
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் மடத்துத் தெரு என்றழைக்கப்படும் நாகேஸ்வரர் கோவில் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள கோவில் ஸ்ரீ பகவத் விநாயகர் கோவில். இங்கே மூலவராக வீற்றிருக்கும் விநாயகர் குபேர விநாயகர் என்றும் வெற்றி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார்.
இவர் அனைத்து நவகிரக தோஷங்களையும் நீக்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இவருக்கு நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ் கையில் புதன், சிரஸில் குரு, இடது கீழ் கையில் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு, இடது தொடையில் கேது உள்ளனர்.
மிகப் பழைமையான இந்தக் கோவிலில் 1692 ஆம் ஆண்டிலேயே திருப்பணிகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் இங்கே அமைந்ததற்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பகவர் மகரிஷி என்பவர் வேதாரண்யத்தில் வசித்து வந்தார். மரணப்படுக்கையில் இருந்த அவரது தாயார், தனது மரணத்திற்குப் பிறகு தன் அஸ்தியை சேகரித்து புண்ய தீர்த்தங்களுக்கு சென்று, எந்த இடத்தில் அந்த அஸ்தி பூக்களாக மாறுகிறதோ, அந்த தீர்த்தத்தில் அதைக் கரைக்கும்படி மகனிடம் கோரிக்கை வைத்தார்.
அதே போல் பகவர் மகரிஷி ஊர் ஊராகச் சென்று புண்ய தீர்த்தங்களில் நீராடினார். காசி புண்ய ஷேத்திரமாதலால் அங்கே நிச்சயமாக அஸ்தி பூக்களாக மாறிவிடும் என்று நினைத்தவருக்கு பெரும் ஏமாற்றம். பானையில் சாம்பல் அப்படியே இருந்தது. பிறகு கும்பகோணத்திற்கு எடுத்துச் சென்று காவிரியில் குளித்த பிறகு அங்கே பானையிலுள்ள சாம்பல் பூக்களாக மாறுவதைக் கண்டார்.
சாம்பலை அவர் காவிரியில் கரைத்தார். பின்னர் கும்பகோணம் காசியை விட சிறந்தது என்றறிந்து அங்கேயுள்ள விநாயகருக்கு வழிபாடு செய்தார். அன்றிலிருந்து அந்த கோவில் அந்த முனிவர் பெயரால் ஸ்ரீ பகவத் விநாயகர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
இங்கே விநாயக சதுர்த்தி விழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மாதா மாதம் சுக்லபட்ச சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி முதலிய பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பலனடைகிறார்கள்.