பொய் உரைத்த சாபம் போக்கும் திருக்குளம்பியநாதர்!

பொய் உரைத்த சாபம் போக்கும் திருக்குளம்பியநாதர்!

நாகை மாவட்டம், பாலையூர் அருகே அமைந்திருக்கிறது குளம்பியநாதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோகணேஸ்வர் ஆலயம். இந்தத் தலத்தில் அம்பிகை வடிவுடை நாயகி எனும் பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தல கோயிலில் சிவபெருமான் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியிருக்கிறார். சிவபெருமானை அம்பிகை தனது சாப நிவர்த்திக்காகப் பசு உருவில் பூஜித்த அற்புதத் திருத்தலம் இது. பசு பூஜித்தபோது ஏற்பட்ட குளம்புச் சுவட்டை லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம். அதனாலேயே இத்தல ஈசனுக்கு குளம்பியநாதர் என்னும் திருநாமம் ஏற்பட்டதாக வரலாறு.

காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தத் தலம், அப்பர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றதாகும். படைப்புக் கடவுள் பிரம்மா, வித்யாதரன் ஆகியோர் வழிபட்ட சிறப்பு மிக்கது. அகத்தியர், போகர் முதலான சித்தர்கள் அரூப வடிவில் இன்றும் மூலவரை வழிபட்டு வருவதாக ஐதீகம். தல விருட்சமாக மல்லிகையும் வில்வமும் விளங்குகின்றன.

ஈசனின் முடி மற்றும் அடியைத் தேடிச் சென்றனர் பிரம்மாவும் விஷ்ணுவும். இதில் சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மன் பொய் சொன்னதால் உண்டான சாபத்தைப் போக்க தவமிருந்து வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது எனக் கூறப்படுகிறது. ஆகவேதான், இத்தல குளம்பியநாதரை தரிசித்தால் பொய் சொன்னதால் ஏற்பட்ட மனத்துயர்கள் நீங்கும் என்று கூறுகிறார்கள் பக்தர்கள். ஆலயத்துக்கு எதிரே உள்ள திருக்குளம் பிரம்மாவால் உருவாக்கப்பட்டது என்கிறது தல புராணம். இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் யாவும் விலகியோடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒருமுறை திருக்குளம்பியநாதரை வழிபட்டால் போதும், இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் யாவும் விலகியோடும். இங்கு வழிபட்டால் பசு வளம் பெருகுவதோடு, வீட்டில் வசிக்கும் பசுக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நொடிகள் யாவும் தீரும் என்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வரும் வ்யதீபாத தினத்தன்று இத்தலத்து மூலவரை தரிசித்து வழிபாடு செய்தால், சகல பித்ரு தோஷங்களும் நீங்கப் பெற்று, அனைத்து நலன்களும் ஏற்படும். பாவங்களைப் போக்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இது திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com