சாதுர் மாஸ்யமும், குரு பூர்ணிமா முக்கியத்துவம்!

சாதுர் மாஸ்யமும், குரு பூர்ணிமா முக்கியத்துவம்!

சாதுர் மாஸ்யம் ஆரம்பம் தினம் 30.6.23 குரு பூர்ணிமா தினம் 03.07.2023

சாதுர் மாஸ்யம் ஆஷாட மாதத்தில் வரும் தேவ சயன ஏகாதசிக்கு (ஆஷாட ஏகாதசி) மறுநாள் முதல் ஆரம்பமாகிறது. வருடத்தில் நான்கு மாதங்கள் சன்னியாசிகளும், மடாதிபதிகளும் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஓர் இடத்தில், ஓர் இரவிற்கு மேல் தங்கலாகாது என்கிற கட்டுப்பாட்டினை இவர்கள் கடைப்பிடித்து வந்த போதிலும், குறிப்பிட்ட இந்த நான்கு மாத காலங்களில் பருவ மழை எங்கும் பெய்யும் காரணம், விரதம் மேற்கொண்டு, பூஜை-புனஸ் காரங்களை செய்ய, ஓரிடத்திலேயே பல நாட்கள் தங்கலாமென்கிற விதிவிலக்கு உள்ளது. பல்வேறு வகையான நூல்களைப் படித்து ஞாபக சக்தியினை மேம்படுத்திக் கொள்வார்கள்.

இம் மாதங்கள் மங்களகரமானதாகவும், சடங்குகள், பூஜைகள், திருவிழாக்களுக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. அநேகர் அசைவ உணவுகள், பூண்டு, வெங்காயம் போன்றவைகளை தவிர்ப்பதோடு ஒரு வேளை மட்டுமே உணவருந்துவதுண்டு.

ஷ்ராவண மாதம் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதால், ஷ்ராவண ஸோமவார் (திங்கள் கிழமை) விசேடமாக கருதப்படுகிறது.

‘பாத்ரபத்’ மாதம் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி;

‘அஸ்வின்’ மாதத்தில் துர்கா பூஜை, நவராத்திரி,

‘கார்த்தி’யில் தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகள் அடுக்கடுக்காக வரும்.

குரு ஃப்யோ நம: குருவே சரணம்!

சாதுர் மாஸ்யத்தில் வரும் முதல் பெளர்ணமி, ‘குரு பூர்ணிமா’ எனக் கொண்டாடப்படுகிறது. நல்ல கல்வியறிவைத் தங்களுக்கு அளித்த குருவை, சிஷ்யர்கள் வணங்கி வழிபடுவார்கள். ‘குரு பூர்ணிமா’, ‘வியாச பூர்ணிமா’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘வியாசர்’ என்பதின் பொருள் ‘பிரிப்பவர்’ என்பதாகும். சனாதன தர்மத்தை நிலை நாட்டுவதற்காக ‘பிரம்ம சூத்ரம்’ என்கிற உயர்ந்த நூலையும், 18 புராணங்களையும் எழுதியிருக்கிறார்.

பகவான் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ‘வியாச அவதாரமும் ஒன்றெனக் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில், அநேக வேத நூல்கள் பிரிக்கப்படாமல் இருக்க, அனைவரும் வாய்மொழி வழியாகவே சொல்லிக் கற்றனர். நாட்கள் செல்ல – செல்ல மக்களின் வாழ்க்கை முறையில் தொய்வு ஏற்பட, வியாச மகரிஷி மக்களின் வாழ்க்கை முறைகள் தொய்வு ஏற்பட, வியாச மகரிஷி வேதங்களை நான்காக பிரித்து உலகிற்கு அளித்ததால், ‘வேத வியாசர்’ என அழைக்கப்படலானார்.

குருவின் முக்கியத்துவம்:

னித வாழ்க்கையில் ‘குரு’ மிகவும் முக்கியமானவர். அதனால்தான் மாதா – பிதா – குரு – தெய்வமெனக் கூறப்படுகிறது. இறைவனின் பிரதிநிதியாகவும், ஜீவாத்மா – பரமாத்மா தொடர்பு ஏற்படுத்துபவராகவும் குரு செயல்படுவார்.

மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்கு குருவாக இருந்து ‘கீதை’யை உபதேசித்தார்.

இராமயாணத்தில், வசிஷ்ட மகரிஷி, ஸ்ரீராமபிரானுக்கு குருவாக விளங்கி வழிகாட்டினார்.

குருகீதையில், சிவபெருமான், பார்வதி தேவியிடம், “குருபக்தி ஒன்றே ஆன்மாவிற்கு சத்தியமாகும்” எனக் கூறுகிறார்.

குருபூர்ணிமா பூஜை

குரு பூர்ணிமா தினத்தை இந்து, பெளத்த, ஜெயின் ஆகிய மதத்தினர் விமரிசையாக கொண்டாடுகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து ஸ்நானம் செய்து, சுத்தமான ஆடையணிந்து விக்னேஸ்வர பூஜையில் ஆரம்பித்து, ஆத்ம பூஜை வரை செய்கின்றனர்.

“ஸ்ரீ கிருஷ்ண வ்யாஸ பாஷ்ய காராணம்

சபரி வாராணம் பூஜாம் கரிஷ்யே!”

என்று கூறி சங்கல்பம் செய்து, பின் தரையை நன்றாக மெழுகி துடைத்து, கோலமிட்டு தேவதைகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். அதன்பிறகு தேவதைகளுக்கு உரிய பூஜையை செய்து, இறுதியில் ‘வேத வியாஸ அஷ்டோத்திரம்’ கூறி, மலர்களால் அர்ச்சனை பண்ண வேண்டும். ‘அஷ்டாஷர’ மந்திரமாகிய ‘ஓம் நமோ நாராயண’ என ஜெபித்து பிரார்த்தனை செய்தல் அவசியமானது.

குரு என்கிற சொல்லில் ‘கு’ என்பது இருள் (அறியாமை). ‘ரு’ என்றால் அகற்றுவது. இருளெனும் அறியாமையை அகற்றும் சக்தி குருவிற்குரியதாகும்.

குருவின் பெருமையை

‘தெளிவு குருவின் திருமேனி காணல்!

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!

தெளிவு குருவின் திருநாமம் சொல்லல்!

தெளிவு குருவருள் சிந்தித்தல் தானே!’ எனும் திருமந்திரம் விளக்குகிறது.

குருவை வணங்கி குருவருள் பெறுவோம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com