
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. மாணிக்கவாசகர் இங்குதான் திருவாசகம் இயற்றினார். ஏறத்தாழ 1100 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது.
புராணப் பெயர் சதுர்வேதி மங்கலம், சிவபுரம்.
ஈசனின் திருநாமம் ஆத்மநாதர்.
அம்பிகை யோகாம்பாள்.
தல விருட்சம் குருந்த மரம்.
எங்கும் எதிலும் வித்தியாசம்:
உருவம் இல்லை, கொடிமரம் இல்லை, பலிபீடமும் இல்லை, நந்தியோ இல்லவே இல்லை. சுவாமி, அம்பாளுக்கு உருவம் கிடையாது. லிங்கம் கிடையாது. அடிப்பகுதியான ஆவுடை மட்டுமே உண்டு. அம்பாளுக்கு திருப்பாதங்கள் மட்டுமே உண்டு. நவக்கிரக சந்நிதி இல்லை. ஆனால் நவக்கிரக தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரதோஷம் நடைபெறாத சிவஸ்தலம்.
இன்னும் சொல்லப்போனால் மற்ற கோவில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் ஜோதியிலே கலந்துள்ளார் என்பதால் தீபத்தை தொட்டு வணங்க அனுமதியும் இல்லை.
குருந்தமரத்தை ஈசனாகக் கருதுவதால் கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறார். அதன் மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆத்மாக்களை காத்தருளுபவர் என்பதால் சுவாமிக்கு 'ஆத்மநாதர்' என்று பெயர். ஆறு கால பூஜையின் பொழுதும் இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.
கற்சங்கிலி:
மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன கற்சங்கிலி 10 -15 வளையங்கள் கொண்டு ஒரே கல்லினால் செதுக்கப்பட்டு உயரத்தில் பொருத்தி தொங்க விடப்பட்டுள்ளது. சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
தல சிறப்பு:
தியாகராஜர் மண்டபத்தில் உள்ள கல் சங்கிலி, பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சப்தஸ்வர தூண்கள் மற்றும் பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில் ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இவை இக்கோவிலின் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மாணிக்கவாசகருக்கு சிவனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இங்கு வந்து வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், சிறந்த ஞானமும் பெற்று திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
5) ஆவி பறக்க நைவேத்தியம்:
புழுங்கல் அரிசி சாதமும், பாகற்காய் கறியும், கீரையும் என வித்தியாசமான நைவேத்தியம். மூலஸ்தானத்தில் நைவேத்தியம் செய்ய அமுது மண்டபத்தில் 'படைகல்' என்கின்ற திட்டுக்கல் உள்ளது. இது 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். ஆறு கால பூஜைகளுக்கும் உரிய அமுதை வடித்து படைத்து ஆவி பறக்க நிவேதனம் செய்யப்படுகிறது.
எல்லா கோவில்களிலும் பச்சரிசியில் தான் அமுது படைத்து இறைவனுக்கு படைக்கப்படும். ஆனால் இங்கு 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியில் தான் அமுது படைக்கப்படுகிறது. அதுவும் பாகற்காய் கறியும், கீரையும் சேர்த்து படைக்கப்படும் ஒரே கோவில் இதுதான். அத்துடன் 3ஆம் கால பூஜையின் போது அதிரசம், அப்பம், வடை, தேன்குழல், தோசை, பாயாசம் போன்றவற்றையும் நிவேதனம் செய்கிறார்கள்.
திருவிழாக்கள்:
மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி தான் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. திருவிழாக் காலங்களில் ரிஷபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார். ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை இரண்டும் பத்து நாட்கள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.