
மூஷிகோத்தமமாருஹ்ய தேவாஸுரமஹாஹவே!
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தேஹம் கணநாயகம்!
(தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் சிறந்த எலியில் ஏறி போர் புரிய விரும்பினவரும், சிறந்த பராக்ரமத்தை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹாகணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்)
ஒருமுறை அசுரனான சிந்தூரனைக் காணவந்த நாரதர், ''சிந்தூரா! உனக்குச் சமமான வீரதீர பராக்கிரமசாலிகள் இம்மூவுலகிலும் இல்லை!" என்று ஆரம்பித்து, தொடர்ந்தார். "ஆனால், கைலாயத்தில் உமாதேவிக்கு தலையற்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதற்கு முன்பே கஜமுகாசுரனை வதம் செய்த பரமசிவன், அவனது யானைத் தலையை மட்டும் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். பார்வதியின் வருத்தம் போக, யானைத் தலையை வரவழைத்து கழுத்தில் பொருத்தியவுடன், தலை ஒட்டிக்கொண்டுவிட்டது! இந்த அதிசயக் குழந்தையே கஜானனர் என்று பெயர் பெற்று விளங்குகிறது. உன்னதமான ஞானமும், பெரும் பராக்கிரமமும் கொண்டிருக்கிறது. அதற்கு சமதையாக யாரும் எங்கேயும் கிடையாது என்று சொல்கிறார்கள்" என்று நாரதர் கூற சிந்தூரன் மிரண்டான். அக்குழந்தையே தனக்கு பரமசத்ருவாக அமையலாம் என்று நினைத்தான். அதே சமயம் நாரதர் கைலாயம் சென்று உமாதேவியை சந்தித்து சிந்தூரன் விஷயத்தை விவரித்தார்.