித்து நோய் நீங்கிச் சென்றனர். 

இதையும் படியுங்கள்:
சூப்பர்மேன் ஹீரோயின் ஜெண்டாயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
சிவலோக பண்டாரம் கோவில்...

இந்த ஆலயம் குழந்தைப் பேறுக்கு மிகவும் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு வந்து இவரை வணங்கி குழந்தை வரம் பெற்று செல்கிறார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் ஆல மரமாகும். இவ்விடத்தில் மாவிலங்கு மரம் என்னும் மகாலிங்க மரம் ஒரு காலத்தில் இருந்துள்ளது. இம்மரத்தின் பட்டைகளை அவித்து சாறு எடுத்து, கால் மூட்டினில் ஊற்றி வந்தால் மூட்டு வலி குணமடையுமாம். 

இம்மரம் வில்வத்திற்கு இணையானது. வில்வ இலையைப் போன்றே அர்ச்சனைக்கும் பயன்படக் கூடியது. இந்த மரம் தற்போது காணப்படவில்லை. எனவே புதிதாக ஒரு மரம் வைத்து வளர்த்து வருகின்றனர். இதுவும் நோய் தீர்க்கும் அரிய பொக்கிஷமே.

மூலஸ்தானத்தில் சிவலோக பண்டாரம் கற்சிலை வடிவாகக் காட்சித் தருகிறார். அவருடன் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவலோக பண்டாரத்தின் கோபத்தைத் தணிக்கவே விநாயகர் இங்கு அருள்புரிகிறார். இக்கோவிலை வணங்க பல இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com