ஸ்ரீ வீரட்டிஸ்வரரும், வேதநாயகியாக அம்பாளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். திருமணி முத்தாறு ஆற்றங்கரையின் மேற்குகரையில் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த பஞ்சத்தை போக்க என்ன வழி என்று அரச குருவிடம் கேட்டனர். அப்போது அசரீரி வழியாக பதில் வந்தது.
‘‘பாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்ல வேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. சிவன் அருள் பெற்ற புருஷாமிருகத்தை நாட்டுக்குள் பிடித்து வந்தால் பசி, பஞ்சம், பட்டினி தீரும்’’ என்று அந்த அசரீரி ஒலித்தது.
இதன்படி திருமணி முத்தாறு வனப்பகுதியில் தம்மை பிடிக்க வந்த பஞ்ச பாண்டவர்களை கண்டதும், புருஷாமிருகம் கடுமையாக தாக்கியது. அனைவரும் பயத்தில் சிதறி ஓடினர்.
அப்போது தருமன், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை வழிபட்டான். லிங்கத்தை கண்டதும் மிருகம் சுற்றி சுற்றி வந்தது. இதையடுத்து பாண்டவர்கள் 5 பேரும் திருமணி முத்தாற்றின் கரையில் 5 லிங்கங்களை பிரதிஷ்டை செய்தனர். இப்படி அர்ஜூணனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு லிங்கத்தை மூலவராக வைத்து பில்லூரில் உருவானதுதான் ‘‘ஸ்ரீ வீரட்டீஸ்வரர் கோயில்’’ என்பது தலவரலாறு.
திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்),
கரபுரநாதர் (உத்தமசோழபுரம்),
வீரட்டீஸ்வரர் (பில்லூர்),
பீமேஸ்வரர் (மாவுரெட்டி),
திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு)
ஆகிய 5 திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.
இந்த 5. கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்திபெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டு பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். நாமக்கல் குடவரைக்கோவில் பல்லவர்காலத்து மகேந்திரவர்மன் காலத்திய கல்வெட்டாகும்.
எப்படிப்பட்ட துன்பத்தையும் வீரத்துடன் எதிர்கொண்டு, விரட்டியடிக்கும் சக்தி தருபவரே வீரட்டீஸ்வரர். அவரை வழிபட்டால் எந்த துயரமும் நம்மை நெருங்காது என்பது தொடர்ந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. திருமணத்தடை நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள், வீரட்டீஸ்வரரை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றியும், நெய்விளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோவில் அமைவிடம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில்.