

முன்னொரு காலத்தில், கேரளாவில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. கிராமத்தின் நடுவில் குழந்தை கிருஷ்ணனுக்கு ஒரு கோவில். அந்தக் கோவிலின் சுவாமிக்குச் செய்ய வேண்டிய நித்ய பூஜைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் அந்தக் கோவிலின் மேல்சாந்தி. ஏழை அர்ச்சகரான அவருக்கு ஒரே மகன். ஊரில் விளையாடுவதற்கு அவனது வயது சிறுவர், சிறுமியர் இல்லாத காரணத்தால், தந்தையுடன் கோவிலுக்கு வந்து விடுவான் அந்தச் சிறுவன். தன்னுடன் சிறிது நேரமாவது விளையாடும்படித் தந்தையை நச்சரித்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் தந்தையுடன், கோவிலுக்கு வந்த போது, அப்பாவை சிறிது நேரம் விளையாட வரும்படிக் கேட்டுக் கொண்டான். “இன்று எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கோவிலின் சுவாமி விளக்குகளை சுத்தம் செய்து திரி போட்டு, எண்ணெய் நிரப்ப வேண்டும். அப்போது தான் மாலை பூஜை செய்வதற்கு எல்லாம் தயாராக இருக்கும். நீ கோவிலுக்கு வெளியே சென்று விளையாடிக் கொண்டிரு” என்றார்.
“நீங்கள் எப்போதும் வேலை என்று சொல்கிறீர்கள். இந்த வேலை முடிந்தவுடன் சுவாமிக்கு நைவேத்தியம் பண்ண வேண்டும். பின்பு பூஜை என்று ஏதாவது வேலை இருந்து கொண்டிருக்கும். நீங்களும் என்னோடு விளையாடாவிட்டால் யார் என்னுடன் விளையாடுவார்கள்” என்று சலித்துக் கொண்டான்.