-ஆர். பொன்னம்மாள்
மதுராவில் வேத சாஸ்திரங்கள் கற்ற சோமசேகர சர்மா என்பவர் தன் மனைவி விசாலாக்ஷியுடன் வசித்துவந்தார். அதிதி உபசாரம், சந்தியா வந்தனம், அக்னி ஹோத்திரம் போன்றவற்றை முறையாக நடத்தி வந்தார். இந்நிலையில் ஒருநாள் அத்தம்பதிகள் காசிக்குச் சென்றனர். கங்கா ஸ்நானம் முடித்து, கையில் துளசி தளம் நிறைந்த கங்கா ஜலத்தோடு ஊர் திரும்பினர்.
வழியில், ஒரு வியாபாரி மாட்டு வண்டி நிறைய விற்பனை பொருட்களோடு வந்துகொண்டிருந்தான். இரட்டை மாடு பூட்டிய அந்த வண்டியில், ஒரு மாடு வயது முதிர்ந்த மாடு. அதனால், இன்னொரு இளைய மாட்டுக்குச் சமமாக பாரம் இழுக்க முடியவில்லை. வண்டியோட்டி காலகல்பன் என்பவன் தன் கையிலிருந்த கோலால் அம்முதிய மாட்டை நையப் புடைத்தான். அடி தாங்க முடியாமல் அந்த மாடு தரையில் விழுந்தது. வண்டியில் ஏற்றியிருந்த பொருட்களும் அந்த மாட்டின் மீது விழவும், மாடு சீற்றம் கொண்டு கீழே விழுந்த காலகல்பனை தன் கூரியக் கொம்புகளால் குத்தியது. காலகல்பன் வலி தாங்க முடியாமல் மயக்கமுற்று கீழே சரிந்தான்.
சர்மா இதைப் பார்த்தார். அவன் வாயில், 'நாராயண, நாராயண' என்று சொல்லி கங்கா ஜலத்தை ஊற்றினார். காலகல்பன் உயிர் பிரிந்தது.
தொடர்ந்து சர்மா தன் வழியே சென்றார். அப்போது வழியில் பயங்கர உருவம் கொண்ட சிலர் பலமாக அடிவாங்கி, நடக்க முடியாமல் முனகியவாறு விழுந்து கிடப்பதைக் கண்டார்.
"ஐயா, நீங்கள் யார்? ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் யம தூதர்கள். எங்களை அடித்து இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் விஷ்ணு தூதர்கள்" என்றனர்.
"அவர்கள் ஏன் உங்களைத் துன்புறுத்த வேண்டும்?" என்று சர்மா கேட்க, "எங்கள் பிரபு யம தருமர் காலகல்பன் என்ற வியாபாரியின் உயிரை எடுத்து வரும்படி கூறினார். அவர் ஆணைப்படி அவனைக் கட்டி இழுத்து வருகையில், விஷ்ணு தூதர்கள் தடுத்தனர். 'காலகல்பன் சாகும் தறுவாயில் நாராயண நாமத்தைக் கேட்டவன். துளசி தீர்த்தம், அதிலும் கங்கா ஜலத்தை புண்ணியாத்மாவின் கையால் அருந்தியவன். அவனை எப்படி நீங்கள் கொண்டு போகலம்' என்று கூறி வழி மறித்தனர்.
'காலகல்பன் பாவி. எச்சிற் கையால் காக்கையும் விரட்டாதவன். வாயில்லா ஜீவனை நையப்புடைத்திருக்கிறான்" என்றோம். அதையெல்லாம் கேளாமல் எங்களை அடித்துவிட்டு அவன் ஆத்மாவை வைகுண்டம் கொண்டு சென்றனர்" என்று புலம்பினர்.
அதைக் கேட்ட சர்மா அவர்களுக்கும் கங்கா ஜலம் தெளித்து, ''கங்கை நீருக்கும், துளசி தளத்துக்கும், நாராயண நாமத்துக்கும் அத்தனை மகிமை.
கங்கை நதிக்கரையில் ஒரு அரச மரப்பொந்தில் ஒரு கொக்கு பல காலமாக வசித்து வந்தது. அம்மரத்தின் கீழ் பொந்தில் ஒரு சர்ப்பமும் வாழ்ந்தது. ஒரு நாளிரவு கொக்கு உறங்குகையில் நாகம் அதைக் கடித்து அதன் இறைச்சியைத் தின்றுவிட்டு, எலும்புகளை பொந்திலேயே போட்டு விட்டது.
சில காலம் சென்ற பின் புயல் வீசியது. அரச மரம் வேரோடு சாய்ந்து கங்கையில் விழுந்தது. கொக்கின் எலும்புகள் கங்கையில் விழுந்தன. அந்த எலும்பு ஒரு பெண்ணாய் மாறி, இந்திர சபையில் நடனமாடியது. அதன் பெயர் கமலகந்தி" இப்படி கங்கா தீர்த்தத்துக்கான மகிமைகளை உதாரணங்களாகக் கூறி அவர்களைத் தேற்றினார் சர்மா. அவர்களும் சமாதானமடைந்து யம பட்டனம் சென்றனர். (பத்ம புராணம்)