

தமிழ்நாட்டில் விஜயநகர பேரரசுக்குப் பின் ஸ்ரீ வராகர் வழிபாடும், ஸ்ரீ வராகி வழிபாடும் பிரபலமடைந்தது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஸ்ரீ வராகி (Sri Varahi Devi) வழிபாடு இருந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த வராகி தேவியின் அவதாரம் குறித்து இப்பதிவில் காண்போம்.
முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்து வந்தான். அந்த கொடிய அசுரனின் தோளிலிருந்து விசுக்ரன் என்பவன் தோன்றி கடும் தவம் இருந்து, அதிசய வரத்தினைப் பெற்றான். ஒரு தாயின் வயிற்றில் பிறக்காத பன்றி முகம் கொண்ட பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் பெற்றான்.
தாயின் வயிற்றில் பிறக்காமல் பெண் உருவாக முடியாது எனவும், அழகை விரும்பும் எந்த பெண்ணும் பன்றி முகத்துடன் தோன்ற மாட்டாள் என்பதும் அவனது நம்பிக்கையாக இருந்ததால் இந்த வரத்தினை பெற்றான். மேலும் தனக்கு நிச்சயம் மரணம் ஏற்படாது என்பதும் அவனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
இதனால் விசுக்ரன் தேவர்களை எல்லாம் அச்சுறுத்தியும், துன்புறுத்தியும் அழித்து வந்ததால் அவனது தொல்லைகளை தாங்க முடியாமல் தேவர்கள் அவனிடம் இருந்து தப்பிக்க பெரிய யாகம் ஒன்று வளர்த்தனர். தேவர்கள் தங்களுடைய கை, கால்களை யாகத்தீயில் வெட்டிப்போட்டு லலிதாம்பிகையிடம் வரத்திற்காக வேண்டி நின்றனர்.
தேவர்களின் அதீத பக்தியை கண்டு மகிழ்ந்த லலிதாம்பிகை யாகத்தில் இருந்து தோன்றி தேவர்களை காப்பதாக அருளினாள். அதோடு ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ வராகியை பன்றி முகத்துடன் தோற்றுவித்து அசுரனை அழித்து தேவர்களை காக்கும் படி கட்டளையிட்டாள்.
பன்றி முகத்துடன் பெண் தோன்ற மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த விசுக்ரன் பன்றி முகத்துடன் தன்னை எதிர்க்க தோன்றிய ஸ்ரீ வராகி தேவியைக் கண்டு அஞ்சினான். ஆனால் அவனுள் இருந்த அசுர குணம் ஸ்ரீவராகியை எதிர்க்கத் தூண்டியது. கோடி சூரியனின் பிரகாசத்தை உடைய அவனது தந்தையான பண்டாசுரனுடைய மந்திரிகள் விசுக்ரனுக்கு துணை நின்றனர்.
அவர்களுடைய ஒளிமயமான உடலை கண்ட தேவர்களின் படை நடுங்கி செய்வதறியாது திகைத்தது. அச்சமயத்தில் ஸ்ரீ வராகி ஒரு கணையை ஏவ பண்டாசுரனின் அமைச்சர்களின் கண்கள் குருடாகின. அவர்களுடைய தலைகளை எல்லாம் வெட்டி எடுத்து மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவராகி விசுக்ரனையும் கொன்று தேவர்களை காத்தாள்.
தேவர்களைக் காக்க ஸ்ரீ லலிதாம்பிகையால் தோற்றுவிக்கப்பட்டு அவதாரம் எடுத்த ஸ்ரீ வராகியை பெருமாளுக்கு உகந்த புதன், சனிக்கிழமைகளிலும், ஏகாதசி திரயோதசி திதி நாட்களிலும், திருவோண நட்சத்திர நாளிலும் மனதார வழிபட்டால் பயம் நீங்குவதோடு மனச்சுமையை அகற்றி நம்மைக் காத்து அருள் புரிவாள்.