சுப ஹோரைகளை அறிவோம்!

சுப ஹோரைகளை அறிவோம்!

வீட்டில் நடைபெறும் எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கும் ஜோதிடம் பார்ப்பது பெரும்பாலும் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு செயலாகும். அப்படி முகூர்த்த நாளையும் சுப நேரத்தையும் கணிக்கும் ஜோதிடர், சுப ஹோரையையும் கணித்துத் தருவார். ராகு காலம், எமகண்டம் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கும் ஹோரைகள் பற்றித் தெரிவதில்லை. வாழ்வில் வளம் சேர்க்கும் ஹோரைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்தானே!

‘அஹோராத்ரம்’ என்னும் ஒரு சொல் சமஸ்கிருதத்தில் உண்டு. ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்த ஒரு நாளுக்குத்தான், ‘அஹோராத்ரம்’ என்று பெயர். இந்த சொல்லின் நடுவே அமைந்த, ‘ஹோரா’ அல்லது ‘ஹோரை’ என்னும் இரண்டு எழுத்து, ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக் குறிப்பதாகும். இருபத்தி நான்கு மணி நேரத்தையுடைய ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரமும் ஏதோ ஒரு நவக்கிரகம் இவ்வுலகை ஆதிக்கம் செலுத்துகிறது. உதாரணமாக குரு ஹோரை என்றால், அது வியாழ கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டமாகும். அதைப்போலவே அந்தந்த கிரகங்களின் பெயரால் அந்தந்த கிரக ஹோரைகள் குறிப்பிடப்படுகின்றன.

வக்கிரகங்கள் ஒன்பது. அவற்றில் ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா கிரகங்கள். மீதம் உள்ள ஏழு கிரகங்களையும் முறையே, சூரியன், சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் காலை சூரியன் உதயமாகும் நேரம், அதாவது காலை 6 முதல் கணக்கிட்டால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஹோரையாகும். மேலும், அந்தந்த கிழமைக்குரிய கிரகத்தின் ஹோரையே அந்த நாளில் முதலாவதாக வருவதாகும்.

உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை சூரிய ஹோரை, வெள்ளி காலை 6 முதல் 7 மணி வரை சுக்ர ஹோரை, புதன் காலை 6 முதல் 7 மணி வரை புதன் ஹோரை, திங்கள் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை, சனிக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை சனி ஹோரை, வியாழன் காலை 6 முதல் 7 மணி வரை குரு ஹோரை, செவ்வாய் காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 7 முதல் 8 மணி வரை சுக்ர ஹோரை, அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் ஹோரைகள் எனக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.

னி, எந்தெந்த ஹோரையில் எந்தக் காரியத்தை செய்ய உகந்தது என்பதைப் பார்ப்போம்.

அரசு சம்பந்தப்பட்ட மற்றும் வழக்கு தொடர்பான விஷயங்களை சூரிய ஹோரை நேரத்தில் முயற்சித்தால் காரிய வெற்றி கிடைக்கும். அனைத்து சுப காரியங்களுக்கும் சுக்ர ஹோரை சிறந்தது. வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை, ஆபரணம் போன்றவற்றை இந்த ஹோரை நேரத்தில் வாங்கலாம். வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளையும் புதன் ஹோரையில் செய்யலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான அனைத்து வேலைகளைத் தொடங்குவதற்கு, ஆலோசிப்பதற்கு ஏற்ற நேரம் இது. அதேபோல், சுப காரியங்கள் அனைத்தையும் இந்த ஹோரையில் செய்யலாம். திருமணம், வளைகாப்பு, குழந்தைகளுக்குக் காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது போன்ற செயல்களை சந்திர ஹோரையில் ஆரம்பிப்பது நன்மை தருவதாகும். அனைத்து சுப காரியங்களைச் செய்யவும் இந்த ஹோரை சிறப்பான காலமாகும். கடனை அடைப்பதற்கு ஏற்ற காலமாக சனி ஹோரை கருதப்படுகிறது. உதாரணமாக, சனி ஹோரையில் ஒருவர் கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரையாகவும் சனி ஹோரை கருதப்படுகிறது. அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம் குரு ஹோரையாகும். வியாபாரம், விவசாயம் செய்ய, ஆடை ஆபரணப் பொருட்கள் வாங்க, வீடு, மனை வாங்க, விற்க ஏற்ற காலம் குரு ஹோரை. நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, பாகப்பிரிவினை பிரச்னைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது போன்ற செயல்களைச் செய்ய மிகவும் உகந்த காலம் செவ்வாய் ஹோரையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com