மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாவது நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தேர் நிலையை விட்டு அசைந்து ஆடி வெளியே வந்து நான்கு மாட வீதிகளிலும் உலா வந்ததை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் கபாலி கோஷம்தான் கபாலி! கபாலி! கபாலி தான்!
கபாலீஸ்வரர் சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கற்பகாம்பாளுடன் வில் ஏந்தியவாறு காட்சியளிக்க பிரம்மா தேரை ஓட்டுவது போல் அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. தேர் மலர்களாலும், சிலைகளாலும் வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் கபாலி கோஷம் எழுப்பி கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மக்களுக்கு எந்த இடையூறும் நிகழாதவாறு போலீஸ் நிறைய குவிக்கப்பட்டு இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருடு எதுவும் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.
பெரிய தேரினை தொடர்ந்து கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தேவயானியுடன் முருகப்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் சிறிய தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
எங்கு பார்த்தாலும் பக்தர்களுக்கு உணவருந்த அன்னதானமும், தண்ணீரும், நீர்மோரும் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா இன்று (23.3.24) மாலை 3:30 மணிக்கு நடைபெறும். 63 நாயன்மார்கள் சிலைகளும் இந்த ஊர்வலத்தில் கபாலீஸ்வரர் சிலையை பின் தொடர்ந்து செல்லும்.
25ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 26 ஆம் தேதி உமா மகேஸ்வரர் தரிசனமும், 27ஆம் தேதி திருமுழுக்குடன் விழா நிறைவு பெறும்.
இக்கோவில் சப்தஸ்தான சிவன் கோயில்களில் ஒன்றாகும். காரணீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், விருபாஷீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், கபாலீஸ்வரர் கோவில் என சப்த ஸ்தான சிவஸ்தலங்கள் மயிலாப்பூரில் உள்ளது.