உலகிலேயே உயரமான சிவபெருமான் ஆலயம்!

உலகிலேயே உயரமான சிவபெருமான் ஆலயம்!

ரமேஸ்வரன் கொலுவிருக்கும் கேதார் திருக்கோயில்கள் ஐந்து. இவற்றில் கேதார்நாத் கோயில் பற்றி அனைவருக்கும் தெரியும். பிற நான்கு கேதார்கள் எவை என்று பலருக்கும் தெரியாது. ஈசனின் உடல் பாகங்கள் ஐந்தாக அவை வர்ணிக்கப்படுகின்றன. உத்தர்காண்ட் மாநிலம், கேதார்நாத் - ஈசனின் உடல், துங்கநாத் - ஈசனின் புஜம், ருத்ரநாத் - ஈசனின் முகம், மத்மஹேஷ்வர் - ஈசனின் தொப்புள், கபிலேஷ்வர் - ஈசனின் தலைமுடி.

குருக்ஷேத்ர யுத்தத்தில் தங்களது சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது வியாச பகவான் அவர்களிடம், ‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுவார்’ எனக் கூறியதாகவும், அதனை ஏற்று பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கு ஒரு கோயிலைக் கட்டினர் எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே உயரமான சிவாலயமாக துங்கநாத் கருதப்படுகிறது. பஞ்ச கேதாரங்களில் அதிக உயரத்தில் அமைந்துள்ள ஆலயமும் இதுதான். மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கர பகவத்பாதாள் அன்னை பார்வதியை அழகிய சடையுடன் கூடிய மலைமகளை,

’சிகரி சிரோமணி துங்க ஹிமாலய

ச்ருங்க நிஜாலய மத்யகதே’

என்று குறிப்பிடுகிறார். அதாவது, ’இமயமலையின் சிகரங்களில் துள்ளி விளையாடுபவள்’ என்று குறிப்பிடுகின்றார். துங்கம் என்றால் சிகரம் என்றும் கரம் என்றும் பொருள்படும். இங்கிருந்துதான் ஆகாஷ்காமினி நதி உருவாகிப் பாய்கின்றாள். சந்திரசிலா பனி சிகரத்தின் அடிவாரத்தில் சுமார் 3,680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சந்திர சிலாவில்தான் ஸ்ரீராமபிரான் தவம் செய்தார் என்று கூறப்படுகின்றது.

பஞ்சபாண்டவர்களில் அர்ச்சுனன் இக்கோயிலைக் கட்டி சிவபெருமானை வழிபட்டான் என்பது ஐதீகம். துங்கநாத் ஆலயத்தில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாக இடப்பக்கம் சற்று சாய்ந்தவாறு காட்சி தருகின்றார். இத்தலத்தில் ஐயனின் பாஹூ, அதாவது தோள்(புஜங்கள்- கரம்) வெளிப்பட்டன. இங்குள்ள பிரதான சன்னிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகின்றார். அஷ்ட உலோகத்தால் ஆன வியாசர் மற்றும் கால பைரவரின் சிலைகள் கோயிலில் உள்ளன. இந்த ஆலயத்தில் மலைமகள் பார்வதிக்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது. இங்குதான் ராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்ற கேதாரங்களை ஒப்பிடுகையில் துங்கநாத்தை அடைய 5 கி.மீ. தொலைவுதான் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல இடங்களில் பாதை செங்குத்தாக உள்ளது. வழி முழுவதும் பசுமையான ஆல்பைன் மர காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ரோடன்டென் (rhodenton) எனப்படும் அழகிய மலர் புதர்களும் மற்றும் இமயமலைக்கே உரிய பல அரிய மலர்களும், நீர் வீழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த மலை மேலே ஏற சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஆகும்.

ஆதிசங்கரர் 8ம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற கேதார் கோயில்களில், தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள். ஆனால், துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள். குளிர்காலம் வந்தால் இங்குள்ள உத்ஸவரும், அர்ச்சகரும் 18 கி.மீ. தொலைவில் உள்ள முக்திநாத்துக்கு வந்து விடுவர்.

கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தா தேவி, நீலகாந்த், கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைக் தரிசிக்கலாம். தரிசனம் செய்ய ஏற்ற காலம் மே மாதம் முதல் அக்டோபர் முடிய!

அமைவிடம்: கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் பாதையில் ஊக்கிமட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், சோப்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் துங்கநாத் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com