ஈசனின் சங்கு, சக்கரத்தை வரமாகப் பெற்ற திருமால்!

ஈசனின் சங்கு, சக்கரத்தை வரமாகப் பெற்ற திருமால்!

ங்கு, சக்கரம் பார்த்தவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காக்கும் கடவுள் திருமால்தானே. ஆனால், இந்த சங்கு, சக்கரத்தை திருமாலுக்கு அருளியது சிவபெருமான் என்பது பலருக்கும் தெரியாது. பரம்பொருளின் ஐம்பெரும் தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச் செய்யும் திருமால், சங்கு சக்கரம் இரண்டையும் முறையாக சிவ பூஜை செய்து அதனை ஈசனிடமிருந்து பெற்றார் என்கிறது புராண வரலாறு.

சங்கு பெற்ற கதை: அமுதம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து வெளிப்பட்ட பல தெய்வீகப் பொருட்களில் ஒன்று சங்கு. இது, ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், ‘பாஞ்சஜன்யம்’ எனப் பெயர் பெற்றது. காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமானின் திருக்கரத்தில் விளங்கிய இந்தச் சங்கினைப் பெறுவதற்கு திருமால் விரும்பினார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூஜை செய்தார்.

திருமாலின் பூஜையில் மகிழ்ந்த ஈசன், அந்த தெய்வீகச் சங்கினை திருமாலுக்கு அருளிச் செய்தார். சிவ பூஜை செய்து திருமால் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச்சங்கமங்கை (திருச்சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்கு சங்கினை அருளி திருச்சங்கமங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

சக்கரம் பெற்ற கதை: சலந்தரன் என்னும் அசுரன் தனது தவ வலிமையால் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்கா தேவி. இதனால், அவனது ஆணவத்துக்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓட ஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி அமைத்தான்.

பிரம்ம தேவனை ஒருமுறை சிறைப்பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அதையடுத்து, சலந்தரன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதேநேரம், சலந்தரனைக் கொல்லவும் திருமாலால் முடியவில்லை. அந்தளவுக்கு அவனது தவ பலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால்தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கயிலாயம் சென்றான்.

அங்கே சிவபெருமான் ஒரு முதியவர் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், “சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கயிலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன்” என்றான்.

சிவன் அவனிடம், “நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி” என்றார்.

“தாராளமாக! தேர்வைத் துவக்கலாம்” என்றான் சலந்தரன்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டு, “இந்த வட்டத்தைத் தூக்கு பார்க்கலாம்” என்றார்.

சலந்தரன் கலங்கவில்லை. ‘இதென்ன பிரமாதம்’ என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்தச் சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்த திருமால், சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். ‘பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால் சக்கரம் கிடைக்கும்’ என்றும் சிவன் கூறினார்.

தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள் பூஜையில் ஒரு தாமரைப் பூ குறைந்தது. உடனே திருமால் சற்றும் யோசிக்காமல் தனது கண்ணையே மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் சமர்ப்பித்தார்.

திருமாலின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தை திருமாலுக்குப் வரமாக அளிச்செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com