சீர்காழியில் நாளை ஸ்ரீ சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்!

சீர்காழியில் நாளை  ஸ்ரீ சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி சீர்காழியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகம் காண வரவிருப்பதால் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டை நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

நாளை நடைபெறவுள்ள நிகழ்வை முன்னிட்டு மேற்கு கோபுரவாயில் நந்தவனத் தோட்டத்தில் பிரம்மாண்ட யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்கும் பணிக்காக தோண்டும்போதுதான் சென்ற மாதம் 22 சோழர் கால சிலைகளும் தேவார திருமுறைகள் எழுதப்பட்ட செப்புப் பட்டயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

சென்ற வாரம், 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், கோபுர வாசல் திறக்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் தலைமையில் பக்தர்கள் கோயிலுக்குள் சென்றார்கள்.

சீர்காழி ஸ்ரீசட்டைநாதர் கோயில் வளாகத்தில் உள்ள பரிவார கோயில்களான ஆபத்து காத்த விநாயகர், சம்கார வேலவர், அஷ்ட பைரவர், தேவேந்திர லிங்கம் உள்ளிட்ட கோயில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமை ஆதீனம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

நாளை நடைபெறும் விழாவில் ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர்கள் மற்றும் புனித நீரை ஹெலிகாப்டம் மூலமாக தெளிக்க எற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சீர்காழியை அடுத்த தென்பாதியில் உள்ள இமயவரம்பன் கார்டனில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பழனி கோயில் குடமுழுக்கின் போது ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடமுழுக்கை ஒட்டி பிரம்மாண்ட யாகசாலை பந்தலில், 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எட்டு கால யாகசாலை பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. 120 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமான அளவில் யாகசாலையின் முகப்பில் கயிலாய காட்சி செட் அமைக்கப்பட்டுளளது. சிவன் பார்வதியுடன் காட்சியளிப்பதும் இன்னொரு புறம்

கங்கை நீர் வழிந்து ஓடுவது போலவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் சுற்றுச்சுவர்களில் வண்ண மின் விளக்குகளும் மற்றும் தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, இசைக்கச்சேரி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com