அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் கணம்புல்லர். (சோழ நாட்டில் உள்ள வடவெள்ளாற்றின் தென்கரையில் இவர் ஊர் அமைந்துள்ளது. அவ்வூர் இருக்குவேளூர் என்றும் பேளூர் என்றும் அழைக்கப்படுகிறது.) செங்குந்தர் மரபில் பிறந்தவர் இவர். தனது சிறுவயது முதல் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். இவரது ஒப்பற்ற பணியினால் தனது ஊர் மக்களுக்கு தலைவராய் விளங்கினார். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றுவதைத் தனது தலையாய பணியாகக்கொண்டு தொடர்ந்து விளக்கேற்றி வந்தார். எத்தகைய சூழலிலும் தீபம் ஏற்றும் பணியை மட்டும் விடாது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
இவருடைய அன்பினை சிவபெருமான் சோதிக்க எண்ணினார். வறுமையை உண்டாக்கி திருவிளையாடல் புரிந்தார். நாயனாருக்குச் செல்வம் குறைந்தது, வறுமை வந்தது. அந்த நிலையிலும் திருவிளக்கு ஏற்றும் பணியை மட்டும் தவறாமல் செய்துவந்தார். வறுமையினால் தன்னிடம் உள்ள நிலபுலன்களை விற்று கையில் கிடைத்த பணத்தைக் கொண்டு சிவாலயங்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றத் தொடங்கினார். இறுதியாக தில்லை சிதம்பரம் வந்தடைந்தார். தில்லையம்பதியை விட்டுச் செல்ல மனமில்லாதவரானார். அவ்வூரில் தனியாக வீடு எடுத்து தங்கினார். சிதம்பரத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவாலயத்தில் தினந்தோறும் விளக்கேற்றும் பணியை செய்துவந்தார்.
வீட்டில் இருந்த பொருள்களும் செல்வமும் இவரது விளக்கேற்றும் பணியின் காரணமாக முழுவதுமாக கரைந்துவிட்டன. விற்பதற்குக் மேற்கொண்டு தன்னிடம் பொருள் இல்லை என்ற நிலை ஏற்பட்டபோது நாயனார் பிறரிடம் பொருள் கேட்க விரும்பவில்லை. வீடுகளில் கூரை வேய்வதற்கென கணம் எனும் ஒருவகை புல்லை அரிந்து வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார். கணம் புல்லை விற்று வந்ததால் அவரை எல்லாரும் ‘கணம் புல்லர்’ என அழைத்தனர். ஒரு நாள் அவரது கையில் இருந்த கணம்புல் எதுவும் விற்பனையாகவில்லை. அதனால், அந்தப் புற்களை திரித்து விளக்குகள் ஏற்றினார். ஆனால், புற்களை திரித்து ஏற்றியதால் ஜாமம் வரை நீடித்து எரியும் விளக்குகள் விரைவிலேயே அணையத் தொடங்கின.
சிவபெருமானின் மீது கொண்ட பக்தியால் கணம்புல்ல நாயனார் விளக்குகள் அணைந்து விடக் கூடாதே என்ற பதற்றத்தால், சற்றும் யோசிக்காமல், தனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு திரியாக்கி விளக்கு ஏற்றினார். திருப்புலீச்சரத்து சிவபெருமான் அதற்குமேல் அவரை சோதிக்க விரும்பாதவராய் ரிஷப வாகனத்தில் பார்வதியோடு தரிசனம் தந்தார். அளவற்ற மகிழ்ச்சியில் அவர்தம் பாதம் பணிந்த கணம்புல்ல நாயனாருக்கு சிவலோகப் பதவி கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமா?