

ஒரு அடர்ந்தக் காடு. அந்தக் காட்டில் ஒரு சித்தர் வசித்து வந்தார். ஞானம் உள்ளவர். தினமும் தியானம் செய்பவர். கடவுள் பக்தி மிகுந்து உள்ளவர்.
ஒரு நாள் காட்டில் அவர் நடந்துகொண்டு இருந்தபோது சற்று தூரத்தில் ஒரு சிங்கம் அவரை நோக்கி வந்துகொண்டு இருந்தது. சித்தர் (siddhar and lion moral story) பயப்பட்டார். தான் ஓடவும் முடியாது. சிங்கம் துரத்தி பிடித்துவிடும்.
செய்வது அறியாது காட்டில் முழங்கால் போட்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்ய துவங்கினார்.
“கடவுளே... இது என்ன சோதனை? இன்று அந்தச் சிங்கத்திற்கு நான் இரையாகி விடுவேன். இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் தியானம் செய்து உன் தரிசனம் காணவேண்டும் என்று நினைப்பவன். நான் உயிரோடு இருந்தால்தானே என்னால் இந்த லட்சியத்தை அடையமுடியும்? எல்லாம் வல்ல இறைவனான நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று தியானித்தார்.
தியானம் முடிந்தபிறகுதான், தான் வெகு நேரம் பிரார்த்தனை செய்தது ஞாபகத்திற்கு வந்தது. ஏன்? சிங்கம் தன்னை இதுவரை கொல்லவில்லை என்று புரியவில்லை. கண் விழித்துப் பார்த்தார்.
அவருக்குச் சற்று முன்தான் சிங்கம் இருந்தது. சிங்கம் கண்களை மூடி தியானம் செய்துகொண்டு இருந்தது.
சித்தர் கேட்டார்:
“ஏய்… நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? என்னைக் கொல்லாமல் என்ன செய்கிறாய்…?”
சிங்கம் பேச ஆரம்பித்தது.
“இரண்டு நாட்களாக எனக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. அகோர பசி எனக்கு. இன்று உன்னைப் பார்த்ததும்தான் மகிழ்ச்சி அடைந்தேன். கடவுளாகப் பார்த்து உன்னை என் இரையாக்கிக்கொள்ள உன்னை அனுப்பி வைத்து உள்ளார். நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? அதனால் உன்னை புசிக்கும்முன் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன். அதனால்தான் காலம் அதிகம் ஆகிவிட்டது. இப்போது நான் தயார். கடவுளை நம்பி…”
ஒரு பக்கம் சித்தர் தனது உயிரைக் காக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனையில் குறை ஒன்றும் இல்லை.
சித்தரை தனது இரையாகக் கொடுத்ததற்கு மனமார கடவுளுக்கு நன்றி தெரிவித்து சிங்கம் சித்தர்மீது பாய்ந்தது.
சிங்கத்தை அடிப்பதற்காக சித்தர் அருகே இருந்த பெரிய மரக்கட்டையைக் கையில் எடுத்தார்.
சித்தரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? அல்லது சிங்கத்தின் நன்றியை ஏற்றுக்கொள்வதா?
கடவுளுக்குக் குழப்பம் வந்தது.
பாவம் கடவுள்….!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here